Saturday, January 26, 2019

இத்தாலியும் தமிழும்

நான் தொடங்க நினைத்திருப்பது தமிழுக்கும் இத்தாலிக்கும் உள்ள மொழி தொடர்பு பத்தியே.
மொதல்ல ஒரு வார்த்தை வேதோவா(Vedova) நம்மூர் விதவை. இது நம்ம தமிழ் மாதிரி இருக்குதேன்னு பார்த்தேன். அப்படி ஒவ்வொரு வார்த்தையா தேடி ஏறக்குறைய 300 வார்த்தைகள் தமிழோடு தொடர்புடைய வார்த்தைகளை தேட முடிஞ்சது. வந்த வேலைய தவிர இந்த வேலைதான் முழு மூச்சா போனது.  
எல்லாத்தையும் ஒரே மூச்சில சொல்லல, பயப்பட வேண்டாம். மெதுவாவே பயணம் செய்வோம்.
மொதல்ல இத்தாலி ங்கற நாட்டு பேரே தமிழ் பெயர்.
1. இத்தாலியை அவர்கள் இத்தாலியா  என்றே அழைக்கிறார்கள்.
இதற்கு என்னடா அர்த்தம் என்று கூகிளில் தேடினேன். இத்தாலியாவின் மூலச்  சொல் கிரேக்கத்திலிருந்து வந்தது என்றார்கள். அந்த கிரேக்கச்சொல் இத்தேல்லோஸ் (itellos). இந்த இதல்லோஸ் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது என்று தேடிய பொது அது ஒரு இலத்தின் வார்த்தை மூலம். அந்த வார்த்தை விதெல்லோஸ். இலத்தினில் விதெல்லோஸ் என்றால் இளங்கன்று என்று போட்டிருந்தார்கள். இத்தாலிய மொழியிலும் வித்தெல்லொ (Vitello) அப்படின்னா இளங்கன்று தான்.  
இப்பதான் முக்கியமான திருப்பம். இந்த வித்தெல்லொ எங்கிருந்து வந்தது என்றால் இந்தோ-ஐரோப்பிய தொடர்பு அ கிழக்கத்திய மூலச்சொல் என்பதோடு நிறுத்திக்கொள்கிறார்கள். இன்னும் போனால் குட்டு வெளிப்பட்டுவிடும் அல்லவா. அதாவது அவர்கள் இங்கிருந்து, தென் இந்தியாவிலிருந்து பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் சென்று குடியேறியவர்கள் என்ற உண்மை வெளி வந்துவிடும். ஐரோப்பியர்களுக்கு தாங்கள் மேன்மையானவர்கள்; தங்களிடமிருந்தே உலகம் அறிவு பெற்றது என்று எண்ணிக்கொண்டிருப்பவர்கள். 
சரி நம்ம விசயத்திற்குள் வருவோம் 
இந்த Vitello எங்கேருந்து வந்ததுன்னு தேடிப் பார்த்தால் நம்மூரு விடலை. விடலை என்றால் இளங்கன்று என்று தமிழ் அகராதியில் போட்டிருந்தார்கள். நாம சொல்வோம் இல்லையா. விடல பையன் இளங்கன்று பயமறியாதுன்னு. ஆக தொடக்கத்தில் மாடுகள் அதிகமாக இருந்த நாடு இது. மாடுகளின் நாடு. மாடு மேச்ச பசங்கதான் இந்த இத்தாலியர்கள்.
___
உறவுக்கான வார்த்தைகளில்
அடுத்து இத்தாலி மொழியில் உறவுக்கான வார்த்தைகளில் தமிழோடு தொடர்புகொண்ட ஒரு சில வார்த்தைகளை தேடுவோம்.2.          இத்தாலிய  உறவுகள் பெயரில் தமிழ்
1. Genitori- பெற்றோர்-ஜெனித்தல், சனித்தல், சனனம், பிறப்புக்கு காரணமானவர்கள்.
2. Vedova-விதவை. (வேதொவா) அப்படியே உள்ளது. தமிழில் பெண்ணுக்கு மட்டுமே இந்தப்பெயர். ஆணுக்கு பயன்படுத்துவதில்லை. ஆனால் இத்தாலியர்கள் சமத்துவமாக பயன்படுத்துகிறார்கள். ஆணுக்கு vedovo, பெண்ணுக்கு vedova.
3. Papa-அப்பா
4. Mamma-அம்மா
(அம்மா என்ற சொல் உலகளவில் 48 மொழிகளிலும், அப்பா என்ற சொல் 23 மொழிகளிலும் பயன்படுத்தப்படுகிறது என்கிறார், மொழியியல் அறிஞர் தேவநேயப்பாவாணர். ஆக உலக மொழிகளுக்கெல்லாம் அப்பனும் ஆத்தாவும் தமிழே)
5. Juvenile-யுவன்,  யுவதி  
6. Marito-மரித்தோ  (கணவன் )
7. Moglie-மோளியே (மனைவி)
கணவன் மனைவிக்கான இத்தாலிய வார்த்தை. Marito-Moglie. நம்மூரில் பல வார்த்தைகள். கணவன் மனைவி, புருஷன் பொண்டாட்டி, துணைவி, இணைவி (உபயதாரர் ஆரூரார் ?) இதுல கணவன் இறந்தால் மனைவியை சில வார்த்தைகளில் அழைப்பார்கள். ஒன்னு விதவை. இன்னொன்னு மூளி.
கணவன் மரித்தால் மனைவி மூளி.
கணவன் - மரித்தோ-Marito மனைவி-மோளியே - Moglie.
(தமிழ்நாட்டுல ஆத்துல புது பெருக்கு வந்தால் அது வெள்ளம் ஆனா சேர (கேரள)நாட்டுல அந்த வார்த்தை பொதுவாக தண்ணியையே மட்டுமே குறிக்க பயன்படுது.) இங்கே தனிச்சொல்லாக இருப்பது அங்கே பொது சொல்லாக மாறுகிறது.
அது போல கணவன் மனைவி உறவு முறைக்கான வார்த்தைகளில் மரித்த கணவன் மூளி மனைவி உறவு வார்த்தை, பல ஆயிரம் ஆண்டு உருமாற்றத்தில் ஒரு குறிப்பிட்ட உறவுச்சொல்லே பொதுச்சொல்லாகிவிட்டது.
​சேர நாடு பற்றி பேசுவதால் ஒரு சின்ன இடைச்செருகல். நாம் பயன்படுத்தும் சோழ, பாண்டிய, சேர நாடுகள் என்ற வார்த்தைகள் உண்மையில் வேறு மூலச்சொல்லொடு தொடர்பு கொண்டவை.
பாண்டிய நாடு உண்மையில் பண்டைய நாடு. கடல் கடந்து வந்தவர்கள் முதலில் குடியேறிய பகுதி. ஆகவே பண்டைய நாடு, மருவி பாண்டிய நாடாகிவிட்டது.
சோழ நாடு என்பதும் உண்மையில் சோதிய நாடு. சோதியான சூரியன் முதலில் உதிக்கும் பகுதி என்பதால் (Japan - Nippon போல)​
​சோழர் கொடியும் முதலில் சூரியக் கொடியாக, சூரியனைக்குறிக்கும் ​​ காளை மாட்டு கொடியாகத்தான் இருந்தது. அதனால்தான் சிவக் கோயில்களில் எல்லாம் மத்தியிலும் சுற்றிலும் இருப்பது காளை. இது தமிழர்களின் வானவியல் அறிவின் அடிப்படையில் Taurus (தார்க்குச்சி என்பது வண்டி காளைக்கான குச்சி. இதைப்பற்றி பின்னர் விளக்கமாக கூறுகிறேன்)என்ற நட்சத்திரக்கூட்டத்துக்கருகில் உள்ள சிவந்த நட்சத்திரம் தான் இது.
இன்றும் கூட சோழ மண்டல கடற்கரை கொண்டிருக்கும் ஆந்திராவின் கொடியில் இருப்பது சூரியன்தான்.
சோழ மண்டலக்கடற்கரை ஆங்கிலேயர்களின் வாயில் Coromandel கடற்கரை ஆகி (நம்மையெல்லாம் mental ஆக்கிவிட்டான் ) இன்னும் அதையே பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் Coromandel Express, Coromandel Cement என்று. ஆங்கிலேயனை விட்டாலும் நாம ஆங்கில அடிமைத்தனத்தை விட மாட்டேங்குறோம்.
கொஞ்சம் திசை மாறிப் போனதற்கு மன்னிக்கவும்.  மீண்டும் வருவோம்
8. Madonna, donna-மாது
மாது என்பது பெரிய பெண்ணைக்குறிக்கும். மாது மதோன்னா என்று ஆகி முதல் எழுத்து மறைய வெறும் தோன்னா donna என்பதோடு நின்று விட்டது.
9. Gente-சனம்
10. Vita-வித்து, விதை வித்யாலயா. உயிருக்கான தொடக்கம், வித்து, வித்யாலயா- தொடக்க அறிவு  ஆலயம். வேதங்கள்-தொடக்கம் பற்றி பேசும் நூல், உயிர்களின் விதை அறிவின் விதை அனைத்தின் துவக்கம்.
11. Filio-பாலகன்
12. Cognato-கொழுந்தன், நாத்தனார் நாற்று, உடன்பிறப்பு.
ஒரே செடியில் முதற் கொழுந்திற்கு அடுத்து, இரண்டாவது கொழுந்து வருவது போல கணவனோடு உடன் பிறந்த சகோதரக்கொழுந்து, கொழுந்தன் ஆகிறது. இத்தாலியில் cognato அ cognata. Cog-nato உடன் பிறந்தவர்.
13. Zio-சீயா- மாமா 
எங்கள் ஊரில் (மதுரைக்கருகில்) மாமாவை சீயா என்றுதான் அழைப்பார்கள். என் அப்பா அவரது மாமாவை அவ்வாறு தான் அழைப்பார். இப்பதான் எல்லா உறவு வார்த்தைகளும் மறைந்துகொண்டே போகிறதே. எல்லாம் ஆண்ட்டி அங்க்கிள் தான். நம்ம நடிகர் விக்ரமுக்கான அடைமொழி பெயர்கூட சீயான் கூட மாமா என்ற அர்த்தம் தான் தரும்.
14. Nepoti- நெபொத்தி- பேரன், பேத்தி
பேரன் என்றால் தாத்தாவின் பெயரை ஏற்பவன், பெயரன் என்றே பொருள். கிராமங்களில் இன்னும் இந்த நடைமுறை இருப்பது நம்மில் பலருக்கு தெரியும். அதே போல பெண் குழந்தை என்றால் பாட்டி பெயர் அ தாத்தாவின் பெண்பால் பெயரினை வைப்பது வழக்கம்.
இத்தாலியிலும் இதே நடைமுறை. nepoti- Ne - Poti நாமம் பெயர்த்தி நெபொத்தி nepoti.​
15. Nato-நாதி, பிறப்பு 
16. Natale- நத்தார்,  கிறிஸ்துமஸ்  
நாதி அற்றவன் அ அநாதை என்றால் பெற்றோர் அற்றவன், யாருமற்றவன், பிறப்புக்கான காரணங்கள் தெரியாதவன் என்பது நமக்கு தெரியும். இறைவனும் கூட அநாதியானவன் என்று அழைக்கபடுகிறார். அதாவது பிறப்பு, இறப்பு அற்றவர். நாதி-பிறப்பு Nato, Native, Nativity. நாதி, நத்தார் பெருவிழா, Natale.
___________
உடல் உறுப்புகளுக்கான வார்த்தைகளில்
3. உடல் உறுப்புகள்: இத்தாலியும் தமிழும்
1. Naso (நாசோ) - நாசி, மூக்கு 
2. Gola (கோலா) - கழுத்து
3. Dente(தென்தே)-தந்தம், பல். யானையின் பல்லை மட்டும் தந்தம் என்கிறோம். இத்தாலியர்கள் இந்த யானையின் பல்லை பொதுவான பெயராக்கி பல்லுக்கு பயன்படுத்துகின்றனர்.
4. Tosse (தோசே)-சலதோசம். இத்தாலியர்கள் இருமலுக்கு இந்த வார்த்தையை பயன்படுத்துகின்றனர்.
5. Vegliare (வேழியாரே )- விழித்தல்
6. Capo (காப்போ) - தலைவன் என்ற அர்த்தத்தில் பயன்படுத்துகின்றனர். கபாலம், தலை. தலைமையான பல அர்த்தங்களுக்கு இவ்வார்த்தை பயன்படுகிறது. நாமும் தலையை  அடிப்படையாக வைத்தே முதன்மையை சொல்கிறோம் இல்லையா. தலை-வர், தலை-ச்சன்பிள்ளை, தலை-நகரம், தலை-மை தபால் நிலையம் என்று.  கேப்டன் (Captain) என்ற ஆங்கில வார்த்தையும் கூட இப்படித்தான். ஆங்கிலத்திற்கு போனால் எக்கச்சக்க வார்த்தை வரும். இப்போ வேணாம். இத்தாலிக்கே வருவோம்.
Capo-linea(காப்போ-லீனையா) - இதன் பொருள் பேருந்து நிலையம். அதாவது எல்லா வழித்தடங்களுக்கும் தலையாக இருக்கும் நிலையம்.
Capo-d'anno (காப்போதான்னோ) - வருடத்தின் தலைநாள். வருடத்தின் முதல் நாள். வருடபிறப்பு 
capo-cuoco (காப்போகுவோகோ) - தலைமை சமையல்காரர், headcook 
Capo-luogo (காப்போலுவோகோ) - தலைமையிடம்  
ஒரு சின்ன இடைச்செருகல்: புத்த மதத் தலைவர் தலாய் லாமா என்பதற்கு பொருள் தலைமை குரு, தலைமை ஆசான் என்பதே. தலை-லாமா 
7. Capelli (கப்பெல்லி) - capo - pelli கபால முடி. பீலி என்றால் தமிழில் முடி என்று பொருள். ( பீலி பீலிபெய் சாகாடும் அச்சிறு அப்பண்டம் சால மிகுத்து பெயின் ) இதன் பொருள்: எடை குறைந்த மயில் இறகே ஆனாலும் அதன் எண்ணிக்கை அதிகம் எனில் வண்டி குடை சாயும்.
8. Occhio (ஓக்கியோ)-கண், அக்கம் என்றால் கண் என்பது பொருள். சந்தேகம் உள்ளவர்கள் தேடிப்பார்க்கலாம். http://ta.wiktionary.org/wiki/ (அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா - சிப்பிக்குள் முத்து படப்பாடல்.)
9. Sangue (சாங்குவெ)-செங்குருதி, இரத்தம்
10. Cuor (குஓர்) - இருதயம், குருதி, செங்குருதி அனுப்பும் இடம் 
11. Muorire, Morto (மொறீரே, மோர்த்தோ )- மரித்தல், மரித்தவர், அமரர்
12. Nascere (நாசெறே) Nato -நாதி, பிறப்பு
13. Mano (மானோ)-மணிக்கட்டு, கை
14. Collana-கழுத்துநகை, நாம் கொல்லன் என்று நகை செய்பவரை அழைக்கிறோம். கொல்லனா என்றால் இத்தாலியில் கழுத்து நகை.
15. Voce (ஓச்சே)- ஓசை
16. Pedonale (பெதோநாலே) - பாதசாரி ஆங்கிலத்தில் pedal, pedestrian எல்லாம் அடிப்படையில் பாதத்திலிருந்தே.
17. Unghia (உன்கியா)- உகிர் உதிர்த்தல் நகம்
18. Calcio- கால்பந்து விளையாட்டு . காலை பயன்படுத்தும் பல விசயங்களுக்கு கால் என்றே சொல்கிறார்கள். எடுத்துக்காட்டாக 
calpestare (கால்பெஸ்தாரே)- கால்பதித்தல் 
calzone (கால்சொனே) - கால் சட்டை, trouser.
calza (கால்சா) - சாக்ஸ், காலுறை, கால்மேசு
calcagno (கால்காங்னொ ) - கணுக்கால் 
calzalaio (கால்சலையொ) - பெரிய ஷூ, பெரிய பாதணி
______
விலங்கு, பறவை, தாவரப் பெயர்களில்
4. விலங்கு, பறவை, தாவரம்
1. Animalia  (அனிமாலி)- விலங்குகள்  
தமிழில்  ஆத்மா ஆன்மா என்பதன் மூலச்சொல் அகத்துமம். மனிதன் 
தனது பகுத்தறிவைப் பயன்படுத்தி, ஆராய்ந்து முடிவெடுப்பவன். 
ஆதலால் ஆறாம் அறிவை பயன்படுத்தி சீர்தூக்கி மெய்ப்பொருள் 
காண்பவன் அகத்துமம், ஆன்மா உள்ளவன். இவை இல்லாதவை 
அகத்துமம் இல்லாதவை, ஆன்மா இல்லாதவை எனப்படும். 
