Tuesday, September 20, 2016

சாத்தனூர் கல்மரம் சிங்கநெஞ்சன் மின்தமிழ்


wikipedia

16THMUSEUM_163188f.jpg (636×476)
The Hindu
Sathanur006.jpg (800×479)

“நீ கல்லாகப் போகக் கடவாய்’, தவறு செய்த (?) மனைவியை சபித்தார் முனிவர்.உடனே முனிவரின் மனைவி கல்லாக மாறிவிட்டார். பின்னர் இராமர் காலடி பட்டு கல்லாக இருந்த அகலிகை மீண்டும் பெண்ணாக மாறினாள். இது இதிகாசக் கதை. கற்பனைக் கதைதான். உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் காலத்தின் கோலத்தால் மரங்கள் கல்லான நிகழ்வுகள் புவியியல் வரலாற்றில் பூமியின் பல பகுதிகளில் பல்வேறு காலங்களில் நிகழ்ந்திருக்கின்றன. அப்படிக் கல்லாக மாறிய மரங்கள் தமிழ் நாட்டில் “கல்மரங்கள்” என்றே அழைக்கப்படுகின்றன. நம் நாட்டில் கல் மரங்கள் அதிகமாக உள்ள மாநிலம் நம் தமிழ்நாடுதான்.

தமிழக நில அமைப்பில் சுமார்    80%   வன்பாறைகளால் ஆனது. தீப் பாறைகளும் , உருமாற்றுப் பாறைகளும் இவ் வன்பாறைகளில்  அடங்கும். தமிழகத்தின் கிழக்குப் பகுதியில் மென்பாறைகள் காணப் படுகின்றன. படிவப் பாறைகள்  இத் தொகுப்பில் அடங்கும். அரியலூர் பகுதியில் இத்தகைய படிவப் பாறைகளே உள்ளன. பெரும் நீர்நிலைகளில் ஆறுகளால் கொண்டுவரப்படும் படிவங்கள் மற்றும் வண்டல்கள் படிகின்றன.. பல இலட்சக் கணக்கான ஆண்டுகள் இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெறும்போது, நீர்நிலைகளின் அடியில்  படியும் படிமங்களின் அளவு, பலநூறு மீ. அளவிற்கு உயர்ந்து விடுகிறது. இப்படிவங்கள்  அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக கெட்டிபட்டுப் பாறைகளாக மாறுகின்றன, இவையே படிவப்பாறைகள் (SEDIMENTARY ROCKS ) எனப்படுகின்றன. . மணல் பாறைகள், களிப் பாறைகள், சுண்ணாம்புப் பாறைகள் ஆகியவை இப்பகுதியில் கிடைக்கும படிவப் பாறைகள் ஆகும்.

நீர்நிலைகளின் அடியில் படிவங்கள் படியும்போது, அந்த நீரில் வாழும் உயிரினங்களும், ( சிப்பி, நண்டு, நத்தை, மீன் போன்றவையும் , நீர் வாழ் தாவர வகைகளும்), ஆற்றிலடித்து வரப்படும் மரங்கள், கிளைகள் மகரந்தங்கள், ஆற்றில் வாழும் உயிரினங்கள், ஆற்றோரம் உள்ள நிலப் பகுதியில் வாழும் உயரினங்கள் ஆகியவையும் சேர்ந்து புதையுண்டு போகின்றன. மேலும் மேலும் படிவங்கள் மேலே படியும் பொது அடியில் உள்ள படிவங்கள் அழுத்தத்திற்கும் வெப்பத்திற்கும் உட்பட்டு கெட்டிப் படுகின்றன. பாறைகளாக உருவெடுக்கின்றன. அதில் படிந்துள்ள உயிரினங்களில் உள்ள செல்லுலோஸ் போன்ற மென்பொருட்கள் , குவார்ட்ஸ் போன்ற கணிமங்களால் இட மாற்றம் செய்யப் பட்டு , அந்த உயிரினங்கள் உருக் குலையாமல் அப்படியே  தொல்லுயிர் படிவங்களாக (FOSSILS) மாறுகின்றன. பொதுவாக , தொல்லுயிர் எச்சங்கள் படிவப் பாறை களிலேயே  காணப்படுகின்றன. தாம் அடங்கியுள்ள படிமப் பாறைகள் தோன்றிய காலம், சூழ்நிலை போன்றவற்றை அறியவும், பரிணாம வளர்ச்சி பற்றி அறியவும் தொல்லுயிர் எச்சங்கள் மிகவும் பயன் படுகின்றன. தொல்லுயிர் எச்சங்களை ஆய்வு செய்யும் கல்வி தொல்லுயிரியல் (PALAEONTOLOGY) என்று வழங்கப் படுகிறது. புதைபடிவ எரிபொருட்களாகிய நிலக்கரி, பழுப்பு நிலக்கரி, பெட்ரோலியம், எரிவாயு ஆகியவற்றை கண்டுபிடிக்கும் பணியில் தொல்லுயிரியல் பெரும்பங்கு வகிக்கிறது.

