Monday, October 31, 2016

திருமெய்யம் கல்வெட்டு: பரிவாதிநி எஸ். இராமச்சந்திரன். சொல்வனம்


Thirumayam-8.JPG (384×512)
புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் வட்டம் மலையக்கோயில் என்ற ஊரில் உள்ள சிவன் கோயிற்குடைவரையின் கிழக்கு நோக்கிய நுழைவாயிலையொட்டி, தென்புறச் சுவரில் ஒரு கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. மேலே செவ்வக வடிவில் கட்டம் கட்டி, பல்லவ கிரந்த எழுத்துகளில் “பரிவாதிநிதா” எனப் பெரிய வடிவில் பொறிக்கப்பட்டுள்ளது. கீழே, சிறிய வடிவில் பல்லவ கிரந்தத்திலும், தமிழிலும் 
” என்னே ப்ரமாணம்
செய்த வித்யா பரிவாதினி கற் [க] “
என்றும், அதனையடுத்துத் தமிழில் சற்றே பெரிய வடிவில்
“கற்கப்படுவது காரண
ஞ்சொல்லிய் புகிற்பர்க்கும் திமி
ழக் கந்திருவத்துக்கும் உரித்து” 
என்றும் பொறிக்கப்பட்டுள்ளன. எழுத்தமைதி கி.பி. 7 ஆம் நூற்றாண்டுக்குரியது. மெய்யெழுத்துகள் புள்ளியிடப்பட்டு எழுதப்பட்டுள்ளன. 
இக்கல்வெட்டுகள், Inscriptions of the Pudukkottai State நூலில் 3, 4 எண்கள் இடப்பட்டுப் பதிக்கப்பட்டுள்ளன.
“பரிவாதிநிதா”
“குணஸேண ப்ரமாணஞ்
செய்த வித்யா பரிவாதிநிகற்
கற்பிக்கப்படுவது காண்
ஞ் சொல்லிய புகிற்பருக்கும் நிமி
முக்கந் நிருவத்துக்கும் உரித்து” 
என்று பதிப்பிக்கப்பட்டுள்ளது.  
South Indian Inscriptions தொகுதி 12 இல் இக்கல்வெட்டு திருமெய்யம் சத்தியகிரீஸ்வரர் குடைவரைக் கோயிலில் பொறிக்கப்பட்டிருப்பதாக 7A என்று எண்ணிடப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. 
”பரிவாதிநிதா”
“என்னை ப்ரமாணஞ்
செய்த வித்யா பரிவாதிநிகற்”
“கற்கப்படுவது காரண
ஞ்சொல்லிய புகிற்பருக்கும் திமி
முக்கட் திருவத்துக்கும் உரித்து”
என்று பதிக்கப்பட்டுள்ளது. (இதே கல்வெட்டு வாசகங்கள் சில மாற்றங்களுடன் திருமெய்யத்தில் பொறிக்கப்பட்டுச் சில பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளமையால், முழுமையான இக்கல்வெட்டுப் படியும் திருமெய்யத்துக்குரியதே என்ற குழப்பம் விளைந்தது போகும்.) 
திருச்சிராப்பள்ளி இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தால் வெளியிடப்படுகிற “வரலாறு” ஆய்விதழ்-11 ஆம் இதழில் (ஆண்டு – 2001) ”மலையக் கோயில் குடை வரைகளும் கல்வெட்டுகளும்” என்ற கட்டுரை மு.நளினி, இரா. கலைக்கோவன் ஆகியோரால் எழுதப்பட்டுள்ளது. அக்கட்டுரையில்,பரிவாதிநிதா 