ஆன்மா இல்லாத, ஆன்மா - இலி, அனிமாலி (விலங்குகள்).
பிராணிகள் என்பதற்கும் தமிழ் நல்ல வரையறை கொண்டுள்ளது. 
பிராண வாயு சுவாசிக்கும் அத்தனையும் பிராணிகள். அதனால்தான் 
கல்லையும், மரத்தையும் பிராணிகள் என்று சொல்வதில்லை. 
கல் சுவாசிப்பதில்லை. மரம் கார்பண்டைஆக்சைடை சுவாசிக்கிறது 
நமக்கு தெரியும். இந்த கல் அ மரம் போன்று இருப்பவர்கள் அப்பிராணிகள்.
2. Toro (தோரோ) Taurus - தார், காளை
வானியலில் உள்ள 27 நட்சத்திரக்கூட்டங்களில் ஒன்று இந்த taurus நட்சத்திரக்கூட்டம். இது கிரெக்கப்பெயர் என்பார்கள். உண்மையில் சுத்த தமிழ்ப்பெயர். நம்மூரில் காளை மாட்டுக்கு, மாட்டு வண்டிக்கு பயன்படுத்தும் குச்சியை தார்க்குச்சி என்றுதான் சொல்லுவார்கள். தார் என்றால் தமிழில் காளை என்றே பொருள். வட இந்திய நடிகர் ஆமிர்கான் நடிப்பில் வெளிவந்த படம் தாரே ஜமின் பர் (taare jamin par) இதன் அர்த்தம் 'மண்ணில் வந்த நட்சத்திரம்'. இந்த தாரே என்பது இந்த நட்சத்திரக்கூட்டத்தைத்தான் குறிக்கிறது. கிறித்தவர்கள் பாடும் ஒரு பாடலில் தாரகை சூடும் மாமரியே என்று பாடுவார்கள். இந்த தாரகை என்பது இந்த நட்சத்திரக்கூட்டத்தை மாலையாக அணிந்தவளே என்று தான் அர்த்தம்.
3. Gatto (காத்தோ)- பூனை, கொத்தி. கொத்தி என்றால் குருடு என்பது பொருள். பூனைக்கு பகலில் கண் சரியாகத் தெரியாது. ஆகவே தமிழர்கள் அதற்கு வைத்த பெயர் கொத்தி.
4. Gallo (கால்லொ)-கோழி இப்பெயர் அப்படியே வருகிறது. 
5. Pollo (போல்லோ)-புல்லம், பறவை, கோழி
6. Agnello (அங்க்னெல்லொ)- ஆடு, ஆநிரை என்பது ஆட்டைக்குறிக்கும். தமிழ் செய்யுளில் படித்திருப்போம்.
7. Mandria (மந்த்ரியா)- மந்தை
8. Mucca (மூக்கா)- பசு மாடு. நாம் பசுமாட்டை கோ (மாதா) என்று அழைப்போம். இந்த கோ, மூ-கோ, மூ-கா, மூக்கா ஆகிவிட்டது.
9. Mangiare (மஞ்சாரெ) - சாப்பிடுதல், உண்ணுதல், மேய்தல்
10. Vitello - இளங்கன்று இதைப் பற்றி இரண்டாம் கட்டுரையில் எழுதி உள்ளேன், எவ்வாறு இத்தாலி என்றே வார்த்தையே இதிலிருந்து வந்தது என்று.
11. Erba (எர்பா)- அருகு, அருகம்புல் என்ற ஒரு புல் வார்த்தையையே இவர்கள் அனைத்து வகை புல், கீரைகளுக்கு பொது பெயராகப் பயன்படுத்துகிறார்கள்.
12. Serpente (செர்பெந்தெ ) - சர்ப்பம் அப்படியே உள்ளது.
13. Cavalio (கவாலியோ) - குதிரை, காவல் குதிரை. இந்தப்பெயர் அப்படியே பிரெஞ்சு மொழிக்கு செல்லும்போது செவாலியே என மாறுகிறது. நம்மூர் நடிகர் திலகத்துக்கு பட்டம் கொடுத்தாங்கல்ல அதே செவாலியே பெயர்தான். பொருள் குதிரை வீரன் என்பதே.
14. Ali (ஆலி), Uccello (உசெல்லொ) - 
ஆலி என்றால் சிறகு என்று பொருள். 
உசெல்லொ என்றால் பறவை என்று பொருள். 
நம்மூரில் ஆலாய் பறக்கிறான் என்று சொல்வோம் இல்லையா. 
ரெக்கை கட்டிக்கிட்டு பறக்கிறான் என்பதே.
15. Snaka - நாகம். விளக்கம் தேவைப்படாது.
16. Uva (உவா)-என்றால் திராட்சை, uovo (ஓவோ)- என்றால் முட்டை 
என்று பொருள். நம் தமிழில் உவாமதி என்றால் முழு மதி. 
உருவத்தில் கோளமாக, முழு வட்டமாக இருக்கக்கூடிய இவை இரண்டும் 
அதே பெயரில் வருவது பொருத்தமே.
17. Zinzero (ஜிஞ்செரொ) - இஞ்சி
18 . Riso (ரீசோ) - அரிசி. இவை இரண்டிற்கும் விளக்கம் தேவைப்படாது.
19 . Zucchero (சூக்கெரொ)- சர்க்கரை
20 . Albero (ஆல்பெரோ) - மரம். 
நம்மூரில் அகல விரிந்திருக்கும் மரம் ஆல மரம். இந்த ஒரு மரத்தின் 
பெயரையே மரத்திற்கெல்லாம் பொதுப்பெயராக ஆல்பெரொ என்று 
அழைக்கிறார்கள். இது மட்டுமில்லை ஆலமரம் பல 
பறவைகளுக்கும், மனிதர்க்கும் தங்கி ஓய்வெடுக்கும் 
வகையில் இருப்பதைப்போல, பலரும் தங்கும் 
விடுதியை (lodge) albergo (ஆல்பெர்கொ) என்றே அழைப்பது தமிழ் 
இங்கே எந்தளவு ஊடுருவி உள்ளது என்பதையும் ஆராய தூண்டுகிறது.
____________
எண்கள், காலம், கணக்கீடுகளில்
5. கணிதம், எண்கள், காலம்
நம்ம தமிழ் நாட்காட்டியைப் பார்த்தால், (எங்கே கல்யாண பஞ்சாங்கம் பார்க்கத்தான் அதனைப் பயன்படுத்துகிறோம்) குறிப்பாக தின நாட்காட்டியில் கீழ்க்கண்டவாறு கிழமைகளைப் போட்டிருப்பார்கள். பிரதமை, துதியை... என்று. இவை எல்லாம் வடமொழியோ என சந்தேகம் படும்படியாக வார்த்தைகள் இருக்கும். நிச்சயம் இல்லை. சுத்தமான தமிழ் வார்த்தைகள். அவற்றில் சரியாக 14 நாட்களுக்குக் கிழமைகள் போட்டிருப்பார்கள் 1 லிருந்து 14 வரை, அடுத்த நாள் பௌர்ணமி. திரும்ப அந்த 1 லிருந்து 14 கிழமைகள். அடுத்த நாள் அமாவாசை. 
வேறு ஒன்றும் இல்லை. நிலவின் வளர்பிறைக்கு 1லிருந்து 14 வரை, தேய்பிறைக்கு 1 லிருந்து 14 வரை. காரணம் நிலா, மதி யை வைத்தே நாட்கள் கணக்கிடப்பட்டதால் மாதம் என்றே பெயர் பெற்றதை நாம் அறிவோம்.
அந்த கிழமை பெயர்கள் அப்படியே இத்தாலியில். 
இந்த கிழமைகளில் 4 என்ற எண்ணைத்தவிர பிற எண்கள் அப்படியே வருவதைப்பார்க்கலாம்.
1. Primo (பிரிமோ)- பிரதமை
2. Due (துவெ)- துதியை
3. Tre (த்ரே)-திருதியை
4. Quattro (குவாத்ரோ)- சதுர்த்தி
5. Cinque (சின்க்வெ)-பஞ்சமி
6. Sei, sesto (சேய்)-சஷ்டி
7. Sette (செத்தே)- சப்தமி
8. Otto (ஒத்தோ)-அட்டமி
09. Nove (நோவே)-நவமி
10.  Dieci (தியெச்சி )- தசம் (இலத்தீனில் தெச்சம்). கணக்கில் தசமபின்னம்.1/10 
11. Undici (உந்திச்சி)-ஏகாதசி
12. Dodici (தோதிச்சி)-துவாதசி
13. Tredici (திரேதிச்சி)-திரயோதசி
14. Quattordici (குவதோர்திச்சி )-சதுர்த்தசி
இவைகளில் 4, 14 இந்த இரண்டு கிழமைகளில் 4 ஏன் இப்படி வருகிறது என்று இரண்டு, மூணு நாள் யோசித்து பார்த்தேன். தேடியபொழுது அருமையான விளக்கம் கிடைத்தது.
இத்தாலி நாட்டுக்காரரே உதவி செஞ்சார். அவர் கொன்ஸ்தன்சோ ஜோசப் பெஸ்கி என்ற நம்ம வீரமாமுனிவர். இவர் இத்தாலி மிலான் நகரத்துக்கருகில் காஸ்திலியோனே (Castiglione) என்ற நகரத்தில் பிறந்தவர். இந்த நகரை காஸ்திகிலியோன் என்று நாம் தவறாக எழுதுவது இங்கு வந்ததும் தான் தெரிந்தது. இவர் தான் தமிழ் மீது கொண்ட பற்றால், கற்று, தேர்ந்து தமிழில் முதல் முறையாக அகராதியைத் தொகுத்தவர். ஆங்கிலத்தில் நாம் பயன்படுத்தும் 'Thesaurus' போல. சதுர் அகராதி. சதுர் என்றால் நான்கு. சதுரம் என்றால் நான்கு பக்கமும் சம தூரத்தில் இருக்கும் வடிவம். சதூரம் - சதுரம். நான்கு அகராதி. இதில் 1. சொல் அகராதி (சொல்லும் பொருளும்) 2. பெயர் அகராதி (ஒரு சொல் பல பொருள்) 3. தொகை அகராதி (கலைச்சொற்கள்) 4. தொடை அகராதி (எதுகை மோனை) என சதுர அகராதியை 1732 ல் எழுதி முடித்தார். இப்ப நம்ம விசயத்திற்கு வருவோம். இந்த நான்கு என்ற சதுர், ஹிந்தியில் சார் (ஏக், தோ, தீன், சார்) ஆகி சதுர்- சதூர்-chadhoor - cha என்பதை இத்தாலியர்கள் க என்றுதான் உச்சரிப்பார்கள், ஆக சதுர்-சதூர்-கதூர்- ஆகியிருக்கிறது. இது அப்படியே ஆங்கிலத்தில் 'quarter நான்கில் ஒரு பாகம்' என்றாகி விட்டது.
இந்த வகையில் மேலும் சில தகவல்கள் கிடைத்தன. வாகன ஓட்டிக்கு சாரதி என்று தமிழில் பெயர். பார்த்தசாரதி என்ற பெயர் நமக்கு அறிமுகமான பெயர். பார் என்ற உலகுக்கெல்லாம் ஒளி தரும் சூரியனுக்கு தான் அப்பெயர். கதிர்கள் என்ற குதிரைகள் பூட்டிய தேர் சூரியன். இதில் சாரதி என்பது சதுர அ சார் எனும் நான்கு சக்கரங்கள் கொண்ட தேருக்கு அதிபதி என்றே சாரதி பொருள் படுகிறது. இந்த சார்- சதுர்-கதூர்-கார் என்பதும் நான்கு சக்கரங்கள் பூட்டிய வாகனம். German மொழியில் car ஐ (வாகனம்) வாகன் என்றே அழைக்கிறார்கள். Volkswagen (f) வோல்க்ஸ்வாகன் அ மக்கள் வாகனம். நான்கு கரங்கள் கொண்ட இணைப்போடு இருப்பதால் (நான்கு)சதுர்-கரம், சக்கரம் என்று தமிழன் தான் முதன் முதலில் சக்கரத்தையே கண்டுபிடித்திருக்கிறான்.
5. Car-ta (கார்த்தா) - சதுர்த்தாள், நான்கு பக்கங்கள் கொண்ட தாள். 
6. Car-cere (கார்செரெ)- சிறை, நான்குபுற சிறை. 
நான்குக்கான விளக்கம் கொஞ்சம் அதிகம்தான். பொறுமையாய் வாசித்ததற்கு நன்றி.
16. Cento (சென்தோ)-சதம்
17. Novena (நொவெனா)- நவநாள்
18. Ora, Hour (ஓரா)- ஓரை, ஓரை என்றால் நட்சத்திரக்கூட்டம் என்று தமிழில் பொருள். நமது பால்வெளி ( Milky way ) என்ற பேரண்டத்தில் ஒருபகுதியான நமது சூரியக்குடும்பம் இருக்கும் நட்சத்திரக்கூட்டத்திற்குப்பெயர் ஓரியன் (Orion) இதைக்கொண்டே horoscope, hour எல்லாம் உருவானது.
19. Dies,(தீயஸ்) day, date - திதி, தேதி
20. Mese, (மேசெ)Month-மாதம், மதி
21. Anno (ஆன்னோ) - ஆண்டு
22. GiorNALE (ஜோர்நாளே)-நாள்
24. Settimana (செத்திமானா)- சத்தமானம் என்பது தமிழ் வார்த்தைதான். சத்தமானம் என்றால் 7 நாள் வரிசை என்று பொருள். 'சப்த ஸ்வரம்' ன்னு சொல்றோம்ல. அதுவும் 7 சரம், வரிசையைக்குறிக்கிறது. ச, ரி, க, ம, ப, த, நி.
25. Mattina (மத்தீனா)- மத்தியானம் மத்தி அயனம். சூரியனின் பயணத்தில், அயணத்தில், மத்தியில் உள்ள நிலை மத்தியானம். இது தமிழ். விடியல் முதல் மத்தியானம் வரை உள்ள காலப்பகுதியை மத்தீனா என்பது இத்தாலி.
26. Sera (சேரா) - பொழுது சேரும் நேரம், சூரியன் சாயுங்காலம்.
27. Destra (தெஸ்த்ரா)- தெற்கு, தெக்கணம். (Deccan Plateau-தக்கான பீடபூமி, தெற்கு பூமி)
சூரியனுக்கு முன்பாக நின்று கிழக்கு பார்த்து, இரு கைகளையும் விரித்தால் இடது கை வடக்குப்புறமும், வலது கை தெற்கு புறமும் இருக்கும். திசை என்பதற்கு திரை என்றும் வார்த்தை உண்டு என்பது நமக்குத்  தெரியும். திரை கடல் ஓடியும் திரவியம் தேடு. இப்ப இந்த தென் திறம் என்பதுதான் தெஸ்திரம், இத்தாலியில் destra என்றாகி உள்ளது. வலது கை பகுதி வட புறத்திலுள்ள சனி மூலை, சனி திசை, சனி திரம் ஆக sinistra (அடுத்த வார்த்தை) ஆகியிருக்கிறது.
28. Sinistra (சினிஸ்திறா)- சனி, ஈசான மூலை. சனி-திரம்
29. Tele (தெலெ)- தொலைவு, telephone, television எல்லாம் இதன் பொருளில் தான்.
30. Geo- ஜெகம், செகம், சனித்தல், பிறப்பித்தல், உயிர் உருவாகக்கூடிய ஒரே கிரகம் இந்த பூமி என்பதால்.
31. Prima vera(பிறிமா வேரா)- வசந்த காலம், மழை, குளிர் காலம் முடிந்து இலை துளிர்க்கும் காலம். தமிழில் இது வசந்த காலம் என்றாலும் சரியான வார்த்தை பசந்த காலம் என்கிறார் தமிழறிஞர் இராம.கி. எங்கும் பசுமை இருப்பதால் இப்பெயர். prima vera- என்றால் பிரதம வருகை, துளிர்களின் முதல் வருகை தான் prima vera.
32. Secoli (சேக்கோழி)-ஊழி, பன்நெடுங்காலம், பல காலம்
33. Metere(மேதெரே)-மாத்திரை, செய்யுளில் நேர் நேர் புளிமா என்று வெண்பா பற்றி தமிழ் வகுப்புகளில் படித்திருப்போம். அப்போ அளவுகளுக்கு மாத்திரை என்று சொல்லக்கேட்டுருப்போம். அதேதான். அந்த மாத்திரைதான், metere, ஆங்கிலத்தில் meter.
34. Calendario (காலெந்தாறியோ )- கால அந்தம்-ஆதி. காலத்தின் தொடக்க முடிவு.
35. Zodiaco (சோதியாகோ)-ஜாதகம், சோதியம், சோதி (ஜோதி) யாக இருக்கும் பலகோடி நட்சத்திரங்களைப்பற்றிய துறை. நாம்தான் ஜாதகம். ஜோசியம் என்று சொல்லிகொண்டிருக்கிறோம்.
36. Cena (சேனா)- சேனம்,   சேனம் என்றால் உணவு. போசனப்பிரியன்-சாப்பாட்டுராமன், இராபோசனம், இராவுணவு.  
37. Colazione (கொலாட்சியோனே)- காலை சேனம், காலை உணவு.
38. Pranzo (பிரான்சோ)- மதிய உணவு. 