அரியலூர் பகுதியிலுள்ள படிவப்பாறைகளில் பல்வேறு வகைப்பட்ட  தொல்லுயிர் எச்சங்கள் ஏராளமான அளவில் கிடைக்கின்றன. இவற்றில் மிகப் பெருபாலானவை கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்களே ஆகும். இதன் வாயிலாக , தற்போது இப்பகுதிக்கு நூறு கி.மீ. கிழக்கில் உள்ள கடல் , சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் இருந்திருக்கிறது என அறிய முடிகிறது.

இந்திய புவியியல் ஆய்வுத்துறையை சேர்ந்த ப்ளான்ஃ போர்ட் (BLANFORD-1862)  மற்றும் இராபர்ட் ப்ரூஸ் ஃபுட் ( ROBERT BRUCE FOOTE-1873) ஆகியோர் இங்கே ஆய்வுகள் நடத்தி , இங்குள்ளப் படிவப் பாறைகள் பற்றியும் அவற்றில் பொதிந்துள்ள 12 கோடி ஆண்டுகள் பழமையான தொல்லுயிர் எச்சங்கள் பற்றியும் உலகிற்கு எடுத்துரைத்தனர். அன்று முதல் அரியலூர் பகுதி “PARADISE OF PALAEONTOLOGISTS” என்றே அழைக்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலும் உள்ள புவிஅறிவியல் அருங்காட்சியகங்களை , அரியலூர் பகுதி தொல்லுயிர் எச்சங்கள் அலங்கரிக்கின்றன.

இவ்வளவு பெருமை வாய்ந்த அரியலூர் பகுதியில் இந்திய புவியியல் ஆய்வுத்துறைக்கு தலைமை ஏற்ற முதல் இந்தியர் எனும் பெருமை பெற்ற எம்.எஸ். கிருஷ்ணன் அவர்கள்  1940 ஆம் ஆண்டில், ஆய்வுகள் மேற்கொண்டார். அப்போது அவர் அரியலூருக்கு பத்து கி.மீ. மேற்கேயுள்ள சாத்தனூர் எனும் கிராமத்திற்கு 7௦௦ மீ. வடக்கே   ஓடைப் படுகை ஒன்றில் 18மீ. நீளமுள்ள தொல்மர எச்சம்/ கல் மரம். ( FOSSIL TREE / WOOD FOSSIL) ஒன்றை கண்டு பிடித்தார். இந்த சாத்தனூர் கிராமத்தின் அருகே உள்ள வரகூர், ஆனைப்பாடி, அழுந்தளையூர், சாரதாமங்கலம் போன்ற கிராமங்களின் அருகே உள்ள ஓடைப் படுகைகளிலும் சில மீ. நீளமுள்ள கல் மரங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. ஆயினும் சாத்தனூர் அருகே உள்ள 18 மீ. நீளமுள்ள கல்மரம்தான் இந்தப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மிக நீளமான, மிகப் பெரிய கல்மரம் ஆகும். அருகே உள்ள ஆனைப்பாடி ஓடைப் படுகைகளில் காணப் படும் “அம்மோநைட்” எனப்படும் கடல் வாழ் உயிரினத்தின்  தொல்லுயிர் எச்சங்கள் , சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கிரிடேஷியஸ்  காலத்தை சேர்ந்தவை. (இவைகளில் சில கார் சக்கரம் அளவிற்கு பெரிதானவை) எனவே இந்தப் பகுதி சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன் கடலின் கீழ் இருந்தது- ஆற்றில் அடித்து வரப்பட்ட பெரிய அடிமரம் கடலில் சேர்ந்து , மேலே மேலே படிந்த படிவங்களின் அடியில் சிக்கி கல்லாக  சமைந்தது (PETRIFICATION)  என்பது தெளிவு.. மணல் பாறைகளில் பதிந்து பூமிக்கு அடியில் இருந்த சாத்தனூர் கல்மரம் , ஓடைகளில் ஓடிவரும் தண்ணீரால் மேலேயுள்ள மண் அரிக்கப்பட்டு , அதனால் வெளிப் பட்டிருக்கிறது. ஆய்வின் போது  கிடைத்த தடையங்களின் அடிப்படையில் , இந்த அடிமரம் சுமார் 26  மீ. இருந்திதிருக்க வேண்டும் என்றும், ஓடை நீரால் அடித்த் செல்லப் பட்டது போக எஞ்சியுள்ள  18மீ. பகுதியே தற்போது நாம் பார்ப்பது. என்றும் தெரிய வருகிறது.