என்னே ப்ரமாணஞ்

செய்த வித்யா பரிவாதிநி கற்[க]
கற்கப்படுவது காண்
ஞ் சொல்லிய புகிற்பருக்கும் திமி
முக்கட் நிருவத்துக்கும் உரித்து   
என்று இக்கல்வெட்டு வாசிக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது. 7 ஆம் நூற்றாண்டு எனக் காலமும் கணித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. 4ஆம் வரியில் இடம் பெற்றுள்ள ‘காண்’ என்பதைக் ‘கரண’ என்றும் படிக்கலாம் என இக்கட்டுரைக்கான அடிக்குறிப்பில் எழுதப்பட்டுள்ளது.        
 2a-copy.jpg (4242×3000)
இக்கல்வெட்டில் இடம் பெற்றுள்ள ‘பரிவாதிநிதா’ என்பது ஒரு வீணையின் பெயராகும். ‘என்னே’ அல்லது ‘என்னை’ என்பது தமிழிலக்கிய இலக்கண உரையாசிரியர்கள் தமது உரையினூடே பயன்படுத்துகிற சொல்லாகும். ”என்னை?” என்பது மாணாக்கர்களைப் பார்த்து “விளங்குகிறதா? மேலும் தெளிவுபடுத்த முயல்கிறேன்.” என ஆசிரியர் கூறுவது போன்ற தொனியுடைய வினாவாகும். ‘ப்ரமாணஞ் செய்த வித்யா பரிவாதிநி கற்[க]’ என்பது ‘வித்யா பரிவாதிநி என்ற வீணையிசை கற்பதற்குரிய விதி” எனப் பொருள்படும். 
“கற்கப்படுவது காரணஞ் சொல்லிய் (அல்லது கரணஞ் சொல்லிய்) புகிற்பர்க்கும் திமிழக் கந்திருவத்துக்கும் உரித்து” என்பது நான் படித்துள்ள வாசகம். “கற்கப்படுவது காண்” எனப் படிக்கப்பட்டுள்ளது தவறாகும். “ர” என்ற எழுத்து தனித்துத் தெளிவாகப் பொறிக்கப்பட்டுள்ளது. [2] “சொல்லிய” எனப் படிப்பதை விட, “சொல்லிய்” எனப் படிப்பதே சரியாகும். (யகர் மெய் புள்ளியிட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது.) “புகிற்பருக்கும்” எனப் படிக்கப்பட்டிருப்பது பொருள் வேறுபாட்டைத் தோற்றுவிக்கவில்லையெனினும் “புகிற்பர்க்கும்” என்ற வடிவமே கல்வெட்டில் உள்ளது. “திமிழக் கதிருவத்துக்கும்” என்று என்னால் படிக்கப்பட்டுள்ள வாசகத்தில் “ந்’ என்ற வடிவம் வட்டெழுத்துச் சாயலைப் பெற்றுள்ளது. [3]
“கரணஞ் சொல்லிய்புகிற்பர்” என்பது இசைக்கருவிகளை இயக்குதற்குச் சொல்லிக் கொடுப்பவர்கள் என்று பொருள்படக் கூடும். கரணம் என்பது கருவி எனப் பொருள்படுமெனத் திவாகர நிகண்டால் அறிய முடிகிறது.[4]கரணம் என்பதில் உள்ள ந் கர வரி வடிவம், மகேந்திர பல்லவனின் வல்லம் குடைவரைக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள “குணபரன்” என்ற சொல்லிலும், மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் இராஜசிம்மனின் கிரந்தக் கல்வெட்டிலுள்ள “ஜயதேரணபீமோ” என்ற வாசகத்திலும் இடம் பெறுகிற ”ண”கர வரி வடிவம், மகேந்திர பல்லவனின் வல்லம் குடைவரைக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள “குணபரன்” என்ற சொல்லிலும் இடம் பெறுகிற ‘ண’கர வரிவடிவத்த்டைப் பெரிதும் ஒத்துள்ளது. [5] ’சொல்லிய்’’ என யகர ம்ய் சேர்த்து எழுதுவது கல்வெட்டு எழுத்தில் இயல்பானதே.

‘புகிற்பர்’ என்ற சொல் ஆழமாக ஆராயத் தக்கது. ‘புகல்’ என்ற தன்வினைச் சொல்லின் பிறவினை வடிவமாகக் கொள்ளுதற்குரிய புகற்று, புகல்வி என்ற சொற்களை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய வினையாலணையும் பெயர் இது எனத் தோன்றுகிறது. புகற்றுவார், புகல்விப் பார் என்பது புகிற்பார் என்றும் புகிற்பர் என்றும் மருவியிருக்க வாய்ப்புள்ளது. “புகல்” என்பது இசை தொடர்பான சொல்லாட்சியாகும். “புரிநரம்பு இரங்கின புகன்ற தீங்குழல்” எனச் சீவக சிந்தாமணி (பா.1940) கூறும். பெரிய புராணம் ஆனாய நாயனார் புராணத்தில் (பா. 26) “ஆய இசை புகல் நான்கின் அமைந்த புகல் வகையெடுத்து” என்ற வரி இடம் பெறுகிறது. நான்கு வகைப் புகல்வுகள் என்பன ஸ்திதி, பிரக்கிரமம், சஞ்சாரம், மூர்ச்சனை ஆகியன என்று இசை வல்லுநர்கள் கருதுகின்றனர். [6] எனவே “புகிற்பர்” என்பது -கரணஞ் சொல்லிப் புகிற்பர் என்பது- இசைக் கருவிகளை வாசிக்கச் சொல்லிக் கொடுப்பவர்களை- பாடம் புகட்டுவோரைக் குறிக்கக் கூடும்.