இந்த விளக்கம் எனது தனிப்பட்ட கருத்து. மாற்று விளக்கம் இருந்தால் தெரியப்படுத்தலாம். பொதுவாக தமிழர்கள் தொடக்க காலத்தில் விவசாயிகள். மதிய உணவு சமைக்க நேரம் இருக்காது. ஆகவே முந்தைய நாள் சோறை தண்ணி ஊற்றி பழைய சாதமாக சாப்பிடுவார்கள். அந்த பழஞ்சோறு பிழஞ்சோறு, பிரான்சோறு, பிரான்சோ என ஆகியிருக்கலாம்.
39. Orientale (ஒரியென்தாலே)-Occidentale (ஒக்சிதேந்தாலே)
இந்த oriental என்ற வார்த்தை கிழக்கத்திய என்ற பொருளில் பயன்படுத்துகிறோம். சரிதான். சூரியன் உதிக்கும் பகுதியில் உள்ள நிலங்கள். உதியந்தல். இது ஏறக்குறைய ஜப்பான் முதல் துருக்கி வரை உள்ள பகுதியைக்குறிக்கும். occidental என்றால் மேற்கத்திய என்று அர்த்தப்படுத்துகிறோம். அது சரியல்ல. உண்மையில் சூரியன் உச்சியில் இருக்கும் பகுதி என்றே பொருள்படும். உச்சிதன்தல். அதாவது, ஐரோப்பா, ஆப்பிரிக்கா முழுவதையும் குறிக்கும். அப்ப சூரியன் மறையும் பகுதியில் உள்ள நாடுகளை எப்படி அழைப்பது. எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் தெரியப்படுத்தலாம்.
_____________
6. நிறம்.
1. Nero (நேரோ) - கறுப்பு.
கறுப்புதான்  எனக்கு புடிச்ச கலரு என்ற பாடலில் தமிழர் நிறம் கறுப்பு என்று  வரும். உண்மைதான். 
மனிதர், தெய்வங்கள் அனைத்தும் கறுப்பாக வைத்திருந்தான் தமிழன். கறுப்பை பிடித்திருந்தது தமிழனுக்கு. இப்ப இல்லை. வெள்ளைக்கு தாவி விட்டான். நடிகர், நடிகை முதற்கொண்டு, தெய்வத்தின் நிறம் வரை அனைத்தும் வெள்ளையாக இருக்க வேண்டும். வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்று வடிவேல் சொல்வது வெறும் நகைச்சுவை மட்டும் அல்ல அது சமுதாய உண்மை, கேடு. வெள்ளையாக இருக்கும் எதுவுமே நல்லதில்லை. பசும்பால், உப்பு, சர்க்கரை, வெள்ளை அரிசி, பற்பசை. எல்லாம் இரசாயன நிறமிகளால் நிறம் மாற்றப்படுகிறது வெள்ளையாக. ஐரோப்பாவிலுள்ள வெள்ளையர்களும் வெள்ளைத்தோல் நேரடியாக சூரிய ஒளியால் கதிர்வீச்சு பாதிப்புக்கு உள்ளாவதால் சூரியக்குளியல் செய்கிறார்கள். கறுப்பாக, நோய் எதிர்ப்புத்தன்மை பெற,  d விட்டமின் பெற. நமக்கு அது தேவையே இல்லை. உடம்பெல்லாம் மச்சம், கறுப்பு. சரி.
தமிழில் நிறம் என்றாலே அது கறுப்பைத்தான் குறிக்கும். நம்மூரில் மாப்பிள்ளை மாநிறம் என்றால், அவர் கறுப்பும் இல்லை. சிவப்பும் இல்லை, இரண்டுக்கும் இடைப்பட்ட நிறம் என்று நினைக்கிறோம். உண்மையில்லை. மாநிறம் என்றால் மா கறுப்பு, மிகவும் கறுப்பு என்றுதான் அர்த்தம். இந்த நிறம், கறுப்பு என்ற வார்த்தை தான் (நிறம்-negro-நெகறோ )நீக்ரோ என்றும் ஆனது. அது இத்தாலியில் நேரோ-கறுப்பு என்று ஆகிவிட்டது. நிறம் என்றாலும் நீக்ரோ என்றாலும் நேரோ என்றாலும் அர்த்தம் ஒன்றுதான். கறுப்பு.
2. Giallo (ஜாள்ளோ) - மஞ்சள், மஞ்சள் என்பதில் 'ம' வை மட்டும் எடுத்துவிட்டார்கள். ஞ்சள் -ஞ்சாள் -ஞ்சாள்ளோ. அப்படியே ஆங்கிலத்தில் யள்ளோ (yellow) என்றாகிவிட்டது.
3. Rosso (ரோசோ)- சிவப்பு, சிவப்புக்கு அடிப்படை இரத்தம். இரத்த வண்ணம் என்பது அப்படியே வண்ணத்துக்கானப் பெயராகிவிட்டது. சிவப்பு  வண்ணக் கடல் கூட (ரெட் சீ ) செங்கடல் என்றுதான் அழைக்கப்படுகிறது. முகம் சிவந்து கோபப்படுவதைக்கூட இத்தாலியர்கள் Arrabbiare என்று இரத்த நிறத்தை இணைத்துத்தான் சொல்கிறார்கள். (Arabia) அரபு நாடுகள் கூட செம்மண் பாலைவனமாய் இருப்பதால் தான் அரபு நாடு எனப்பெயர் பெற்றது.
4. Bianco (பியான்கோ)- வெள்ளை. பயத்தால் முகத்தில் இரத்த ஓட்டம் இல்லாது வெளிரிப்போய்விடும். பயங்கொண்ட நிறமாகத்தான் பியான்கோ என்கிறார்கள். ஆனால் எல் என்றால் ஒளி வெள்ளை என்று பொருள். இந்த 'எல்' லிருந்து வரும் சொல் இலவம். இலவம் என்றால் வெள்ளை என்று பொருள். இலவம் பஞ்சு. வெண்பஞ்சு. இத்தாலியர்கள் இந்த எல் அ ஒளி வெண்மையை பல வார்த்தைகளில் பயன்படுத்துகிறார்கள். இலவண்டெரியா-ஆடைகள் வெளுக்கப்படும் இடம். Elettricita - (Elettricity) ஒளி அமைப்பு,(Alpi) ஆல்ப்ஸ் மலை-வெண்பனி மலை. லெபனான் நகரத்தின் பெயர்ப்பொருள் வெண்பனி நகரம் என்பதே.
Rome நகரத்தின் ஊடாக பாயும் நதி டைபர் நதி. இத்தாலி மொழியில் அது தவெரெ (Tavere) என்று அழைக்கப்படுகிறது.Tiberinus silvius என்ற ரோமை நகர மன்னன் அப்போதைய நதியின் பெயரான (albula) அல்புழா என்ற இந்த நதியில் சிறுநீர் கழித்ததால் இந்த நதி அம்மன்னன் பெயரால் பெயர் மாற்றம் பெற்றது? அல்புழா என்பதும், கேரளாவில் உள்ள ஆலப்புழை என்ற நதியின் பெயர் அர்த்தமும் ஒன்றே அது வெண்ணிற நதி என்பதே. அதாவது இந்த நதி அன்றிலிருந்து இன்று வரை வெள்ளம் கரைபுரண்டு ஓடக்கூடியது. புது வெள்ளம் வெண்பழுப்பு நிறத்தோடு அடிக்கடி வருவதால் இப்பெயர் பெற்றது.
______________________
7.1 பொதுவானவை
1. Guerra (குவெர்ரா)- போர்- குரோதம்
2. Aqua (ஆக்குவா)- அக்கம் (தமிழ் வார்த்தைதான்), ஊற்றுநீர்.
3. Latte (லாத்தே)- பால் - பாலாடை என்ற தமிழ் வார்த்தையில் 'பா' என்ற வார்த்தை நீங்கி லாடை, லாதை, லாத்தே ஆகிவிட்டது.
4. Vestiti (வேஸ்திதி)-வேட்டி, வஸ்திரம்
5. Camminare (கம்மினாரே)- நடத்தல்-கம்முதல் என்றால் பதுங்கி நடத்தல்.
6. Tovalia (தொவாலியா)- மேசை விரிப்பு - மடித்துவாலை என்ற தமிழ் வார்த்தையில் 'மடி' யை எடுத்தால் துவாலை.
7. Coppa, cup- கோப்பை
8. Vuoto (வோத்தோ) - வெறுமை - வெற்று
9. Rullo (ருள்ளோ)-உருளை
10. Musica (மூசிகா)- இசை,  - இசைவு, பல ஒலிக்கோர்ப்புகள் மற்றும் இசைக்கருவிகளின் சப்தங்கள் கோர்வையாக, இசைவாக வருவது இசை.
11. Macinare-Masticare (மச்சினாரே)- அரைத்தல், சுழலுதல்- தமிழில் மசி என்றால் அரைத்தல் என பொருள்படும். எனது பாட்டியார் முன்பு என்னிடம் நல்லா மசிச்சு சாப்பிடு என்பார்கள்.  இந்த அரைத்தல் அப்படியே machine என்ற ஆங்கில வார்த்தையாய் எந்திரத்திற்கு எடுத்தாளப்படுகிறது.
12. Alarme (அலார்மே)- ஆங்கில அலாரம் தான். தமிழில் அலறுதல்
13. Scongiurare (ஸ்கொஞ்சுராரெ)-கொஞ்சுதல், கெஞ்சுதல். 
14. Hook- கொக்கி
15. Parola (பரோலா)- வார்த்தை - தமிழில் பரல் என்றால் வரிசை என்று பொருள். எழுத்துக்களின் வரிசை வார்த்தையாகிறது. தமிழிலும் அப்படித்தான், வார்த்தை என்றால் வரிசை என்றுதானே அர்த்தம். வார்க்கப்பட்டது, வரிசைப்பட்டது.
16. Conducente (கொண்டுச்செந்த்தே)- ஓட்டுனர், தமிழில் கொண்டுசெல்பவர்.
17. Caramilla (கரமில்லா)- இனிப்பு, மிட்டாய் - கார-மில்லா- காரம்- இல்லாதது, இனிப்பு.
18. Ciao(ச்சாவோ)- ஆங்கிலத்தில் bye என்று பிரியும் வேளையில் சொல்வதைப்போல் இத்தாலியில் இந்த வார்த்தை. நம் தமிழில்  சாவு என்றால் பிரிவு, மரணம். அவர்கள் பிரியும் வேளையில் அவ்வாறு சொல்கிறார்கள்.
19. Cucina (குச்சினா) - சமையலறை. நம் தமிழில் சமையறைக்கு இன்னொரு பெயர் குசினி. சமையற்காரரை குசினிக்காரர் என்றும் சொல்வார்கள்.
20. Casa (காசா)- வீடு. இந்த வார்த்தைக்கான மூலச்சொல் கண்டுபிடிக்க கொஞ்சம் சிரமப்பட்டேன். கடைசியில தேடிப் பிடிச்சாச்சு. மூலச்சொல் நம் தமிழ் அகம். அகம் என்றால் வீடு. அகம், பொருள், இன்பம், வீடு (இந்த வீடு - இறுதி வீடு பேறு). நம்மூர்ல பிராமணர்கள் தான் இன்னும் இந்த சுத்த தமிழ் வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். ஆத்துல எல்லாரும் சுகமா? என்றால் அகத்தில என்றுதான் அர்த்தம். பேச்சுவழக்கில் சற்று மாறிவிட்டது. தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் அது கூட சொல்வதில்லையே. சரி விசயத்திற்கு வருவோம். இந்த அகம். இந்த அகத்தை அப்படியே ஆங்கிலத்தில் எழுதினால் ahome, a-home. கிரேக்கத்தில் வீட்டிற்கு, அகத்திற்கு பெயர் (அகோஸ்) Oikos. இந்த Oikos ஐ Oi-kos என பிரித்தால் kos (அப்படியே இது ஆங்கிலத்தில் kos-hos-house), கொஞ்சம் மாறி இத்தாலியில் cos, cas, casa என ஆகியிருக்கிறது.
         21. Cipolli (சிப்போள்ளி)- வெங்காயம்- வெங்காயத்திற்கு ஒரு தமிழ் பெயர் உள்ளி. 
நுந்தையை உள்ளிப் பொடிந்தநின் செவ்வி (பொருள்: நினைத்து, புறநானூறு)
22. Panorama (பனோரமா)- ஆங்கிலத்திலும் கூட 'panoramic view' என்ற ஒரு பதம் வரும். பூரணம், முழுமை.
23. Gaso (வாயு, எரிவாயு)-கசிவு, பாறைகளுக்கிடையிலிருந்து வரும் கசிவு.  
24. Covo (கோவோ)- குகை, மகாபலிபுரத்துக்கருகில் ஒரு சுற்றுலா விடுதியின் பெயர் 'Fisherman's cove'.
25. Giolleria (ஜோயல்லேரியா)- ஆங்கிலத்தில் jewellery. தமிழில் சொலித்தல், இதன் மூலச்சொல்லும் சோதி, சூரியன். சோதி போல சொலித்தலால், சுய ஒளித்தலால் இப்பெயர்.
26. Certo (செர்த்தோ)-சரிதான், அர்த்தமே அதுதாங்க. சரிதான் !
27. Coprire (கொப்ரீரெ)- மூடுதல். கொப்பரை
28. Scivolata (ஷிஒலதா)-  ஒலட்டுதல், மிதிவண்டி பழகும்போது ஓட்டத்தெரியாமல் ஆட்டுவொம்ல அதுக்கு பேர்தான் இந்த ஒலட்டுதல்.
29. Matura (மத்துரா)- முத்துதல், பழங்கள் முத்துதலுக்கு பயன்படும் வார்த்தை.
30. Bugia (புஜிஆ)-பொய்
31. Mosso (மோசோ)- கடல் அலைகள் கடுமையாக இருந்தால் அதற்கான வார்த்தை. (ஆங்கிலத்தில் rough sea) மோசம்.
32. Palestra(பாலஸ்திரா)- உடற்பயிற்சிக்களம், பல்வேறு உடற்பயிற்ச்சிக்கருவிகள் உதவியால் பல திறன்கள் கற்கும் இடம்.
33. Evitare (எவிதாரே) -தவிர்த்தல்
34. Ago (அக்கோ)- ஊக்கு, ஊசி
35. Filo (ஃபீலொ)- இழை, நூல்
36. Avvisare (அவ்விசாரெ)- விசாரித்தல்
37. Piove(பியோவே)- மழை, மழை பெய்கை, பொழிகை
38. Balcone(பால்கோனே)- ஆங்கில balcony, தமிழில் பலகணி, பல கண்ணிகள் அ திறப்புகள் உள்ளது.
39. Tour- ஆங்கிலத்திலும் 'tour' தான். தமிழில் தூரம், தொலைவு.
40. Esili(ஏசிலி)-அபலை, ஆதரவற்றவர், நாடற்றவர், அகதி. நல்ல தமிழில் ஏதிலி - ஏதும் இல்லாதவர்.
41. Vento(வெண்தோ)-காற்று. வடக்கிலிருந்து வீசும் காற்று வாடைக்காற்று. தெற்கிலிருந்து வீசும் காற்று தென்றல். வன்மையான வாடைக்காற்று பனி நாடுகளில் அவ்வாறே அழைக்கப்படுகிறது. மின்விசிறிகூட ventilatore (வெந்திலாதோரே) காற்றை அலைபாயச்செய்தல் என்ற அர்த்தத்திலே வருகிறது. ஆங்கிலத்தில் கூட ventilator என்றால் காற்றை வெளியேற்றுதல் என்று நமக்குத் தெரியும் 
42. Accuragione (அக்குறாஜியோனே)-குறிபார்த்தல்
43. Sorgere(சோர்ஜெரெ)- உதித்தல், சூரிய உதயம், சூரியனிலிருந்து மூலச்சொல்லை எடுத்து அதன் செயலுக்கு இவ்வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர்.
44. Tunica (தூணிகா)-துணி
45. Phallic-பாலியல், பலான
46. Serrare (செர்றாரே)-செறிவுள்ள
47. Fuoco(ஃபுவொகொ)- நெருப்பு, புகைக்கான வார்த்தையை அப்படியே நெருப்புக்கு பயன்படுத்துகிறார்கள். நாம சொல்வோமில்லையா நெருப்பு இல்லாமல் புகையாது என்று. அதனால அதை அப்படியே பயன்படுத்துறாங்க.
48. Smarrire(ஸ்மறீரே)-மறத்தல் 
49. Stabilito (ஸ்தபிலித்தொ)-ஸ்தாபித்தல், திறப்படுத்துதல்.
50. territore (தெறித்தொரே)- தறிபோடுதல். (ஆங்கிலத்தில் textiles)
51. Cogliere (கோழியெரெ)-கொய்தல், பறித்தல்.