இந்தக் கல்மரம் ஜிம்னோஸ்பேர்ம் ( GYMNOSPERM ) எனப்படும் “பூக்காத”-/”கனிதரா’ தாவரங்கள் பிரிவில்  “கோனிஃபர்” (CONIFER)  எனப்படும் கூம்புடை பிரிவை சார்ந்தது. 12 கோடி ஆண்டுகளுக்கு முன் ‘க்ரீடேஷியஸ்” காலகட்டத்தில் இவ்வகைத் தாவரங்களே பூமியில் பெருகி இருந்தன. பின்னர் “ஆஞ்சியோஸ்பேர்ம்”  எனப்படும் பூக்கும் / கனிதரும் மரங்கள் தோன்றின.

தற்போது சாத்தனூர் –அரியலூர் பகுதிகளில் கடலும் இல்லை , பெருங்காடுகளும் இல்லை. இப்பகுதி இன்றைக்கு கடலிலிருந்து 1௦௦ கி.மீ. மேற்கே தள்ளியுள்ளது. ஆனால் 12 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட “க்ரீடேஷியஸ்” காலகட்டத்தில் இபகுதி கடலின் கீழ் இருந்தது என்பதை இங்கே கிடைக்கும் கடல்வாழ் உயிரினங்களின் தொல்லுயிர் எச்சங்கள் (MARINE  FOSSILS) உறுதி செய்கின்றன. அன்றைய கடற்கரையை ஒட்டியோ அல்லது சற்று தள்ளியோ இருந்த நிலப்பகுதியில் 60-70 அடி உயரமுள்ள மரங்கள் இருதிருக்க வேண்டும். அந்த மரங்கள் ஆறுகளால் அடித்து வரப் பட்டு, கடலை அடைந்து, கடலுக்கு அடியில் படிந்த படிவங்களோடு சேர்ந்து படிந்து , கல்லாக சமைந்திருக்க வேண்டும்., பிற்காலத்தில் புவியியல் மாற்றங்களால் கடல் பின்னே செல்ல தற்போது இந்தக் கல் மரங்களும் ஏனைய தொல்லுயிர் எச்சங்களும், நிலப் பகுதியில் புதைந்து கிடக்கின்றன.ஆறுகளிலும் ஓடைகளிலும் மண் அரித்து அடித்து செல்லப் படும்போது, இவை வெளிப் படுகின்றன.

சரி , மரம் எப்படிக் கல்லாக மாறுகிறது.? சாதரணமாக மரம் மண்ணில் புதையுண்டு போகும் பொது, மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளால் அவை மட்கிப் போகும் வாய்ப்புகளே அதிகம். மாறாக , அந்த மரம் புதையுண்ட இடத்தில் மேலும் மேலும் படிவங்கள் படியும் போது அதனால் ஏற்படும் அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக மரம் தகன நிலைக்கு உட்பட்டு குமைந்துபோய் கரியாக மாறக் கூடும். நிலக்கரி, பழுப்பு நிலக்கரிப் படிவங்கள் இப்படித்தான் உருவாகியுள்ளன. இதனை CARBONAISATION  அல்லது கரியாக மாறுதல் எனக் குறிப்பிடலாம். மூன்றாவதாக மண்ணில் புதைந்த மரம் மட்கிப் போகும் முன்னால் அந்த மரத்திலுள்ள செல்களின் இடை வெளிகளிலும், செல் அடுக்குகளின் இடை வெளிகளிலும் , நிலநீர் புகுந்து விடுகிறது. அந்த நீரில் கரைந்துள்ள சிலிகா அந்த இடைவெளிகளை ஆக்கிரமித்து தாவரப்  பொருளான செல்லுலோசை இடமாற்றம் செய்து விடுகிறது. இந்த நிகழ்வின் போது மரத்தின் அமைப்பு  உருக்குலையாமல் அப்படியே காப்பாற்றப் படுகிறது. மரம் கல்லாக சமையும் இந்நிகழ்வு “PETRIFICATION” (PETRA  MEANS ROCK)  என்று அழைக்கப்படுகிறது.நிலநீரில் கரைந்துள்ள கனிமங்களின் தன்மைக்கேற்ப கல் மரத்தின் நிறம் மாறுபடுகிறது. சாத்தனூர் கல் மரம் சிலிகாவால் ஆனதால் இது பழுப்பு நிறத்தில் உள்ளது.

அரியலூரைச் சுற்றியுள்ள சாத்தனூர், ஆனைப்பாடி வரகூர் ஆகிய இடங்களில் மட்டுமின்றி , விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை, கடலூர் மாவட்டம் நெய்வேலி, புதுவை காலாப்பட்டு மற்றும் விருதாச்சலம் பாரூர் ஆகிய இடங்களிலும் கல் மரங்கள் கிடைக்கின்றன. இராஜஸ்தான் மாநிலம் பொக்ரேன் பகுதியிலும் கல்மரங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.  உலக அளவில் அரிசோனா கல்மரக் காடுகள் மிகவும் புகழ் பெற்றவை.