இனி, திமிழக் கந்திருவம் என்ற தொடர் குறித்து ஆராய்வோம். கந்தர்வம் என்ற சொல்லே கந்திருவம் என எழுதப்பட்டுள்ளது. கந்தர்வம் என்பது கந்தர்வ வேதம் என்றே வழங்கும். இது இசையைக் குறிக்கும். மகேந்திர பல்லவனின் மாமண்டூர்க் கல்வெட்டில், “ கந்தர்வம்’ என்ற சொல் இசையைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப் பட்டுள்ளது. [7] தமிழிசை எனப் பொருள்படுகிற “தமிழ்க் கந்தருவம்” என்பதே ‘திமிழக் கந்திருவம்” என எழுதப்பட்டிருக்க வேண்டும். இதே கல்வெட்டு வாசகங்கள் திருமெய்யம் சத்யகிரீஸ்வரர் கோயிற் குடைவரையிலும் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு பகுதி அழிக்கப் பட்டுள்ள அக்கல்வெட்டில் “திமிழ” என்பது ‘தெமிழ’ எனப் பொறிக்கப்பட்டுள்ளது. [8] “திமிழ” என்பது “திமிழ்” என்றும் “தெமிழ்” என்றும் உச்சரிக்கப்பட்டு, அத்தகைய உச்சரிப்பு வழக்குகள் கல்வெட்டிலும் இடம் பெற்றுள்ளன. மலியாள, கன்னட என்பன போன்றே தமிழ் என்பது தமிழ் மொழிக்குரிய அல்லது தமிழ் மரபுக்குரிய எனப் பொருள்படும். தமிழக் கூத்து என்ர நாட்டிய வகை தொகாப்பிய உரையாசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது. [9] அது போலத் தமிழிசை என்பது தமிழக் கந்திருவம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


இக்குடைவரை சிவன் கோயிற்குடைவரையாகும். கே.வி. சௌந்தரராஜன் அவர்கள் இக்குடை வரை மாகேஸ்வர சைவர்களின் வழிபாட்டுக்குரியதாக இருந்திருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். [10] கர்நாடக மாநிலத்தில் செல்வாக்குடன் திகழ்ந்த காளாமுக சைவ சமயத்தையே அவர் கருத்தில் கொண்டிருந்ததாகத் தோன்றுகிறது. இம்மாவட்டத்திலுள்ள கொடும்பாளூரில் காளமுக சைவம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் தழைத்திருந்தது. எனவே அக்குடைவரை குறித்துக் கே.வி. சௌந்தரராஜன் ஊகித்தது சரியாகவே இருக்கலாம். இந்த இசைக் கல்வெட்டில் இடம் பெற்றுள்ள திமிழ என்ற வழக்கு தமிழைக் குறிப்பதற்குக் கன்னடர்கள் பயன்படுத்திய சொல்வழக்காகும். தமிழர் என்ற சொல் திமிளர், திவிளர் என்று திரிந்து கி.பி.12 ஆம் நூற்றாண்டளவில் திகிளர், திகுளர் என வழங்கிற்று.[11] தமப்பன் (தம் அப்பன்) என்பது தவப்பன் என்று திரிந்து வழங்கத் தொடங்கித் தற்போது தகப்பன் என வழங்கப்படுவதை இதனோடு ஒப்பிடலாம்.