52. Birra (பிற்றா)- நீர், தமிழ்நாட்டில் பீர் என்றால் மதுபானம் என்றாகிவிட்டது. உண்மையில் பீர் என்றால் நீர் என்றுதான் அர்த்தம். மத்திய கிழக்கு நாடான லெபனானின் தலைநகரம் பெய்ரூட் (Beirut) டின் அர்த்தம் கூட நீரூற்றுகளின் நகரம் என்பதாகும். காண்க: http://en.wikipedia.org/wiki/Beirut
53. Seno (செனோ) - சினை.
54. Terra (தெர்ரா)-பூமி. நாம் தரைக்கு பயன்படுத்தும் வார்த்தையை அவர்கள் ஒட்டுமொத்த நிலத்துக்கும் பயன்படுத்துகிறார்கள். Metro (Me-tro)- me அ ne என்றால் கீழே என்றுதான் பொருள்படும். 
(metro) மெட்ரோ-me - tharai தரை -தரைக்குக் கீழ், 
Nederland - ne -தரை -நிலம் - நிலத்தில் தாழ்வான பகுதி. (Holland - hollow land)
55. Mare (மாரே)- கடல், கடலுக்கு இன்னொரு தமிழ் வார்த்தை வாரி, அனைத்தையும் அலை வந்து வாரிச் சுருட்டி எடுத்துச் செல்வதால் அப்பெயர். இந்த வாரி தான் mare, marina என்றாகிவிட்டது. ஆங்கிலத்திலும் (maraine) மரைன். நம்மூர் மரினா (கடற்)கரை. marina என்றாலே கடல்தானே அப்பறம் என்ன தனியா கடல்னு.
56. Sala (சாலா)- பெரும் அறை, சாலை, கல்விசாலை 
57. Tirare (திறாரே)-திறப்பது தமிழிலும் அப்படியே.
58. Vaso (வாசோ)- சிறிய கொள்கலன், பாத்திரம். தமிழில் வசி என்றால் பாத்திரம் என்ற பொருள். (வசிப்பது இன்னொரு பொருள்) 
59. Pane (பாணே)- பண், ரொட்டி
60. Pagina (பாஜினா)- பக்கம் 
61. Cassa (காஸ்ஸா )- காசு  
62. Paragonare (பரகொனாரே)- ஒப்புமைப்படுதிப்பார்த்தல், பல கோணங்களில் ஒப்புமைப்படுத்துதல்.
63. Pozzo (போட்சோ)-கிணறு, தமிழில் பொந்து, கிணறு.
64. Onda (ஓந்தா)-அலை தமிழில் ஓதம்
65. Digerire (திஜெரிரெ)-செரித்தல்
66. Isola (ஈசோலா)- தீவு. இந்த வார்த்தையும் கொஞ்சம் என்னை தேட வைத்தது. எங்கெங்கு பார்த்தாலும் பாலைவனமாய் இருக்கும் பகுதியில் ஏதோ ஒரு பகுதியில் பசுமை, மரங்கள் தெரிந்தால் அது பாலைவனச்சோலை என்பது நமக்குத்தெரியும். இதை அப்படியே கடலுக்கும் பயன்படுத்தலாம். எங்கெங்கும் கடலாய், கடல்நீராய் இருக்கும் இடத்தில் ஏதோ ஒரு பகுதியில் பசுமை, மரங்கள் தெரிந்தால் அது நீர்ச்சோலை. இந்த நீர்ச்சோலை தான், நீர்சோலை, ந் + ஈர்சோலை, ஈசோலை, ஈசோலா (isola). இந்த ஈசோலை யிலிருந்து isola, அப்படியே ஆங்கிலத்தில் island. (ஏதாவது ஆஸ்காருக்கு சொல்லுங்கப்பா இந்த கண்டுபிடிப்புக்கு.)
67. Cavalcare (கவல்காரே)-காவல்தாண்டுதல்
68. Signora, signore  (சிங்ஞோரா, சிங்ஞோரே  )- ஆங்கிலத்தில் சார், மேடம் என்பதைப்போல இத்தாலியில் பொதுப்பெயர். கணவான் எனலாம். சிங்காரன், சிங்காரி.  (சிங்காரவேலன்)
69. Assegnare (அசெங்ஞாறே )-அசைபோடுதல்  
70. Violino (வியொலினொ)- 'வை. கோ' சொல்வதைப்போல 17 வகையான யாழ் தமிழர்கள் பயன்படுத்தினார்கள். யாழ்ப்பாணன் என்றால் யாழ் கொண்டு பாட்டு இசைப்பவன் என்று பொருள். அதில் பெரிய யாழ் பேரியாழ் எனப்பட்டது. விரியாழ் என்பது அகன்ற பெரிய யாழ். விரியாழ், வியாழ், வியாழினோ, வியொலினொ (இத்தாலியில்), வயலின் (ஆங்கிலத்தில்). வியாழன் கிரகத்திற்கும் காரணப்பெயர் அது விரிந்த, மிகப்பெரிய கிரகம் என்பதாகும். வியாழன் பூமியைவிட 1200 மடங்கு பெரியது.
71. Tyranno(திரான்னொ)- கொடுங்கோலன், கொடூரன் என்பதில் உள்ள டூரன், தூரன், திரான்னொ.
72. Alluvione (அள்ளுவியோனே )- வெள்ளம், அள்ளிச்செல்லும்  வெள்ளம்.
73. Denaro (தெனாரொ)-செல்வம், பணம், தனம். அராபிய பணமதிப்பும் தினார் என்று வரும். அதுவும் தனம்  தான்.
74. Ospedale (ஒஸ்பெதாலே)- ஆஸ்பத்திரி- தமிழில் மருந்து என்பதற்குப்பெயர் ஔடதம்,  ஔஷதம், ஆஸ்பத்திரி, ospetale, hospital. 
75. Farmacia (ஃபார்மாச்சியா)- மருந்து நிலையம். தமிழரர்கள் முதலில் பல தசை, எலும்பு, நரம்பு முடிச்சுகளை கண்டறிந்தவர்கள். அவற்றை சரிப்படுத்துவன்மூலம் எந்த நோயையும் குணப்படுத்தமுடியும் என்று கண்டவர்கள். அதிலே சிறப்பு பெற்றவர்கள் சித்தர்கள்.
தலைப் பகுதியில் 37 முக்கியமான வர்மப் புள்ளிக்களும்,
நெஞ்சுப் பகுதியில் 13 வர்மப் புள்ளிகளும்,
உடலின் முன் பகுதியில் 15 வர்மப் புள்ளிகளும்,
முதுகுப் பகுதியில் 10 வர்மப் புள்ளிகளும்,
கைகளின் முன் பக்கத்தில் 9 வர்மப் புள்ளிகளும்,
கைகளின் பின் பக்கத்தில் 8 வர்மப் புள்ளிகளும்,
கால்களின் முன்பக்கம் 19 வர்மப் புள்ளிகளும்,
கால்களின் பின்பக்கம் 13வர்மப் புள்ளிகளும்,
கீழ்முதுகுப் பகுதியில் 8 வர்மப் புள்ளிகளும்
இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார் அகத்தியர். 
இந்த தமிழ் வர்மம் தான், கிரேக்கத்தில் pharma என்று மாறுகிறது.
இத்தாலியில்  ஃபார்மாச்சியா (Farmacia ), ஆங்கிலத்தில் pharmacy.
____________
8. இத்தாலி-தமிழ்: மதம், வழிபாடு தொடர்பானவை 
1. Ottaviano. வத்திகான் நகரத்தினருகில் முக்கிய சாலைப்பிரிவு ottaviano. காரணம் அங்கு நின்று பார்த்தால் 8 சாலைகளின் பிரிவு இருக்கிறது. 8 வழி - ஒத்தொ-வியானோ
2. Colleseo (கொலோசெயோ)- கொலை செய்யுமிடம், அடிமைகளையும், எதிரிகளையும் நேருக்கு நேர் சண்டை போடவைத்தோ அ கொடூர விலங்குகளோடு மோதவிட்டோ கொலை செய்வது. அதை அரங்கத்திலிருந்து அரசன் பரிவாரங்களோடு பார்த்து ரசிப்பது. இதற்கான இடம் தான் இது. Gladiator திரைப்படத்தில் வருவதைப்போல.
3. Buono (போனோ)- நல்லது தமிழில் புண்ணியம். உங்களுக்கு நல்லதா போகட்டும், உங்களுக்கு புண்ணியமா போகட்டும்.
4. Male (மாலே)- கெட்டது, தீயது. தமிழில் மலம் என்றால், கழிவு மட்டுமல்ல அழுக்கு, சீக்கு, குறை.
5. Amen-ஆம் அப்படியே.
6. Canto (காந்தோ) - பாட்டு, கானம்
7. Santo (சாந்தோ)- புனிதன், தமிழில்  சாந்தம், சால்பு, சாந்தன், சாந்தி.
8. Cere (சேரே)- மெழுகு, தமிழில் சேறு, மெழுகு சேறு.
9. Oliva (ஒளிவா)- ஒளிவ மரம். தமிழில் ஒலிவ மரம் என்று எழுதப் பழகிவிட்டோம். உண்மையில் ஒளிவ மரம் என்றுதான் எழுதவேண்டும். காரணம், இந்த மரத்தின் காயிலிருந்து எண்ணை எடுக்கப்பட்டு விளக்கு எரிக்கவும் பயன்படுகிறது.
10. Sano (சானோ)- ஆரோக்கியம் தமிழில் சாணம் தொடர்பான பொருட்கள் கிருமிநாசினியாக பயன்பட்டது. வீடுகளில் சாணத்தில் மெழுகியது அதன் காரணமாகத்தான். 
11. Parroco (பாரக்கோ)- பங்குப்பணியாளர் அ பங்குத்தந்தை. அவர் ஒரு குறிப்பிட்ட பகுதியின், பரப்பின் பொறுப்பாளர், தலைவன், (கோ) தலைவன், என்ற அடிப்படையில் பார் (உலகம், பகுதி) கோ.
12. Nuovo (நோவோ)- நவ, புதிய. (புதிய ஏற்பாடு)
13. Antico (அந்திக்கோ)- அந்திம காலம், வாழ்வின் இறுதிக்காலம், பழைய, முடிந்துபோன காலம். முந்தைய காலம். (பழைய ஏற்பாடு)
14. Preghiera (பிரெகெயிரா)- செபம், பரிகாரம். 
15. Capella (கப்பெல்லா) - சிற்றாலயம், தமிழில் கபால (capo-இல்லம்)அ தலைவனின் இல்லம்.
16. Aurora (ஔரோரா)- விடியல் தமிழில் ஆரோகணம், சூரியனின் எற்பாடு.
17. Cielo (சேலோ)-வானம், வானகம். தமிழில் சைலம் என்றால் மலை. தமிழ்நாட்டில் உள்ள சேலம் நகரம் மலைகள் சூழ்ந்த நகரம். ஏற்காடு, சேர்வராயன் மலை, நாம மலை, ஊத்து மலை, கஞ்ச மலை, சாமியார் குன்று என மலைகள் சூழ்ந்ததால் அப்பெயர். மலை உயர்வை, மேட்டை, தரையைவிட வானம் நோக்கிய பகுதியைக் குறிப்பதால் வானம் ஆனது.
18. Satana (சத்தானா)-சாத்தான்.
19. Paradiso (பரதீசோ)- விண்ணகம், தமிழில் பரதேசம், பாரதேசம், தூரதேசம்.
20. Croce (குரோச்சே)-சிலுவை. தமிழில் குருசு, குறுக்கு சட்டம்.
21. Fariseo (ஃபரிசேயோ )- பரிசேயர்கள், பரிசுத்தமானவர்கள்.
22. Carmel (கர்மேல்)- கருமலை, கருமையான மேரு (மலை) கருமேரு.
23. Giusseppe (யோசேப்பு) - ஆங்கிலத்தில் joseph தமிழில் சூசை. எபிரேய மொழியில் இதன் பெயர் விளக்கம் பார்த்தால், துணை, சேர்ப்பு, உசாத்துணை என்றே வருகிறது.
25. stella (ஸ்தெல்லா)- நட்சத்திரம்- 
வானியலில் உள்ள 27 நட்சத்திரக்கூட்டங்களில் ஒன்று இந்த taurus நட்சத்திரக்கூட்டம். இது கிரெக்கப்பெயர் என்பார்கள். உண்மையில் சுத்த தமிழ்ப்பெயர். நம்மூரில் காளை மாட்டுக்கு, மாட்டு வண்டிக்கு பயன்படுத்தும் குச்சியை தார்க்குச்சி என்றுதான் சொல்லுவார்கள். தார் என்றால் தமிழில் காளை என்றே பொருள். வட இந்திய நடிகர் ஆமிர்கான் நடிப்பில் வெளிவந்த படம் தாரே ஜமின் பர் (taare jamin par) இதன் அர்த்தம் 'மண்ணில் வந்த நட்சத்திரம்'. இந்த தாரே என்பது இந்த நட்சத்திரக்கூட்டத்தைத்தான் குறிக்கிறது. கிறித்தவர்கள் பாடும் ஒரு பாடலில் தாரகை சூடும் மாமரியே என்று பாடுவார்கள். இந்த தாரகை என்பது இந்த நட்சத்திரக்கூட்டத்தை மாலையாக அணிந்தவளே என்று தான் அர்த்தம். (இப்பத்தி மட்டும் இவ்வலைத்தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்டது)
இந்த தார் அப்படியே எபிரேயத்திற்கு வரும்போது எஸ்தர், அப்படியே இத்தாலிக்கு வரும்போது எஸ்தெல்லா,  ஸ்தெல்லா-வாகி, ஆங்கிலத்தில் ஸ்டார் ஆகிவிடுகிறது.
26. Meditazione-(மேதிதாட்சியோனே )madi–tacere-மதி, மன அமைதிப்படுத்துதல். (tacere என்றால் அமைதிப்படுத்துதல் என்றே இத்தாலியில் அர்த்தம்)
27. Maranatha (மாரநாதா)- வாரும் நாதா.
28. Madonna, donna-மாது, 
29. Immacolato (இம்மாகொலாத்தொ)- male, மலம், சீக்கு, குறை, தீமை என்று இதே பதிவில் மேலே பார்த்தோம். அந்தக் குறைகளெல்லாம் இல்லாதவர்.
30. Diavolo (தீயாவுளோ)- தீயவன், சாத்தான், பேய். சூரியனிலிருந்து உருவான பூமி கோடிக்கணக்கான வருடங்கள் கழித்து குளிர்ந்து, நிலமாகி, உயிர் உருவாக்கத்தொடங்கியது என்று நாம் அறிவோம். அதனால் தான் இன்னும் பூமிக்குள்ளே அந்த சூரியக்குழம்பு நெருப்பாய், எரிமலைக்குழம்பாய் இருக்கிறது என்பதையும் அறிவோம். பூமிக்குள்ள உள்ள தீ யினால் நன்மை  இல்லை கெடுதல் தான். அதனால் ஏற்படும் எரிமலை சுனாமி போன்றவைகளால் தீமைதான் என்பதால் பூமிக்குள்ளே இருக்கும் தீயை நரகம், பேயின் இடம், 'தீ' யவன், தீயாவுளோ, சாத்தான் என்றார்கள் முன்னோர். தீ 'உள்', தீயாவுளோ, diavolo, ஆங்கிலத்தில் devil, evil.
31. Angelo (அஞ்செலொ )-வானதூதன். தமிழில் அஞ்சலன், அஞ்சல் அனுப்புவவன், தூதன். கிரேக்கத்திலும் Angelos.
32. Dio (தியோ)-கடவுள், தெய்வம்.
தமிழில் உயிர் உருவாக காரணமான தீயான சூரியனை தெய்வம் என்று வழிபட்டவர்கள் தமிழர்கள். அதனால் தான் பொங்கல் விழாவில் சூரியனுக்கு நன்றி தெரிவிப்பார்கள். தீயான சூரியன் உயிர் அனைத்தும் உருவாகக்காரணமாதலால் தீ - தீய்வம் - தெய்வம் என்போம். பூமிக்குள்ளே உள்ள தீ தீயது. ஆகவே diavolo, devil. பூமிக்கு வெளியே உள்ள தீ சூரியன் நல்லது. உயிர் தருவது. ஆகவே தெய்வம். உண்மையில் என்ன ஒரு அறிவியல் உண்மை.
மலயாளத்துலயும்  தெய்வம் தான். 
தெலுங்கில் இந்த தெய்வம் தேவுடு. சமஸ்க்ருதத்தில் தேஜஸ். தேஜஸா இருக்கிறான் என்றால் பிரகாசமாய், பள பள ன்னு இருக்கிறான் என்றே சொல்வோம்.
கிரேக்கத்தில் Theos, அதனால்தான் கடவுள் பற்றிய படிப்பு theology. Rome நகரத்தில் உள்ள மிகப்பழமையான கோயில் pantheon (பாந்தெயோன்). அதன் பொருள் பல தெய்வங்களின் கோயில். (pan-theon)
இந்தத்தெய்வம்   இலத்தீனில் Deus, அப்படியே இத்தாலியில் Dio- தியோ. இசுபானிய மொழியில் dios, பிரெஞ்ச் மொழியில் dieu,
   