சாத்தூர் கல் மரத்தின் சிறப்பு மற்றும் முக்கியத்துவம் கருதி, இந்திய புவியியல் ஆய்வுத் துறை இதற்குக்   கல்மரப் பூங்கா என  பெயரிட்டு , தேசிய நினைவுச் சின்னமாக அறிவித்துள்ளது..இந்த இடம் வேலியிட்டு பாதுகாக்கப் பட்டு வருகிறது. ஓடை அரிப்பால் வெளிப்பட்ட இந்தக் கல்மரம், எதிர் காலத்தில் ஓடை வெள்ளத்தினால் அகற்றுபட்டு விடக்கூடாது  என்பதற்காக , செயற்கைக்  கால்வாய் அமைத்து ஓடை திருப்பி விடப்பட்டுள்ளது. கல்மரம் பற்றிய புவியியல் குறிப்பு ஒன்றும் இத்துறையினரின் அறிவிப்புப் பலகையில் காணப் படுகிறது. பாதுகாப்பிற்காக பணியாள் ஒருவரும் இருக்கிறார்.

சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் (N.H. 45), பெரம்பலூரில் இருந்து, ஆறு கி.மீ. தெற்கே சிறுவாச்சூர் எனும் ஊர் உள்ளது. அங்கிருந்து கிழக்கே செல்லும் சாலையில் 14 கி.மீ. பயணித்தால் சாத்தனூரை அடையலாம்.அண்மைக்காலத்தில் சாத்தனூர் கல் மரத்தின் சிறப்பு பற்றி அறிந்த தமிழக அரசின் சுற்றுலா துறை , சிறுவாச்சூர்- சாத்தனூர் சாலையை செப்பனிடு பணியை மேற்கொண்டது. சாத்தனூரில் கல் மரத்திற்கு அருகே ஓய்வு விடுதி ஒன்றும் கட்டப் பட்டது. பத்து கோடி ஆண்டுகள் பழமையான கல்மரத்தைப் பாதுகாத்துவரும் இந்திய புவியியல் ஆய்வுத் துறையின்  பணி பாராட்டிற்குரியது.

யூடுயூப் விடியோ பொன்னுசாமி காசி தங்கராஜன் 


நன்றி சாத்தனூர் கல்மரம் சிங்கநெஞ்சன் மின்தமிழ் 

Friday, May 6, 2016

அணிகலன் பெருக்கும் அக்ஷய த்ரிதியை எஸ். இராமச்சந்திரன்

Akshaya-tritiya-akha-trij-happy-akshaya-tritiya.jpg (600×400)



அணிகலன் பெருக்கும் அக்ஷய த்ரிதியை

எஸ். இராமச்சந்திரன்

அக்ஷய த்ரிதியை அல்லது அட்சய திருதியை என்ற அழிவற்ற மூன்றாம் பிறைத் திருவிழா தற்போது பரபரப்பாகப் பேசப்படும் ஒரு நிகழ்வாக மாறிவருகிறது. அக்ஷய த்ரிதியை அன்று நகை வாங்கி அணிந்தால் செல்வம் பெருகும் என்ற ஒரு நம்பிக்கையை நகை தயாரிக்கும் நிறுவனங்கள் (Jewellers) மக்கள் மனதில் விதைத்துப் பரப்பி வருகின்றன. அக்ஷய த்ரிதியை என்ற நிகழ்வுக்கு என்ன வரலாற்றுப் பின்னணி இருக்கின்றது என்பது பெரும்பாலானோருக்குத் தெரியாது. கேரள மாநிலத்தில் ஓணம் விழாவும் தமிழகத்தில் தைப் பொங்கலும் கொண்டாடப்படுவது போல மராட்டிய மாநிலத்தில் அக்ஷய த்ரிதியை முதன்மையான ஒரு விழாவாக நெடுங்காலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் அங்கும் கூட இவ்விழாவின் சமய, சமூகப் பின்னணி என்ன என்பதைப் பற்றிய சரியான புரிதல் இல்லை. எனவே, அக்ஷய த்ரிதியை பற்றிய ஒரு வரலாற்று ஆய்வாக இக் கட்டுரை அமைகிறது.