கர்நாடக மாநிலத் தொடர்பு கி.மு. 2 ஆம் நூற்றாண்டிலேயே புதுக்கோட்டைப் பகுதியில் நிலவிற்று என்பதற்குச் சித்தன்னவாசல் ஏழடிப்பட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள தமிழ் பிராமிக் கல்வெட்டில் இடம் பெறுகிற எருமிநாடு (மகிஷபுரி- மைசூர்ப்பகுதி) பற்றிய குறிப்பும், வாயில் எனப் பொருள்படும் ‘போசில்” என்ற கன்னடச் சொல் இடம் பெறுவதும் சான்றாகின்றன. எனவே கி.பி 7ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அப்பர், திருஞான சம்பந்தர் ஆகியோரின் முயற்சியால் சமண சமயம் வீழ்ச்சியடைந்து சைவ சமய பக்தி நெறி வளர்ச்சியடைந்த போது கர்நாடக இசை மரபு சார்ந்த காளாமுக சைவநெறி இப்பகுதியில் செல்வாக்குப் பெற்றது எனக் கொள்ளலாம். கர்நாடகக் கூத்து- இசை மரபு சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டத்தில் (கால்கோட்காதை:106-115) குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கர்நாடகக் கூத்து – இசை மரபினர், தமிழிசை மரபையும் கற்றுத் தேர்ச்சியடைந்து அதனைக் கற்பித்தும் வந்தனர் என்றும், அந்நடைமுறையே இக்கல்வெட்டில் பதிவாகியுள்ளதென்றும் முடிவு செய்யலாம். குறிப்பாக “வித்யா பரிவாதிநி” எனப்பட்ட தமிழிசை மரபை அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வீணையை இசைக்கின்ற அறிவைக் கற்பித்துள்ளனர் எனக் கொள்ளலாம். “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய” ஞானசம்பந்தரின் காலத்தையொட்டி இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது என்பதையும், இக்கல்வெட்டு இடம் பெற்றுள்ள குடைவரை சிவன் கோயிற் குடைவரை என்பதையும் நாம் கவனத்திற் கொண்டால் இக்கல்வெட்டு குறிப்பிடுகிற செய்தி எந்த அளவுக்கு விரிவான, ஆழமான ஆய்வுக்குரியது என்பது புலனாகும்.


அடிக்குறிப்புகள்


[1] ஐகாரம் ஏறிய உயிர்மெய் வடிவத்தைக் குறிப்பதற்காக அந்த எழுத்து வடிவத்திற்கு முன் ஒற்றைக் கொம்பு வடிவத்தைச் சேர்த்தல் என்பது கி.பி 5 ஆம் நூற்றாண்டிலேயே வழக்கிற்கு வந்து விட்டது. தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் இருளப்பட்டி நடுகல்லில் அரைசரு, கொற்றந்தை ஆகிய பெயர் வடிவங்களில் ரை, தை ஆகியன இவ்வாறு ஒற்றைக் கொம்புடன் எழுதப்பட்டுள்ளன. (Epigraphia Indica, Vol XXXIX, Part VI, No. 32) ’ண’, ‘ல’, ‘ன’ போன்று சுழியுடன் தொடங்குகிற எழுத்து வடிவங்களைப் பொறுத்தவரை இவ்வாறு ஒற்றைக் கொம்புடன் சேர்த்து எழுதுவது என்பது இரண்டு சுழி வடிவங்களைக் கூடுதலாகச் சேர்க்காமல் தவிர்க்கிற முயற்சியாக அமைந்து விடுகிறது.


[2] உயிர்மெய் நெடிலுக்குரிய கால் வடிவமும் ரகரக் குறில் வடிவமும் இக்கல்வெட்டில் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன. “சொ” என்ற எழுத்து வடிவில் கால் பொறிக்கப்பட்டுள்ள விதம் காண்க.


[3] செங்கம் பகுதி எடுத்தனூரிலுள்ள மகேந்திர பல்லவனின் காலத்தைச் சேர்ந்த நடுகல்லில் “கோவாலனென்னுந் நாய்” என்ற வாசகத்தில் ‘ந்’, ‘நா’ ஆகிய எழுத்து வடிவங்களை இவ்வடிவத்துடன் ஒப்பிடலாம். (நிழற்படம் 1 காண்க)


[4] Tamil Lexicon p-742, Madras University, 1982


[5] நிழற்படம் 2 காண்க.