வரலாற்றின் தந்தை யார்? கிரேக்க நாட்டு ஹெரொடோடஸ், 
தத்துவத்துக்கு தந்தை யார்? கிரேக்க நாட்டு சாக்ரடிஸ், 
நிலவியலின் தந்தை யார்? கிரேக்க நாட்டு தாலமி. 
கணிதவியலின் தந்தை யார்? கிரேக்க நாட்டு ஆர்கிமெடிஸ். 
இலக்கியத்தின் தந்தை யார்? இலியட், ஒடிசி எழுதிய கிரேக்க நாட்டு ஹோமர்.
ஏன்யா வேற யாருமே அவர்களுக்கு முன்னாடி வாழவில்லையா. ஐரோப்பியர்களுக்கு எல்லாம் அவர்கள் நாட்டிலிருந்து தான் ஆரம்பித்தது என்ற நினைப்பு. அறிவியல், முன்னேற்றம், வளர்ச்சி எல்லாம் அங்கிருந்தே தொடங்கியதாக உலகத்தை நம்ப வைக்க செய்திருக்கிறார்கள்.
இதனால் தான் அறிவியலில் சிறந்த கிழக்கத்திய நூலகங்கள் எல்லாம் அழிக்கப்பட்டது. இந்தியாவின் நாளந்தா, தட்சசீலம், ஈராக்கின் (மெசபடோமியா) பாபிலோன், எகிப்தின் அலெக்சாண்டரியா என முன்னோடி அறிவியல், வானவியல், நூலகங்கள் பிரதிஎடுத்தபின் எரித்து அழிக்கப்பட்டது.
ஆனால் கிரேக்க நாட்டின் பெயரே தமிழ்ப்பெயர்.
(Greece) கிரேக்க நாட்டிற்கு தொடக்க கால பெயர் எல்லே நாடு (ELLE). 
எல், அல், என்றால் ஒளி என்பது பொருள். கிரேக்கத்தில் ஒளி தரும் எண்ணெய் மரங்களான ஒளிவ மரங்கள் அதிகம் என்பதால் அந்த நாடு எல்லே எனப்பட்டது. (Greek philosophy) கிரேக்கத்தத்துவங்களை (Hellenistic Philosophy) எல்லெனிய தத்துவம் என்றுதானே அழைக்கிறோம். ஏன்?
அந்த நாட்டில் உள்ள தீவுகள் தமிழ்ப்பெயரில் தான் உள்ளது. கரட்டு தீவு (crete), கரடு முரடான பாறைகள் நிறைந்ததுதான். செப்பறைத்தீவு (cyprus). செம்பு அதிகம் கிடைப்பதால். செம்புவுக்கு அறிவியல் குறியீடும் cu தான்.
இசுலாமியர்களின் இறைவனும் 'அல்லா' என்று அழைக்கப்படுவது இந்த ஒளியானவர் என்ற பொருளில் தான்.
அதனால்தான் அராபிய வானியலில் அனைத்து நட்சத்திரங்களும் AL என்ற முதல் வார்த்தையாகக் கொண்டுதான் குறிப்பிடப்படுகிறது. 
எபிரேயக்கடவுளும் எல் (El) என்றே அழைக்கப்பட்டார். (Bethel)  பெத்-தேல்- இறைவனின் வீடு. (Emmanuel) இம்மானுவேல் மனுவோடு, மனிதனோடு கடவுள் என்று அழைக்கப்பட்டார்.
ஏன் மோசேயும் அவரது எகிப்திய அரசன் ஏகநாதனும் (Akhenaton) வழிபட்ட ஒரே கடவுளின் பெயர் ஏதேன்.
ஆக, உலகில் மதங்களுக்கிடையே இருப்பது மத வித்தியாசம் இல்லை. மொழி வித்தியாசம் தான். ஆனால் ஒவ்வொரு மதமும் (மதங்களில் இருந்த "விவரமானவர்கள்") தங்களது தனித்துவத்தை தக்கவைக்க, நிரூபிக்க சட்ட திட்டங்களை, கோட்பாடுகளை, வழிபாட்டை ஏற்படுத்திக்கொண்டன. அது தான் உண்மை என்று உலக மக்களை நம்ப வைக்க எல்லா முயற்சிகளையும், தகிடுதத்தங்களையும் மேற்கொள்கின்றன. எதிர்ப்பவர்கள், உண்மையை வெளிப்படுத்துபவர்கள் "காணாமற்போய்" விடுவார்கள். எந்த மதமும் இதற்கு விதிவிலக்கல்ல.
இந்த எல் என்பது ஒளி தான்..