அக்ஷய த்ரிதியை என்ற சொல்லுக்குத் தேய்தலற்ற அல்லது வளர்கின்ற மூன்றாம் பிறை நாள் என்பது பொருளாகும். ஒரு மாதத்தின் வளர்பிறைப் பகுதியாகிய சுக்ல பட்ச த்ருதியைத் திதியை அக்ஷய த்ரிதியை எனக் குறிப்பிடுவது பொருத்தமே. கதிரவனின் ஒளிமங்கிய பிறகு அந்திவானத்தில் மேற்குத் திசையில் கீற்றாகப் புலப்பட்டுச் சிறிது நேரத்தில் மறைந்துவிடுகிற மூன்றாம் பிறையைக் காத்திருந்து தரிசிக்கின்ற சமய நம்பிக்கையாளர்களைப் பொருத்தவரை ஒவ்வொரு மூன்றாம் பிறையும் புனிதமானதே. ஆயினும், அவற்றையெல்லாம் அக்ஷய த்ரிதியை என அழைப்பதில்லை. எனவே எது அக்ஷய த்ரிதியை என ஆராயவேண்டியது நம் கடமையாகிறது. கி.பி. 1679ஆம் ஆண்டுக்குரிய தெலுங்குச் செப்பேடு ஒன்றில் சித்திரை மாதம் ரோகிணி நட்சத்திரத்தன்று அக்ஷய த்ரிதியை திதியின் போது ராகவேந்திர தீர்த்தரின் மகன் யோகீந்த்ர தீர்த்த ஸ்ரீபாதருக்குத் தாமிரபரணி நதிக்கரையில் ஆறாம்பண்ணை என்ற ஊரில் மட மான்யமாக நிலம் வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது (பெங்களூர் ராகவேந்திரர் மடத்திலிருந்து வெளியிடப்பட்ட 10ஆவது செப்பேடு). எனவே சித்திரை மாததில் ரோகிணி நட்சத்திரத்தில் அமைகின்ற த்ரிதியைத் திதி அக்ஷய த்ரிதியை என அழைக்கப்பட்டதெனத் தெரிய வருகிறது. ஆனால், கி.பி. 1875ஆம் ஆண்டைச் சேர்ந்த தஞ்சாவூர் மானோஜியப்பா தெரு அண்ணா சத்திரம் தண்ணீர்த் தொட்டிக் கல்வெட்டு "வைகாசி மாதத்தில் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் அக்ஷய த்ரிதியை உதய கருட வாகனோத்ஸவம்" எனக் குறிப்பிடுகிறது (செ. இராசு, தஞ்சை மராட்டியர் கல்வெட்டுகள் பக்கம் 21, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சை, 1987). மேற்குறித்த இரண்டு கல்வெட்டுகளுமே திருமால் வழிபாடு தொடர்பான கல்வெட்டுகளாயினும், முன்னது துவைத சம்பிரதாயத்தையும், பின்னது விசிஷ்டாத்வைத சம்பிரதாயத்தையும் சேர்ந்தவையாகும். பிந்தைய கல்வெட்டில் வைகாசி மாதத்தில் எந்த நட்சத்திரத்தில் அக்ஷய த்ரிதியை கொண்டாடப்பட்டது என்ற குறிப்பு இடம்பெறவில்லை. ஆயினும், வைகாசி மாதத்தில் வளர்பிறை த்ரிதியை திருவாதிரை நட்சத்திரத்தில்தான் வரும். எனவே இப்போது அக்ஷய த்ரிதியை என்பது சித்திரை ரோகிணியில் வருவதா வைகாசி திருவாதிரையில் வருவதா என்ற முதன்மையான கேள்வி எழுகிறது. சித்திரை ரோகிணி என்பது சூரியன் சந்திரன் ஆகிய இரண்டு கோள்களும் தத்தமது உச்ச வீட்டில் இருக்கும் போது நேர்கிற த்ரிதியைத் திதியாகும். அதாவது மேஷத்தில் சூரியனும், ரிஷபத்தில் சந்திரனும் இடம்பெற்றிருக்கும் போது நிகழ்கிற த்ரிதியை. வைகாசி திருவாதிரை என்பது இத்தகைய கோள்களின் உச்ச ஸ்தானம் சார்ந்த நிகழ்வன்று. ஆனால், ஆதிரை நட்சத்திரத்தில் மூன்றாம் பிறை என்பது சிவ வழிபாட்டோடு பின்னிப் பிணைந்த ஒரு நிகழ்வாகும். சிவனை ஆதிரையான் எனப் பரிபாடல், கலித்தொகை ஆகிய சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. சிவன் தலையில் சூடிய பிறை நிலவு மூன்றாம் பிறையே என்பதும் மிகப் பழைய மரபாகும். எனவே, வைகாசி ஆதிரை என்பது சிவ வழிபாட்டுக்கு அடிப்படையான ஒரு புனித நாள் என்பதில் தவறில்லை. மேற்குறித்த இரண்டு வித நிகழ்வுகளையும் வரலாற்றுத் தராசில் வைத்து எடை போடும் போது வைகாசி ஆதிரையே வலிமையான ஒன்றாகத் தெரியவருகிறது. ஏனெனில், வைதிகப் புராண மரபின்படி நான்கு யுகங்களுள் தற்போது நடைபெறுகிற கலியுகம் மாசி மகத்தன்று தொடங்கிற்று என்றும் முதல் யுகமாகிய கிருத யுகம் அல்லது சத்ய யுகம் வைகாசி மாத சுக்ல பட்ச த்ரிதியையில் (அக்ஷய த்ரிதியை அன்று) தொடங்கிற்று என்றும் நம்பப்படுகின்றன. வைகாசி ஆதிரைக்கு வலிமை சேர்க்கின்ற வரலாற்றுச் செய்திகளை இனி ஆராய்வோம்.