[6] செந்தமிழ் தொகுதி VI ப. 216 – மேற்கோள்; Tamil Lexicon, p.2741, Madras University, 1982


[7] மகேந்திர பல்லவன், ப. 70, மயிலை சீனி வெங்கடசாமி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை


[8] Inscription of the Pudukkottai State, no.5: ”தெமி முக்கந் நிருவத்துக்கும்” என வாசித்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. South Indian Inscriptions, Vol. XII, no.7: “தெமி முக்கட் திருவத்துக்கும்” என்று வாசித்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.


[9] தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நூற்பா 385-6 , தாழ் என்பது கோல் என்ற சொல்லுடம் புணரும் போது, “அக்’ சாரியை பெறும்; அதாவது தாழக் கோல் என்றாகும் எனக் கூறுகிற தொல்காப்பியர், தமிழ் என்ற சொல்லும் அவ்வாறே ‘அக்’ சாரியை பெறும் என்கிறார். அந்த அடிப்படையில் பார்த்தால் தமிழக் கூத்து, தமிழக் கந்திருவம் என்பனவே ‘அக்’ சாரியை பெறுகின்றன. ஆயினும், ‘தமிழச் சேரி’ போன்ற வடிவங்களும் வழக்கில் இருந்துள்ளன என்பது பெருங்கதையால் (3: 4: 11) தெரிய வருகிறது.


[10] Rock cut temple Styles, p.94, K.N. Soundararajan, Somaiya publications, Bombay, 1998.


[11] ‘Tigular’- R. Panneerselvan, in ‘Studies in Indian Epigraphy,” Vol XXXII, 2005, Published by Epigraphical Society of India, Mysore.


நன்றி: திருமெய்யம் கல்வெட்டு: பரிவாதிநி எஸ். இராமச்சந்திரன்சொல்வனம் இதழ் 102,  31-03-2014

Friday, October 7, 2016

சுக்ரீஸ்வரர் கோவில் கல்வெட்டுச் சொல்லும் கோயில் ரகசியங்கள்

சுக்ரீஸ்வரர் கோவில் கல்வெட்டுச் சொல்லும் கோயில் ரகசியங்கள்



 https://ramanchennai.files.wordpress.com/2011/08/img_6069.jpg

மெல்லிய காற்று வருடிச்செல்லும் கடற்கரையில் நிற்பது போன்று கண்முன் விரிகிறது அந்த இடம். பல்லவர்களின் கலைக்கூடங்களானமாமல்லபுரம் கடற்கரை கோயில் போன்ற கம்பீரம். சுற்றிலும் விரிந்து கிடக்கும் தரிசு நிலங்களுக்கு இடையே காவி நிறத்தில் பளிங்கு மண்டபம்போல் காட்சியளிக்கிறது அக்கோயில்.

திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பெரியபாளையம் சுக்ரீஸ்வர சுவாமி ஆலயம். தல புராணத்தில் குரக்குத்தளி ஆடுடைய நாயனார் கோயில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ­ஸ்ரீராமரின் தோழனான சுக்ரீவன் இவ்வூரில் பரம்பொருளான ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று நாமம். 

கோயிலின் அர்த்த மண்டபச் சுவரில் உள் புடைப்புச் சிற்பமாக சுக்ரீவன் ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்கிறான். இந்தியத் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு காணப்படும் கல்வெட்டுகள் இக்கோயிலின் பழம்பெருமையை பறை சாற்றுகின்றன.



இக்கோயிலின் தொன்மையினையும் பெருமையினையும் இரண்டு விதமாக வரலாற்று ஆய்வாளர்கள் நிரூபிக்கிறார்கள். சமயக்குரவர்களுள் ஒருவரான சுந்தரர் இந்தக் கோயிலைப் பற்றி பாடியிருப்பதால் இக்கோயில் சுந்தரர் வாழ்ந்த காலமான எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
கி.பி. 1220ம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டுதான் இங்கு காணப்படும் பழமையான கல்வெட்டு. 

எனவே இக்கோயில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். இந்தக் கல்வெட்டு, கோயில் அர்த்த மண்டபத்தின் வடக்கு குமுதவரியில் காணப்படுகிறது. மக்கள் தங்கள் சொந்த செலவில் கோயிலுக்கு பூஜைகள் செய்வதையும் திருவிழாக்கள் எடுப்பதையும் பெருமையாகவும் கௌரவமாகவும் கருதியிருக்கிறார்கள். ஆனாலும் கோயில் விழாக்களில் தங்களுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்றோ, தங்களுக்கு முதல் மரியாதை அளித்த பின்னர்தான் மற்றவர்களுக்கு அளிக்க வேண்டும் என்றோ அவர்கள் விரும்பியதில்லை.