நன்றி யாழறிவன்,, Yalarivan Jackson .

Wednesday, January 9, 2019

நீராடல் குறித்த சங்ககாலக் குறிப்புகள்


 நீராடல்

அருவி  நீராடல் க்கான பட முடிவு

உடல் தூய்மைக்கு உதவும் இன்றியமையாத நற்பழக்கம் ‘நீராடல்’. ‘கூழானாலும் குளித்துக் குடி’ எனும் மூதுரை நீராடலின் இன்றியமையாமையை வலியுறுத்தும். அதிலும் ஆறு, கடல் அருவிகளில் நீராடல் என்பது இயற்கையோடு ஒன்றிய நீராடல் எனலாம். மேனாடுகளில் வெப்பக் குளியல் (Sun Bath). ஆவிக்குளியல் (Steam Bath), மூலிகைக் குளியல் (Herbal Bath) என்று பல்வேறு வகைக் குளியல்கள் நலவாழ்வு நோக்கில் உருவானவை. எண்ணெய் நீராடல், அருவி நீராடல், கடல் நீராடல் ஆகியவை இரத்த ஓட்டத்திற்குப் பெரிதும் உதவுகின்றன என்னும் உண்மையை அறிவியலார் இன்று உணர்ந்து வருகின்றனர். இந்த நற்பழக்கம் பழந்தமிழர் வாழ்வில் இயல்பாகவே இணைந்திருப்பதைப் பின்வரும் சங்க இலக்கியச் சான்றுகள் புலப்படுத்தும்.

நதி நீராடல்

வைகை நதியில் புதுப்புனல் ஆடிய மகளிர் கூந்தலுக்கு அகில் புகையூட்டி ஈரம் புலர்த்தினர். பல்வகைப் பொருட்களைக் கொண்டு நீராடிய மகளிர் உடலில் வீசிய மணம் நாற்காத தூரம் வீசியதாம் ‘எருமண்’ கொண்டு கூந்தலின் அழுக்கைப் போக்கினர். நதி நீராடல் பற்றிய பல்வகைக் குறிப்புகளைப் பரிபாடல் அழகுற விளக்குகின்றது.

எண்ணெய் நீராடல்

எண்ணெய் நீராடல் சங்க காலம் முதலே நிலவி வருவதை நற்றிணைச் செய்தி உறுதிப்படுத்தும். மகப்பேறுற்ற மகளிர் வெண்கடுகை அப்பி எண்ணெய் தேய்த்து நீராடுவர் என்பதை நற்றிணை குறிப்பிடுகின்றது. அக்கால மகளிர் நிறைய எண்ணெயினைத் தலையில் பெய்து, குளிர்ந்த மணமுள்ள சந்தனத்தைப் பூசி முழுகுவர். பின் ஈரம் புலர, வயிரம் பாய்ந்த அகிலின் புகையை ஊட்டி, விரலால் குழலை அளைந்து சிக்கு விடுவித்தனர். வேறு சில மகளிர் எண்ணெய் முழுக்கின்போது அரப்புப் பொடியிட்டுத் தேய்த்துக் குளிப்பர். பல்வேறு மணப்பொருட்களை நீராடும்போது பயன்படுத்தினர். இதுவே பிற்காலத்து ‘வாசனைத் தைலங்கள்’ சேர்ந்த ‘தைல முழுக்கிற்குத்’ தூண்டுதலாக அமைந்தது.

கடல் நீராடல்

கடல் நீராடல் என்பது ஒரு விளையாட்டாகவே அக்காலத்தில் நிலவியது. கடல் நீராடும் பரதவ மகளிர் பனை நுங்கின் நீரையும், கருப்பஞ்சாற்றையும் கலந்து பருகிக் கடலில் பாய்ந்து நீராடுவாராம். விளையாட்டுக் காலங்களில் உடல் சோர்வடையாமல் இருக்க இக்காலத்தும் விளையாட்டு வீரர்கள் தேன் குளுகோஸ் அருந்துவதைக் காணலாம். இப்பழக்கத்தினை நினைவூட்டுவது போல் அக்காலப் பரதவ மகளிர் கடல் நீராடல் நிகழ்ச்சி அமைந்துள்ளது.

காதல் நோய் தீர கான்யாறு நீராடல்

மரம் செடி கொடிகள் நிரம்பிய காட்டின்கண் மழை பெய்தமையால் பெருகிவரும் கான்யாற்று நீரில் குளித்தால் அது பல்வேறு மருந்துச் செடிகளின் சேர்க்கை உடையதாதலால் அது பிணி போக்கும் தன்மை உடையது என்பதை அக்கால மக்கள் நம்பினர். தலைமகன் ஒருவன் தலைவியைப் பிரிந்து செல்ல அதன் காரணமாகத் தலைவி வாடி நடுக்கமுற்றிருந்தாள். இதனைக் கண்ட நற்றாய் தோழியிடம் “ஆகாயத்தில் மிக உயர்ந்த பெரிய மலைப் பக்கத்தில் மிக்க இடியோசையுடைய மேகம் பெய்யத் தொடங்கி நள்ளிரவில் மிக்க மழை பொழிந்ததினாலே கற்கள் நிரம்பிய காட்டின்கண் ஓடும்யாற்றிலே மரங்கள் காய்ந்த சருகுகளோடு கழித்தனவாகிய முகிழ்ந்த பூங்கொத்துக்களையும் அடித்துக் கொண்டு வருகின்ற புதிய இனிய நீரானது இவளுக்குற்ற நோயைத் தீர்க்கும் அருமருந்தாகும். அதனைக் குளிர்ச்சி பெறப் பருகி அங்குள்ள காட்சிகளைக் கண்ணால் நோக்கி ஆடப்பெற்றால் இவள் மெய்யின் நடுக்கம் தீரும்” என்கிறாள்.

இதிலிருந்து பலவகை நோய்க்குக் குறிப்பாக, ‘மெய்யின் நடுக்கம்’ போன்றவற்றுக்குக் ‘கான்யாற்று நீராடல்’, அக்காலத்து அருமருந்தாக அமைந்திருந்ததை அறியலாம். இன்றும் நரம்புத் தொடர்பான நோய்களுக்குக் குற்றாலம் போன்ற கான்யாற்று அருவிகளில் குளிக்கும் பழக்கம் அருமருந்தாகக் கருதப்படுவது ஈண்டு ஒப்பு குறிப்பிடும் “நீராடும் மருத்துவ நெறி”க்கு ஏற்ப அமையும் சங்க காலக் ‘கான்யாற்று நீராடல்’ பழக்கம் அரிய மருத்துவப் பயனுடையது.

கூந்தலின் மணப் பொருட்களைப் பூசுதல்

பழந்தமிழ் மகளிர் கூந்தலைப் போற்றிய திறம் பெரிதும் வியப்புக்குரியதாகும். ‘கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா? என்பது பற்றிய அரிய விவாதம் இலக்கியத்தில் உண்டு. மகளிர் கூந்தல் மணம் செயற்கையே என்பது சங்கப் பாடல்கள் தரும் கருத்தாகும். சங்க இலக்கியப் பாடல்கள் பல கூந்தல் பாதுகாப்புப் பற்றிய பல குறிப்புகளைத் தருகின்றன. இடைப்பெண்டிர், பாலையும் வெண்ணையையும் தலையில் தடவிக் கொண்டனர். அகிலின் நெய்யைக் கலந்து பல காலம் தலைக்குத் தேய்த்து வந்தால் முடி கருமை நிறம் கொண்டதாக விளங்கும். எண்ணெய் தடவி வருவதால் நீண்ட முடி, சுருள் முடியாக மாறும். விறலியரின் கூந்தல் பாதிரி மணம் கமழும். மகளிர் மங்கள நீராடிய பின் புகையூட்டி உலர்த்தி, மயிர்ச் சந்தனம் பூசி மணம் கமழும் கூந்தலுடன் விளங்கிய காட்சியை அகநானூறு விளக்கும்.