அட்டமூர்த்தியும் ஆதிரை நாளும்

சிவன் எண்வகை வடிவினன் என்பது மிகப் பழமையான ஒரு கோட்பாடாகும். இதனை அஷ்டமூர்த்தித் தத்துவம் எனக் குறிப்பிடுவர். அஷ்டமூர்த்தி என்பது நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களும் சூரிய சந்திரரும், ஆன்மாவும் என்று சைவர்கள் குறிப்பிடுவர். எட்டாவதாக இடம்பெறும் தத்துவம் அறம் அதாவது தர்மம் என்று சங்க இலக்கியமாகிய பரிபாடலில் (வரி 3:4-5) குறிப்பிடப்படுகிறது. கி.பி. 5-6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மணிமேகலை (27: 89-90) யஜமானன் என்கிற யாகத்தீ வடிவத்தைக் குறிப்பிடுகிறது. வைதிக நெறி சார்ந்த சைவ சமயத்தில் இக் கோட்பாடே நெடுங்காலமாக நிலைத்திருந்தது. சைவ நாயன்மாராகிய திருநாவுக்கரசர் (கி.பி. ஏழாம் நூற்றாண்டு) "இருநிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானனாய் எரியும் காற்றுமாகி ஆகாயமாய் அட்டமூர்த்தியாகி" எனக் குறிப்பிடுகிறார். பிங்கலர் என்ற ஜைன முனிவரால் கி.பி. 10-11ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் பிங்கலநிகண்டு, அஷ்டமூர்த்தியின் எட்டாவது அம்சமாக யஜமானனுக்குப் பதிலாக ஆன்மாவைக் குறிப்பிடுகிறது. கி.பி. 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கருவூர்ச் சித்தரின் ஒன்பதாம் திருமுறைப் பாடல் ஒன்று ("அம்பரா அனலா அனிலமே...") இயமானனுக்குப் பதிலாக அணுவைக் குறிப்பிடுகிறது. கி.பி. 16-17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அதிவீரராம பாண்டியன் தமது கருவைப்பதிற்றுப்பத்து அந்தாதியில் (பாடல் 20), "ஆதவன் மதிபார் அனல் வெளிபுனல் கால் அருமறை எச்சனென்று எட்டுப் பேதமாம்" எனக் கூறுகிறார். யஜமானன் என்பது எச்சன் என்று கூறப்பட்டுள்ளது. கி.பி. 16-17ஆம் நூற்றாண்டில் சேய்ஞலூர் ஞானப்பிரகாசர் என்பவரால் கைக்கோளர் சமூகத்தவரின் வீரச்சிறப்புகளைப் புகழ்ந்து இயற்றப்பட்ட "வீர நாராயண விஜயம்" என்ற நூல், அஷ்டமூர்த்தித் தத்துவத்தில் எட்டாவது அம்சமாக "ஆவி"யைக் குறிப்பிடுகிறது. (வீர நாராயண விஜயம், பதிப்பு: ந. கந்தசாமி, ராசிபுரம் - 1986.) கி.பி. 