உதாரணத்துக்கு ஒரு சம்பவம்: வீரராஜேந்திர சோழ சக்கரவர்த்தி என்ற சிறப்புப் பெயர் பெற்ற சிவபிராமணன், இவ்வூரை ஆண்ட வீரராஜேந்திரன் என்ற அரசனிடம் 30 பொன் கொடுத்து, கோயில் திருவிழா மற்றும் அபிஷேக ஆராதனைகளில் தான் ஓர் உபயதாரராக பங்குபெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அரசனும் இந்த ஆருடைய நாயனார் கோயிலில் அவருக்குச் சில சிறப்பு உரிமைகளைக் கொடுத்து ஆணை பிறப்பித்தான். இதை சிரமேற்கொண்டு அந்த சிவபிராமணன் இறுதிவரை சிவத்தொண்டு செய்து வந்தார். படியாய்க் கிடந்து பணிவிடை செய்தாரே தவிர பரிவட்டம் எதையும் எதிர்பார்க்கவில்லை.இதைச் சொல்லும் கல்வெட்டு செய்தியை கவனியுங்கள்:

‘நம்முடன் நின்று இனக்கு காணி தர வெனும் என்று
நமக்கு தந்த பொன் முப்பது இப்பொன் 
முப்பதுக்கும்
இவனுக்கு நாம் குடுத்த காணியாவது.....
தொம் இக்கொயிற்காணி முப்பது வட்டமும்
அனுபவிப்பாளாகவும் இக்கோயில்கள் பூசை
தெவ கன்ட பெறு எழுவன முறைப்பன....’

இக்கோயிலின் அர்த்த மண்டபத்தின் ஜகதி வரியில் காணப்படும் கல்வெட்டு தேவ தானங்கள் பற்றிய ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறது. சுந்தர பாண்டியன் என்ற மன்னன் இக்கோயிலுக்கு கொடுத்த தேவதான நிலங்களை சிதக்குறிச்சி என்ற ஊரைச் சேர்ந்த விவசாயிகள் உழுது பயிரிட்டுக் கொள்ளவும் விளைச்சலில் பாதியை இக்கோயிலுக்கு தரவும் ஆணை பிறப்பித்துள்ளான். மேலும் சிதக்குறிச்சி விவசாயிகள் கோயிலுக்குச் சொந்தமான தோட்டத்தையும் பட்டியையும் ஆண்டு கொள்ளவும் அணை அமைத்து வாய்க்கால் வெட்டி குளம் காத்து நீர்ப்பாசனம் செய்துகொள்ளவும் ஆணை பிறப்பித்தான். இதோ அந்தக் கல்வெட்டுச் செய்தி:

‘வாயறைக்கா நாட்டு சிதக்குறிச்சியில்
ஊராளிகளுக்கும்
நம் ஓலை குடுத்த பரிசாவது நம்பிள்ளை
சுந்தரபாண்டி தெவர் நங்குரக்குத்தளி 
நாயினார்க்குத்
......நன்செய் புன்செய் நத்தமும் தொட்டமும்
குளமும் குளப்பரிப்பும் உட்பட்ட நிலம் குடி 
நீங்காத்
தெவதானமாகவும் நஞ்செய் உழுது வாரம்...’

அமெரிக்காவில் 1930ல் பொருளாதார பெருமந்தம் ஏற்பட்டபோது ‘டென்னசிப் பள்ளத்தாக்குத் திட்டம்’ என்ற திட்டத்தை அதிபர் ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் அறிமுகப்படுத்தினார். அதன்படி டென்னசி பள்ளத்தாக்கு பகுதியில் இருந்த சுமார் 40,000 ஹெக்டேர் நிலங்கள் நீர்ப்பாசனத்திற்கும் விவசாயத்திற்கும் உட்படுத்தப்பட்டன. தரிசாகக் கிடந்த விளைநிலங்களில் பயிர் செய்யவும், நீர்ப்பாசன வசதி ஏற்படுத்திக் கொள்ளவும், மின்சார உற்பத்தி செய்யும் தனியாருக்கு அனுமதி வழங்கினார். தரிசு நிலங்களை மேம்படுத்துவதும் அங்கு குடியேற்றங்களை ஏற்படுத்துவதும் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெருமளவு உதவும் என்று இருபதாம் நூற்றாண்டில் அமெரிக் காவுக்கு வந்த சிந்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் மன்னர்களுக்கு இருந்தது என்பதற்கு ஓர் உதாரணம் கீழே குறிப்பிடப்பெறும் செய்தி.