கூந்தலுக்கென மதுரை நகர மகளிர் பயன்படுத்திய மணப்பொருட்களைப் பரிபாடல் குறிப்பிடுகின்றது. வையை நதியில் நீராடிய மகளிர் குங்குமச் சேறு, அகிற் சாந்து, பச்சைக் கற்பூரம் ஆகியவற்றைச் சாத்தம்மியிலிட்டுத் தீ நிறம் பெற அரைத்துக் கூந்தலுக்குப் பூசி நீராடினர். நீல நிறக் கூந்தலில் பத்து வகையான துவர்களைத் தேய்த்து நீராடினர். நீராடிய பின் வெட்டி வேராலும், விலாமிச்சை வேராலும் தொடுத்த பன்மலர் இலையை அணிவர். ‘நாறிருங் கூந்தல்’, அம்மென் கூந்தல்’, ‘அறல் போற் கூந்தல்’ எனப் பலவகையாகக் கூந்தலைப் போற்றும் புலவர்களின் உட்கருத்து, அக்கால மகளிர் கூந்தலைப் பாதுகாத்த முறைகளை எதிரொலிப்பதாகும்.

விளையாட்டுகள்

கட்டுடல், திண்தோள் போன்ற உடல் அழகைக் குறிக்கும் சொற்கள் சத்துணவால் மட்டும் அமைவதில்லை. உடம்பின் சதை, எலும்பு போன்றவற்றை ஒழுங்குபடுத்தி அழகூட்டும் விளையாட்டுகளாலும் அமைகின்றன. விளையாட்டுகள் என்பவை பொழுது போக்கிற்காக மட்டுமல்ல; உடல் பயிற்சிக்காகவும். ஏற்படுத்தப்பட்டவை ஆகும். பழந்தமிழர் வாழ்வில் விளையாட்டு என்பது அன்றாட வாழ்வோடு பிணைந்து விட்ட பழக்கமாக விளங்கி வந்துள்ளது. மகளிரும், ஆடவரும் அவரவர் உடல் அமைப்புக்கேற்றவாறு விளையாட்டுக்களை மேற்கொண்டு பொழுதை இனிமையாகக் கழித்ததுடன் உடம்பையும் ஒழுங்கு முறையாக வளர்த்துக் கொண்டனர்.

மகளிர் விளையாட்டு

‘ஓர் ஆயம்’ எனப்படும் விளையாட்டைச் சிறுமியர் ஆடினர். பூந்தாதுக்களைக் கொண்டு பாளை செய்து ஆடுதலே ‘ஓர் ஆயம்’ எனப்பட்டது. நெய்தல் நில மகளிர் உப்பங்கழிக்கு அருகில் மலர்களைப் பறித்து விளையாடினர். கடல் அலையின்கண் நீராடி மகிழ்ந்தனர். பனை நாரினாலே திரித்த கயிற்றை மரக்கிளையில் பிணித்துத் தொங்கிவிட்டு ஊஞ்சலில் ஆடினர். கைப்பந்தும் கால்பந்தும் ஆடினர். வரிப்பந்து ஆடினர். நூலால் வரிந்து பனையப்பட்ட பந்தை எறிந்தும் அடித்தும் விளையாடினர். குறிஞ்சி நில மகளிர் சுனையில் நீராடினர். மலை அருவிகளில் விளையாடினர்.

ஆடவர் விளையாட்டு

பாலை நிலச் சிறுவர் நெல்லிக்காய்களை வட்டாகக் கொண்டு பாண்டில் ஆடினர். தேர் உருட்டி விளையாடினர். செல்வச் சிறுவர் பெரிய மணிகள் பதித்த சிறிய தேரில் இருக்க, சேடியர் அத்தேரை இழுத்துச் சென்றனர். ஏழைச் சிறுவர் பனங்குரும்பையை கொடியாற்கட்டி இழுத்து விளையாடினர். மதுரை மாநகரில் ஞாயிறு மறைந்த பின்பு முதல் சாமத்தில் வீரர் சிலர் போர்ப் பயிற்சி கொண்ட யானையைத் தம்மைத் தொடர்ந்து வந்து பிடிக்கும் படி ஏவி அது தொடர்ந்த போது, அதன் போக்கைத் தடுக்கத் தம் மடியிலிருந்த கப்பணங்களைத் தரையில் சிதறி விட்டனர். பரதவர் முழுமதி நாளில் மகளிருடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

(நன்றி: மூலிகை மணி)

Friday, November 30, 2018

சிந்துச் சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே நேர்காணலில் திரு ஆர் பாலகிருஷ்ணன்