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மொகலாய அரசன் முன்னிலையில் சைவத் துறவி குமரகுருபரர் சிவனது அஷ்டமூர்த்தித் தத்துவத்தை விளக்கிப் பேசுகையில், எட்டாவதாக இருக்கின்ற தத்துவம் ஆத்மா எனக் குறிப்பிட்டதாகச் சைவ சமய அறிஞர்கள் எழுதியுள்ளனர்[1]. எவ்வாறாயினும், இந்த எட்டு வகைப் பொருள்களுக்கும் உரிய நட்சத்திரங்கள் இவை இவை எனக் குறிப்பிடும் ஒரு மரபு உண்டு. இந்திர காளிய மேற்கோளாக நவநீதப் பாட்டியல் உரை குறிப்பிடுகின்ற விவரத்தின்படி, நீர் சதய நட்சத்திரத்துடனும், நிலம் கேட்டை நட்சத்திரத்துடனும், காற்று சுவாதி நட்சத்திரத்துடனும், நெருப்பு கார்த்திகை நட்சத்திரத்துடனும், ஆகாயம் ஓண நட்சத்திரத்துடனும், சூரியன் புனர்பூச நட்சத்திரத்துடனும், சந்திரன் மிருகசிரஸ் நட்சத்திரத்துடனும், இயமானன் பரணி நட்சத்திரத்துடனும் இணைத்துப் பேசப்படும். (நவநீதப் பாட்டியல் மூலமும் உரையும், உ.வே.சாமிநாத ஐயர் பதிப்பு, 1961, பக்கம் 20) இவ்விவரங்களை இத்தனை விரிவாக இங்குக் குறிப்பிடும் நோக்கம் சிவ வழிபாட்டின் அடிப்படைத் தன்மையாகிய அஷ்டமூர்த்தித் தத்துவத்தில் ஆதிரை நட்சத்திரத்துக்கு இடமில்லை என்பதை உணர்த்துவதற்காகத்தான். அஷ்ட பைரவர் எனக் குறிப்பிடுவதும் பரணி நட்சத்திரத்தை பைரவருக்கு உரியதாகக் கொள்வதும் மரபாக இருப்பதால் அஷ்ட மூர்த்தித் தத்துவம் பைரவ வழிபாட்டையே அடிப்படையாகக் கொண்டது என்பதும் யஜுர்வேதத்தில் இடம்பெறுகிற யாகத்தீ வடிவ ருத்திர வழிபாட்டுக் கூறுகளுடன் பைரவ வழிபாடு இணைந்ததன் விளைவாக உருவான பக்தி இலக்கியக் காலச் சிவ வடிவத்தின் இயல்புகளாகப் புனையப்பட்டவையே மேற்குறிப்பிட்ட விவரங்கள் என்பதும் தெளிவாகின்றன. அவ்வாறெனில், ஆதிரை நட்சத்திரமும் மூன்றாம் பிறை நிலவும் சிவவழிபாட்டின் அடிப்படை அம்சங்கள்தாமா என்று ஆராயப்பட வேண்டிய நிலை உள்ளது. சங்க இலக்கியமான பரிபாடல், "ஆதிரை முதல்வனிற்கிளந்த நாதர் பன்னொருவர்" (பா. 8:6-7) என்றும், "பதினொரு கபிலரும்" (பா. 3:7) என்றும் குறிப்பிடுவதிலிருந்து ஏகாதசருத்ரர் என்ற கருத்தோட்டம் ஆதிரை நட்சத்திரத்தோடு தொடர்புடையது என்று தெரிகிறது. கலித்தொகை (150: 17-20) பிள்ளைப் பிறையைச் சடையிலணிந்த சிவனைப் "புதுத்திங்கட்கண்ணியான்" என்றும் "ஆதிரையான்" என்றும் குறிப்பிடுகிறது. செந்நிறத்தைக் கபில நிறம் அல்லது ருத்ர நிறம் எனக் குறிப்பிடுவர் . எனவே இவ்வருணனைகளெல்லாம், கபில நிறத்தவனாகிய அக்னி வடிவ - ருத்ரனைக் குறிப்பிடுகின்றன என்பதில் ஐயமில்லை. ஆயினும் இவனது வடிவம் வைதிக மரபினுள் முழுமையாக ஈர்த்துத் தன்மயமாக்கிக் கொள்ளப்பட்ட சிவ வடிவமாகவும் தெரியவில்லை. அப்படியானால், இந்த ஆதிரையானின் அடிப்படை வடிவம் எது என்ற கேள்வி எழுகிறது.

