ஓலைச் சுவடிகளுக்காக புதுச்சேரியில் ஒரு நூலகம்: 8,400 அரியவகை சுவடிகளைப் பாதுகாக்கும் பிரெஞ்சு நிறுவனம் - தி இந்து
புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் 8400 ஓலைச் சுவடிக் கட்டுகளை பாதுகாத்து பராமரித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் பிரெஞ்சு அரசு நிர்வாகத்தின்கீழ் பிரெஞ்சு ஆய்வு நிறுவனம்
செயல்பட்டு வருகிறது. ஆராய்ச்சியாளர்கள், துறை வல்லுநர்கள், பணியாளர்கள் என
சுமார் 60 பேர் பணியாற்றும் இந்த நிறுவனத்தில் இந்தியாவின் இயற்கையையும்
பண்பாட்டையும் ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வருகின்றனர்.
நமது தொன்மையையும் பாரம்பரிய பெருமைகளையும் நாம் பாதுகாக்க தவறிவிட்டபோதும்
இந்த பிரெஞ்சு நிறுவனம் அதை எல்லாம் போற்றிப் பாதுகாக்கும் முயற்சியில்
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான்
இங்கு ஓலைச் சுவடிக்கு என்றே ஒரு நூலகத்தை உருவாக்கி வைத்திருக்கின்றனர்.
அந்த நூலகத்தில் 8400 ஓலைச் சுவடிக் கட்டுகளை பாதுகாத்து வைத்துள்ளனர்.
இதுகுறித்து ’தி இந்து’விடம் பேசினார் இந்த நிறுவனத்தின் ஓலைச்சுவடி
ஆராய்ச்சித் துறை தலைவர் டி.கணேசன். “இங்கு கிரந்த எழுத்து ஓலைச்சுவடி
கட்டுகள் ஐயாயிரமும் தமிழ் ஓலைச்சுவடிக் கட்டுகள் ஆயிரமும் திகழாரி
மொழியில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் சுமார் 400 கட்டுகளும் உள்ளன. இவைகள்
இல்லாமல் தெலுங்கு, நந்தி நாகரி மொழிகளில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிக்
கட்டுகளும் உள்ளன.
இவை அனைத்துமே நாங்களே ஊர் ஊராய் கிராமம் கிராமமாய் அலைந்து திரிந்து
சேகரித்தவை. சில ஓலைச் சுவடிகள் எளிதில் கிடைத்துவிட்டன. எங்களின்
நோக்கத்தைப் புரிந்துகொண்டு சில பேர் ஓலைச் சுவடிக் கட்டுகளை எடுத்துக்
கொடுத்துவிட்டனர். சிலபேர் தரமறுத்தனர். அவர்கள் கேட்ட தொகையைக்
கொடுத்துத்தான் ஓலைச் சுவடிக் கட்டுகளை வாங்க வேண்டியிருந்தது.