ஹரப்பா, மொஹஞ்சதரோ இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டு, அந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டு (செப்டம்பர் 20, 1924) 94 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், சிந்துச் சமவெளிப் பகுதியிலும் தமிழக பகுதிகளிலும் கிடைத்த பானை ஓடுகளில் உள்ள ஒற்றுமைகளை வைத்து சிந்துவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகமே என்பதை நிறுவ முடியும் என்கிறார் ஒடிஷா மாநில கூடுதல் தலைமைச் செயலரும் ஆய்வாளருமான ஆர். பாலகிருஷ்ணன்.
சென்னையில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் The Pot Route: from Indus to Vaigai என்ற தலைப்பில் வியாழக்கிழமையன்று இது தொடர்பாக உரை நிகழ்த்திய ஆர்.பாலகிருஷ்ணன், தன் உரைக்குப் பிறகு பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசினார். அதிலிருந்து.
கே. சிந்துச் சமவெளி ஆய்வு முடிவுகள் வெளியாகி 94 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. அந்த ஆய்வு முடிவென்பது தமிழ் வரலாற்று ஆய்வில் எவ்வளவு முக்கியமானது?
ப. 1924 செப்டம்பர் 20 என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். இந்த நாகரிகம் குறித்த செய்திகள் வரும் முன்பாக நம்முடைய புரிதல் வேறு மாதிரி இருந்தது. இப்படி ஒரு நாகரிகம் இருந்ததே தெரியாது. அது தெரிந்த பிறகுதான் இந்திய வரலாற்றை வேறு மாதிரி பார்க்கும் பழக்கமே ஏற்பட்டது. ஆய்வு முடிவு வெளிவந்தபோதே இது திராவிட நாகரிகமாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறதென அப்போதே சொல்லப்பட்டது. அதற்குப் பிறகும் பலரும் இது குறித்துப் பேசியிருக்கிறார்கள். சாட்டர்ஜி, கிராஸ் பாதிரியார், அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன் போன்ற பல ஆய்வாளர்கள் இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள்.
ஆர். பாலகிருஷ்ணன்.
Image captionஆர். பாலகிருஷ்ணன்
இப்போது பல்துறைகளைச் சேர்ந்த ஆய்வுகள், அதில் கிடைத்த தரவுகள் மூலமாக இது ஒரு திராவிட நாகரிகமாக இருக்கக்கூடும் என்ற சாத்தியக்கூறு உண்டு என்று சொல்வதையெல்லாம் தாண்டி, இது ஒரு திராவிட நாகரிகமே என்று சொல்லக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது.
கே. இந்த ஆய்வு முடிவு வெளியாகும் முன்பாக இந்திய வரலாற்றைப் பார்ப்பது எப்படி இருந்தது, இந்த நாகரிகம் குறித்த முடிவுகள் வெளியான பிறகு எப்படி மாறியது?
ப. தரைக்குள் இப்படி ஒன்று இருந்தது தெரியாத காலகட்டதில் நம் நாகரிகத்தைப் பற்றிச் சொல்ல இலக்கியங்கள் மட்டுமே இருந்தன. அப்போது வெளிநாட்டு ஆய்வாளர்களால் படிக்கக்கூடிய வகையில் இருந்தது வடமொழி இலக்கியங்கள்தான். அதனால், இந்தியப் பண்பாட்டின் துவக்கத்தை வேதத்திலிருந்து துவங்கும் பழக்கம் இருந்தது. வேதகால நாகரிகத்திற்கு முன்பாக வசித்தவர்கள் பண்பாடற்றறவர்கள் போலவும் அதற்குப் பிறகுதான் பண்பாடு வந்ததுபோலவுமே வரலாறு அணுகப்பட்டது. ஆனால், 4,500 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு மிகப் பெரிய நகரம் இருந்தது, அது தரையில் புதைந்து கிடந்தது என்பது தெரிந்த பிறகு எல்லாமே மாறிவிட்டது.
கே. பானை ஓடுகளை வைத்து சிந்துவெளி நாகரிகம் குறித்து சில முடிவுகளுக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். என்ன முடிவு அது?
ப. யானை சென்ற பாதையைவைத்து யானைத் தடத்தைக் கண்டுபிடிப்பதுபோல, இது பானைத் தடம். Silk route, Spice route என்றெல்லாம் இருப்பதைப் போல இது Pot Route என்பதை நாங்கள் முன்வைக்கிறோம். ஹரப்பாவில் கிடைத்த பானை வகைகளில் பெரும்பாலானவை கறுப்பு - சிவப்பு வண்ணம் கொண்டவை. ஆனால், கங்கைச் சமவெளிப் பகுதிகளில் கிடைத்தவை வண்ணம் தீட்டப்பட்ட பழுப்பு நிற மண் பாண்டங்கள். ஆனால், ஹரப்பாவுக்கு தென்பகுதியில் குஜராத், மகாராஷ்டிரா பகுதிகளில் கிடைப்பது எல்லாமே கறுப்பு - சிவப்பு வண்ணம் கொண்டவைதான். ஆனால், வரலாற்றாளர்கள், இதனை முதுமக்கள் தாழியோடு தொடர்புபடுத்தி பெருங்கற்கால மட்பாண்டங்கள் என்று ஒதுக்கிவைத்துவிடுகிறார்கள். அதற்கு மேல் ஏதும் நடப்பதில்லை. இப்போது நாங்கள் முதல் முறையாக ஒரு மேப்பை தயார் செய்து, painted greyware என்ற பழுப்பு நிற பானை ஓடுகள் கிடைத்த கங்கைச் சமவெளியைச் சுற்றி, கறுப்பு - சிவப்பு வண்ண பானைகளைப் பயன்படுத்தும் கலாசாரம்தான் சூழ்ந்திருந்தது; ஆகவே இந்த கறுப்பு - சிவப்பு வண்ணப் பானைகளைப் பயன்படுத்தும் கலாசாரத்தின் தொடர்ச்சியை ஆராய வேண்டுமென்ற கருத்தை முன்வைத்த்திருக்கிறோம்.
கே. பானை ஓடுகளை வைத்து சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என எப்படி நிறுவுவீர்கள்?
ப. முன்பு சொன்னதைப் போல இதுவும் ஒரு பல்துறை ஆய்வுதான். சிந்துவெளி நாகரிகத்தில் கிடைத்ததைப் போன்ற பானை ஓடுகள் கீழடியிலும் கிடைத்திருக்கின்றன. பானைகள் புலம் பெயர்ந்து வந்திருக்க முடியுமா? ஒவ்வொரு பானைக்கு பின்னாலும் ஒரு பானை செய்பவர் இருக்கிறார். அவருடைய சமூகப் பின்புலத்தை ஆராய வேண்டும். சிந்துச் சமவெளி நாகரிகத்தில் பானை செய்பவர் என்னவாக அழைக்கப்பட்டிருப்பார் என்பது தெரியவில்லை. ஆனால், அவருடைய இடம் முக்கியமானதாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இம்மாதிரி ஒரு நகரத்தில் செங்கல் சூளை வைத்திருந்தவர்கள், பானை செய்பவர்கள் ஆகியோருக்குத்தான் முக்கியத்துவம் இருந்திருக்கும். அதுபோன்ற ஒரு முக்கியத்துவத்தை பானை செய்பவர்களுக்குக் கொடுத்த இலக்கியம் சங்க இலக்கியம்தான்.
"சிந்துச் சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே"படத்தின் காப்புரிமைGETTY IMAGES
சங்க இலக்கியத்தில் பானை செய்யும் குயவனை முதுவாய்க்குயவ என்று அழைக்கிறார்கள். அதாவது நீண்டகால அறிவைக் கொண்ட குயவர் என்று பொருள். இந்த நீண்டகால அறிவு என்பது எதைக் குறிக்கிறது? அதுதான் அந்த நாகரிகத்தின் ஆழம். அதேபோல முதுமக்கள் தாழி செய்யும் குயவரை கலம்செய் கோவே என்கிறார்கள். அதாவது பானை செய்பவரை தலைவன் என்று அழைக்கும் சமூகப் பண்பாடு அப்போது இருந்திருக்கிறது. இந்த சமூகப் பண்பை நாம் மறுக்க முடியாது. இந்த சமூகப் பண்பு வட மாநிலங்களில் உள்ள சமூகப் பண்புக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.
குயவர்களுக்கு இருக்கக்கூடிய குலப் பெயர்கள், வம்சாவழிப் பெயர்கள், குடிப் பெயர்கள், சாமி பெயர்கள், கோவில் பெயர்கள் எல்லாமே அந்தப் பாதை நெடுக இருக்கிறது. பானை என்பது அந்தப் பானை மட்டுமல்ல. அந்த பானை, அதைச் செய்பவர் சார்ந்த சமூகம்.
கே. சிந்துச் சமவெளியில் கிடைத்த பானை ஓடுகளில் இருந்த எழுத்துகளுக்கும் தமிழ்நாட்டில் கிடைத்த பானை ஓடுகளில் இருந்த எழுத்துகளுக்கும் ஏதாவது ஒற்றுமை இருந்திருக்கிறதா?
ப. நிறைய இடங்களில் இருந்திருக்கிறது. ஆங்கிலத்தில் grafitti என்பார்கள். அதாவது பானைகளில் இருக்கக்கூடிய கீறல்கள். இந்தக் கீறல்கள் எழுத்துகளாக மாறியிருக்கின்றன. இந்த எழுத்துக் கீறல் உள்ள பானை என்று சொன்னால், இந்தியாவில் கிடைத்த பானைகளில் 80 சதவீதம் தமிழ்நாட்டில்தான் கிடைத்திருக்கிறது. எழுத்துகள் எழுதப்பட ஆரம்பித்ததே பானைகளிலாகத்தான் இருக்க முடியும். கஷ்டப்பட்டு கற்களில் எழுதியிருக்கலாம். ஆக, எழுத்து வரிவடிவம் ஆகியவை ஆரம்பித்ததே பானைகளில்தான். இம்மாதிரி எழுதுவது சிந்துச் சமவெளியிலும் தமிழகத்திலும் அதிகமாக இருக்கிறது. சங்க இலக்கியத்தில் இது குறிப்பிடப்படுகிறது. பீடும் பெயரும் எழுதி என்று குறிப்பிடுகிறார்கள். இப்படியாக பானைகளில் எழுதியது நமக்கு அதிகமாகக் கிடைக்கிறது. அதற்குப் பிறகு தமிழ் பிராமி எழுத்துகளில் எழுதியது கிடைக்கிறது. இது ஒரு தொடர்ச்சியாக நடந்திருக்கிறது. இதைத்தான் நான் சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே என்று சொல்கிறேன். சிந்துவெளி எப்போது இல்லாமல் போகிறதோ அப்போது சங்க இலக்கியம் பேச ஆரம்பிக்கிறது. சங்க இலக்கியம் பேசும் நிகழ்வுகள் எல்லாம் அப்போதைய நிகழ்கால நிகழ்ச்சிகள் அல்ல.
அவர்கள் கேள்விப்பட்ட நிகழ்ச்சிகளை, ஆயிரம் ஆண்டுகளாக தம் சமூகத்திற்குள் கேட்டுவந்த கதைகளைத்தான் அவர்கள் கவிதையாக மாற்றுகிறார்கள். அதில் பேசப்படும் விஷயம் எல்லாம் பழைய விஷயம். அது பழைய நகரங்களோடு தொடர்புடையதாக இருக்கு. ஹரப்பாவுக்கென ஒரு இலக்கியம் இருந்தால் அது இப்படித்தான் இருக்கும்.
கே. ஹரப்பா, மொஹஞ்ச - தாரோ பகுதிகள் இந்தியாவின் வட மேற்கில் இருக்கின்றன. சங்க இலக்கியம் தென்னிந்தியாவில் தோன்றியது. இடைப்பட்ட நிலப்பரப்பில் என்ன நடந்தது?
ப. கலாசாரம் நிலங்களைக் கடந்து பயணிக்கும். ஆஃப்கானிஸ்தானில் சார்த்துகை என்று ஒரு இடம் இருக்கிறது. அந்த இடம் மொஹஞ்ச-தரோவிலிருந்து வட மேற்கில் 1900 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. செல்வதற்கான பாதையே மிகக் கடினமான பாதை. அந்த சார்த்துகையில் லாபஸ் லாஜுலி என்ற விலை உயர்ந்த கற்கள் கிடைக்கும். அவற்றை வைத்து அணிகலன்களைச் செய்வதற்காக சிலர் அங்கே குடியேறினார்கள். அங்கேயும் இதேபோல பானைகளைச் செய்தார்கள். அதை இப்போது ஹரப்பிய நாகரிகம் என ஒப்புக்கொள்கிறோம். மொஹஞ்ச-தரோவுக்கும் கீழடிக்கும் இடையில் கிட்டத்தட்ட அவ்வளவு தூரம்தான் இருக்கும். இந்த இரு நிலப்பரப்பிற்கும் இடையில் தொடர்ச்சி இருக்கிறது.
மகாராஷ்டிரா, குஜராத் குயவர்களுடைய வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் தென்னிந்திய குயவர்களோடு தொடர்புடையதாக இருக்கிறது. ஆக பழக்க-வழக்க தொடர்பு இருக்கிறது, இலக்கியத் தொடர்பு இருக்கிறது. இவற்றைத் தனித்தனியாகப் பார்க்கக்கூடாது.
கே. சிந்துவெளி நாகரிகத்தில் பானை செய்பவர்கள் உயர்ந்த இடத்தில் இருந்ததாகச் சொன்னீர்கள். அவர்கள் சமூகத்தில் அடைந்த வீழ்ச்சியும் வேதகால நாகரிகத்தின் எழுச்சியும் சந்திக்கும் புள்ளி ஒன்றாக இருந்ததா?
ப. அப்படித்தான் தெரிகிறது. கன்வர்ஸ் என்ற ஆய்வறிஞர் இந்த கறுப்பு - சிவப்பு பானை செய்பவர்களும் பழுப்பு நிற பானை செய்பவர்களும் கங்கைச் சமவெளியில் சில நூறு கி.மீ. தூரத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு வாழ்ந்திருந்தாலும் அவர்களுக்கு இடையில் எந்தப் பரிமாற்றமும் இருக்கவில்லை. ஐநூறு, அறநூறு ஆண்டுகளுக்குப் பிறகே இரு பண்பாடுகளும் சந்தித்துக்கொண்டன. ஒரு பக்கம் ஹரப்பா நாகரிகத்தில் பானை, செங்கல் செய்பவர்கள் உயர்ந்த இடத்தில் இருந்திருப்பார்கள் என்று யூகிப்பதற்கு அங்கு கிடைத்த தொல்பொருள் தடயங்கள் ஆதாரமாக இருக்கின்றன. அவர்கள் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றப்பட்டார்கள். அவர்களே விழாக்களை அறிவித்தார்கள். அவர்களே பூசாரிகளாக இருந்தார்கள். அவர்களே தலைவன் என அறிவிக்கப்பட்டார்கள். இதற்கெல்லாம் சங்க இலக்கியத்திலும் நம்முடைய மட்பாண்டக் கீறல்களிலும் தடயங்கள் இருக்கின்றன. ஏதோ உயர்ந்த இடத்திலிருந்து கீழே வந்துவிட்டோம் என்ற உணர்வு இந்தியாவில் உள்ள எல்லாக் குயவர்கள் மத்தியிலும் இருக்கிறது.
"சிந்துச் சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே"படத்தின் காப்புரிமைGETTY IMAGES
அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் தோற்றம், எழுச்சி, சரிவு, வீழ்ச்சி ஆகியவையும் பானை செய்வோரின் தோற்றம், எழுச்சி, சரிவு, வீழ்ச்சி ஆகியவையும் இணையாக நடந்திருக்கின்றன. எப்போதுமே ஒரு வருத்தம், இழந்தது குறித்த கோபம், மனத்தாங்களல் அவர்களுடைய வாய்மொழி மரபில் இருந்துகொண்டேயிருக்கிறது. இது ஒரு கூட்டு மனப்பான்மையாக இருக்கிறது. இதை அவர்கள் காலம்காலமாக கடத்திவந்திருக்கிறார்கள். இதை ஆராய வேண்டியிருக்கிறது. தொல்லியல் என்பது கிடைக்கும் பொருட்கள் சம்பந்தப்பட்டது. ஆனால் இம்மாதிரியான வரலாற்று ஆய்வு எல்லாத் துறைகளையும் சேர்ந்ததாக இருக்க வேண்டும்.
கே. சிந்துவெளிக்கு அருகில் இருப்பது கங்கைச் சமவெளி. நீங்கள் குறிப்பிடும் வைகைச் சமவெளி வெகுதூரத்தில் இருக்கிறது. சிந்துவெளி நாகரிகம் ஏன் கங்கைச் சமவெளிக்குப் பரவவில்லை?
ப. சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சியைச் சந்திக்க ஆரம்பித்தபோது எல்லோருமே அங்கிருந்து தெற்கு நோக்கி வந்துவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. சிலர் அங்கேயே தங்கிவிட்டார்கள். சிலர் கிழக்கு நோக்கி நகர்ந்து கங்கைச் சமவெளியை அடைந்தார்கள். அங்கிருந்த நாகரிகத்தின் மீது அவர்கள் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். அதேபோல கங்கைச் சமவெளி நாகரிகத்தின் தாக்கம் அவர்களிடமும் இருந்திருக்கும். புதிய மொழியையும் கலாசாரத்தையும் கற்றுக்கொண்டிருந்திருப்பார்கள். பண்பாட்டுத் தாக்கம் இருந்திருக்கும்.
ஆனால், தமிழ்நாடு மிகவும் வெளியில் இருப்பதால் அவர்கள் தங்கள் பண்பாட்டுக் கூறுகளைத் தக்கவைத்திருப்பார்கள். மற்ற இடங்களில் அது குறைவாக இருந்திருக்கும். அதனால் அடையாளம் காண்பது சிரமமாக இருக்கும். இந்தியாவில் யாரைச் சுரண்டிப் பார்த்தாலும் ஹரப்பாவின் கூறு ஏதாவது இருக்கும். யாரிடம் அதிகம் இருக்கும் என்பது விவாதத்திற்குரியது.
"சிந்துச் சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே"படத்தின் காப்புரிமைNASA/USGS
Image captionசிந்து நாகரிகத்தின் நகர்ப்புற குடியேற்றங்கள் தற்போதைய வடமேற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பரவியுள்ளன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாம் பெரிதாக அகழ்வாய்வுகளைச் செய்யவில்லை. திராவிடக் கருதுகோள்களின் அடிப்படையில் நாம் ஆய்வுகளைச் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. அந்த ஆய்வை குஜராத், மகாராஷ்டிரா, சிந்து, கங்கைச் சமவெளி, வைகைச் சமவெளி என எல்லா இடங்களிலும் செய்ய வேண்டும்.
கே. வைகைக் கரையில் ஏற்கனவே கீழடியில் அகழ்வு செய்யப்பட்டிருக்கிறது. வேறு எங்கு செய்ய வேண்டும்?
ப. வைகைக் கரையை ஒட்டிய 200 இடங்கள் அகழ்வாய்வு தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்தவை. நான் ஏற்கனவே கீழ் - மேல் என்பது குறித்து சொல்லியிருக்கிறேன் (அதாவது கீழ் என்பது எப்போதும் கிழக்குப் பகுதியிலும் மேல் என்பது மேற்குப் பகுதியிலும் இருப்பதோடு, உயர்வானதாகவும் கருதப்படும். சிந்துவெளியிலும் இப்படித்தான் இருந்தது என்பது பாலகிருஷ்ணனின் வாதம்). இந்த இடங்களில் கீழ்-மேல் விகுதிகளோடு உள்ள இடங்கள், வைகைக் கரையோரமாக இருக்கும் அகழாய்வு சாத்தியமுள்ள இடங்களை நிச்சயம் ஆய்வுசெய்ய வேண்டும்.
இதில் இடங்களின் பெயர்கள் மிக முக்கியமானவை. அவை சாகாவரம் பெற்றவை. அவை நாகரிகத்தின் துவக்கத்திற்கும் மலர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் சாட்சியமாக இருக்கின்றன. அவை சாவதில்லை.
கே. உங்களுடைய முந்தைய ஆய்வு சிந்துவெளியின் இடப்பெயர்கள் பற்றியது. அதில் நீங்கள் சொல்லியிருப்பது என்ன?
ப. மனிதன் தொடர்ந்து இடம் மாறிக்கொண்டேயிருப்பவன். இப்படி புலம்பெயர்வது என்பது மனிதனின் அடிப்படைகளில் ஒன்று. இப்படிப் புலம்பெயரும்போது அவன் எதை எடுத்துச்செல்ல முடியும்? அவன் தன் பூமியைத் தோண்டி எடுத்துச்செல்ல முடியாது. நினைவுகளைத்தான் எடுத்துச்செல்ல முடியும். தான் செல்லும் புதிய இடத்தில் அவன் தன் பழைய இடத்தை மீள் உருவாக்கம் செய்வான். அப்படிச் செய்யும்போது தன் பழைய ஊர்ப் பெயரை எடுத்துச் செல்வான். கடவுள் நம்பிக்கையை எடுத்துச்செல்வான். இப்படிப் புலம் பெயர்பவர்களோடு, இடப்பெயர்களும் புலம்பெயரும். அப்படி தமிழகத்திலும் சிந்துச்சமவெளியிலும் இருந்த இடப் பெயர்களை நான் என் ஆய்வில் ஒப்பிட்டிருக்கிறேன்.
கே. தற்போது வெளியாகியிருக்கும் ராகிகடி மரபணு ஆய்வு முடிவுகள், சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்று சுட்டிக்காட்டுவதைப்போல இருப்பதாகச் சொல்கிறது...


ப. ராகிகடி ஆய்வு முடிவுகள் இப்போதுதான் வெளியாகத் துவங்கியிருக்கின்றன. முறைப்படி இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. ஆனால், இந்த முடிவு தனிப்பட்ட முறையில் எனக்கு வியப்பு எதையும் தரவில்லை. கிட்டத்தட்ட எதிர்பார்த்த விஷயம்தான். முழுமையான முடிவை நானும் அவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.