தென்கரைச் சூரலூர் என்ற கிராமம் தரிசாகவும் பாழ்பட்டும் கிடந்தபோது அவ்வூரைப் புதுப்பித்து குடியேற்றங்கள் ஏற்படுத்திக் கொள்ளவும், அங்கு குடியேறும் மக்கள் அவ்வூரில் உள்ள நிலங்களில் பயிர் செய்துகொள்ளவும் அனுமதி வழங்கி ஆணை பிறப்பித்தான். வேளாண்மையின் விளைச்சலில் வருபவற்றில் இரண்டில் ஒரு பங்கை வரியாகக் கோயிலுக்குச் செலுத்த வேண்டுமென்று கூறி, கோயில் வருவாயைப் பெருக்கினான். இந்தச் செய்தியை மகாமண்டபத்தின் வடக்கு ஜகதியில் காணப்படும் கல்வெட்டு தெரிவிக்கிறது.

நீர்ப்பாசனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த நம் மன்னர்கள் நீர்ப்பாசனம் இல்லாத கிராமங்களுக்கு உடனடியாக அந்த வசதி செய்து தர, அணைகள் கட்ட ஆணை பிறப்பித்துள்ள செய்திகளும் இக்கோயில் கல்வெட்டுகளில் இருந்து கிடைக்கின்றன. இவ்வூரை ஆண்ட சுந்தர பாண்டிய மன்னன், சுக்ரீஸ்வரர் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்டிருந்த சூரலூரில் நீர்ப்பாசன வசதி செய்யவும் நொய்யாற்றில் கட்டப்பட்ட அணையையும் அந்நீர் பாயும் குளத்தையும் பாதுகாத்து ஒழுங்குபடுத்தும் பணியை பேரூர் நாட்டு வெற்றலூர் செம்படவன் பிள்ளையான் செய்வதற்கும் ஆணை பிறப்பித்துள்ளான். நீர்ப்பாசனத்தை நிர்வகிக்கும் முறை, கொங்குப் பாண்டியன் காலத்தில் சிறந்திருந்தது என்பதை இதன்மூலம் நாம் உணர முடிகிறது.

‘ஸ்வஸ்தீஸ்ரீ தண்டேஸ்வரன் ஓலைச் சாகரஞ்சூழ்
வையகத்துக் கண்டீஸ்வரன் கரும மாறாய்க
பண்டே அறஞ்செய்தான் செய்தான் 
அறங்காத்தான்
பாதம் திரும்பாமல் சென்னிமெல் வைத்து - 
அருளாலாதி
சண்டெஸ்வரன்னா தெசம் நம்பிள்ளை சுந்தர பாண்டிய தெவற்கு...
......தானத்தாற்கு ஏற நாயனார்சி பண்டாரத்துக்கு
சிலவறுப்பானாகவும் மீன் படுக்கும் பொதுக்
குளத்தில்
மீன் சிலவற படுக்குமளவும் தானத்தாற்கு 
நிச்சயித்தபடி 
கறிதவிர் கறியிட்டுப் பொதுவானாகவும் இவ்வூர்
நான்கெல்லையும் உள்பட அணையுங்......’

வெகு விரைவில் நாம் பெரிய நீர்ப்பற்றாக்குறைக்கு ஆட்படுவோம் என்று சுற்றுச்சூழல் அறிஞர்கள் எச்சரித்து வருகிறார்கள். அந்த எச்சரிக்கைகளை எல்லாம் புறந்தள்ளி விட்டு நாம் இன்னும் நீர் நிலைகளை மாசுபடுத்தி, பாழ்படுத்தி வருகிறோம். ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தீர்த்தக்குளங்களை உருவாக்கி, அவற்றைப் புனிதமாகக் கருதி, நம் அரசர்கள் பாதுகாத்து வந்த செய்தி எத்தனைப் பரவசமானது! இந்தக் கோயிலின் மகா மண்டபத்தின் தெற்குப்புறச் சுவரில் காணப்படும் கல்வெட்டு கூறும் செய்தி இது: இந்தக் கோயிலுக்குச் சொந்தமான சில நிலங்கள் அமுதுபடி முதலிய திருப்பணிகளுக்காக விடப்பட்டிருந்தன. ஆனால், இந்த ஊரின் குளம் பாழ்பட்டுக் கிடந்தது. 

அதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுக் கிடந்தது. எனவே குளத்தை செப்பனிடவும், அந்நீர் பாயும் நிலத்தில் பயிர் செய்து கொள்ளவும் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் அமுதுபடி முதலியன செய்யவும் மன்னன் உத்தரவிட்டார். இவ்வாறு அமுதுபடிக்காக விடப்பட்ட நிலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்ட செய்தியைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

‘இன்னாயிநாற்கு அமுதுபடிக்கும் திருநாள் படிக்கும்
திருப்பணிகளும் வெண்டும் வெஞ்சனாதிகளுக்கும்
திருமடை விளாகத்துக்கு மெற்கில் நல்லாற்றில் குளம்
அனாதி பாழாய்க் கிடந்தமையில் இக்குளமும்
இந்தக் குளத்தில் நீர் ஏறிப்பாயும் நிலமுற்றது
திருநாமத்துக் காணியாக குடுத்தொம்.’

தாயார் ஆவுடையம்மன் சந்நதியின் வடபுறக் குத்துக்கல்லில் உள்ள கி.பி. 1499ம் ஆண்டைச் சேர்ந்த அரசன் நஞ்சராய உடையார் காலத்துக் கல்வெட்டு முக்கியத்துவம் வாய்ந்தது. இம்மன்னன், கோயில் பூஜைகள் சிறப்பாக தொடர்ந்து நடைபெற வேண்டுமானால் கோயிலின் வருமானத்தைப் பெருக்க வேண்டும் என்று எண்ணினான். எனவே நான்கு பொன் நிலம் வாங்கி அந்நிலத்தில் இருநூறு தென்னை மரங்கள் வளர்த்து அதன் வருமானத்தைக் கொண்டு இக்கோயில் பூஜை செலவுக்கு பயன்படுத்திக்கொள்ள ஆணை பிறப்பித்தான்.



தமிழகத்திலேயே பண்டைய வணிகக் குழுக் களைப் பற்றிக் கூறும் கல்வெட்டு இக்கோயிலில்தான் உள்ளது. இந்த வணிகக் குழுக்களை கில்ட்ஸ் (நிuவீறீபீs) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள். வணிகக் குழுவினர் பெருங்கா என்னும் இடத்தில் கூடி, குரக்குத்தளி ஆருடைய நாயனாரை வைகாசித் திருநாளில் எழுந்தருளச் செய்வதாக முடிவு செய்தனர். இதற்காகும் செலவுக்காக ஏற்றுமதி, இறக்குமதி, தலைச்சுமை போன்ற பண்டங்களுக்கு சுங்க வரி விதித்து அப்பணத்தைக்கொண்டு இத்திருநாள் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். இப்பெருஞ் செய்தியைக் கூறும் பெருங்கல்வெட்டைப் பாருங்கள்:

‘வைகாசித் திருநாள் எழுந்தருளிவிப்பதாக 
பட்டிணப்பகுதி
கட்டிக் குடுத்த பரிசாவது; நான்கு திசை யேறு சாத்து
இறங்குசாத்து நடக்கும் சரக்குகளுக்கு மிக பொதி
ஒன்றுக்கு பணம் ஒரு மாவும் புடவைக் கட்டு 
ஒன்றுக்கு
பணம் இரண்டு மாவும் பாக்கு பொதி ஒன்றுக்கு
பணமரை மாவும் பசும்பை யொன்றுக்குப் 
பணமரை மாவும்
கழுதை மேல் வரும் பண்டங்....களுக்கு...

-இது போல நம் முன்னோர்கள் கோயிலை மையமாகக் கொண்டு மண்ணையும் மக்களையும் காக்க செய்த பல அற்புதமான காரியங்களின் மௌன சாட்சியாய் இருக்கின்றன கோயில் கல்வெட்டுகள்.

நன்றி: தினகரன்