அஹ¤ரமஸ்தாவும் ஆதிரையானும்

மேற்குறித்த கேள்விக்கு விடை தேடுவதென்றால், பாரசீக சமய நூலாகிய "ஜெண்ட அவெஸ்தா" நூலினையும் பாரசீகக் கிளை மொழியாகிய பஹ்லவி மொழியில் எழுதப்பட்டுள்ள ஜொராஸ்டிர சமய நூல்களையும் நாம் புரட்டிப் பார்க்க வேண்டியிருக்கும். அஹ¤ரமஸ்தா (அசுரர் தலைவன்) என்ற பெயரில் வழிபடப்பட்ட வருணன் என்ற முழுமுதற் கடவுளின் புதல்வன் ஆதர் ஆவான். நிலவுலகில் இவனது வடிவம் நெருப்பு. வானமண்டலத்தில் இவன் ஆதர் என்ற நட்சத்திரமாக இருக்கிறான். வளர்பிறைக்கால மூன்றாம் பிறை இந்த ஆதர் நட்சத்திரத்துடன் இணைந்து மேற்றிசையில் அந்திக் காலத்தில் சிறிது நேரம் தோன்றி மறையும் போது, இயற்கையில் என்னென்ன நிகழும் என்று பஹ்லவி நூல்கள் குறிப்பிடுகின்றன. அப்போது பருவக் காற்று வீசத் தொடங்கும்; அபாம் நபாத் (அப்புவின் நாபி அல்லது தண்ணீரின் கொப்பூழில் பிறந்தவன்) உதிப்பான்; மலைகளை உடைத்துக் கொண்டு வெள்ளம் பெருக்கெடுக்கும்; காட்டு மலர்கள் மலரும் என்றெல்லாம் அந்நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது[2]. ஆதர் எனப்பட்ட ஆதிரை நட்சத்திரத்துடன் இணைந்து மூன்றாம் பிறை தோன்றுவதென்பது வைகாசி மாதத்தில்தான் நிகழும். முழுநிலவுக் காலத்தை மாதத்தின் முடிவாகக் கொள்கின்ற பூர்ணிமாந்த முறையின்படி சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்துடன் முடிவடையும். 27 நட்சத்திரங்களை நிலவின் ஒரு சுழற்சிக் காலமாகிய 30 நாள்களுக்குப் பிரித்து வழங்க வேண்டியதிருப்பதால், வைகாசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் அமாஸ்யம் (மதிமறைவு) நிகழ்ந்த பின்னர் ஆதிரை நட்சத்திரத்துடன் த்ரிதியைத் திதியும், சித்திரையிலிருந்து மூன்றாவது நட்சத்திரமாகிய விசாக நட்சத்திரத்துடன் பூர்ணிமையும் இணைந்து நிகழ்கிற வகையில் கணக்கீடு செய்யப்படும். இவ்வாறு வைகாசி மாத வளர்பிறை மூன்றாம் (த்ரிதியை) திதி திருவாதிரை நட்சத்திரத்துடன் இணைந்து தோன்றுவது அம்மாதத்தின் 18ஆம் தேதியன்று நிகழும். இன்றைய ஆங்கிலக் காலண்டர்படி, ஜூன் மாதத் தொடக்கத்திற்கு இது பொருந்தி வரும். மலையாளத்தில் இதனை இடவப்பாதி என்று குறிப்பிடுவர். ரிஷப மாதமாகிய வைகாசி மாதத்தின் இடைப்பகுதி என்று இதற்குப் பொருள். இக்காலகட்டத்தில்தான் தென் மேற்குப் பருவக் காற்று தொடங்கும். தென்மேற்குப் பருவக்காற்று வீசுகின்ற பகுதிகளில் கோடை இடி மின்னலுடன் பருவ மழை தொடங்கும். மேகங்களினிடையே தோன்றும் மின்னல் கொடிதான் அபாம் நபாத் என்ற உருவகமாகப் பஹ்லவி நூல்களில் குறிப்பிடப்பட்டது. நெருப்பு என்பது படைப்பியக்கத்தைக் குறிக்குமாதலால், வருணனால் படைக்கப்பட்டவன் அதாவது அவனது மகன் என மின்னல் உருவகப்படுத்தப்பட்டது. மலையை உடைத்துக் கொண்டு வெள்ளம் பெருகுவது என்பதையும் காட்டு மலர்கள் மலர்வது என்பதையும் பொதிய மலை, திரிகூடமலைப் பகுதியில் குற்றாலம் அருவியில் தண்ணீர் வீழ்வது தொடங்குகின்ற நிகழ்வுடனும் நீலகிரி மலையில் மலர்க் கண்காட்சி நடத்தப்படுகின்ற நிகழ்வுடனும் தொடர்புபடுத்திப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். ஆதிரையான் வழிபாட்டில் தலைமை இடமாக ஜொராஸ்டிர சமய நூல்களில் குறிப்பிடப்படும் இடம் ஆதரோபாதகான் என்பதாகும். இது இன்றைய அஜர்பைஜான் ஆகும். ஆதரோபாதகான் என்பதற்குப் பாதாளத்தின் நெருப்பு என்று பொருள். அப்பகுதியில் நிலத்தடியிலிருந்து எரிவாயு வெளிப்படும் நிகழ்வுகள் நடைபெற்றமையால் இப்பெயர் சூட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. ஒருவகையில் பார்த்தால் அஜர்பைஜான் பகுதியைப் பொருத்தவரை அஹ¤ரமஸ்தா (ஓர்மஸ்த்) என்ற பெயரில் வழிபடப்பட்ட வருணனின் மகன் ஆதர் என்ற நெருப்புக் கடவுள் என்ற உருவகம் கூட, மண்ணுக்கடியிலிருந்து கிடைக்கின்ற திரவ வடிவிலான எரிபொருள்களையும், வெந்நீர் ஊற்றுகளையும் குறிப்பிட்டிருக்க வாய்ப்புண்டு.

சைவ சமயத்தில் ருத்ரனின் முதன்மையான வடிவம் அக்னியாகவே கருதப்படுகிறது. வைணவ மரபின்படி, விஷ்ணு நீர் வடிவினன் என்பதால் அவர் நாராயணன் எனப்படுவார். திருமாலுடன் திருவோண நட்சத்திரத்தையும், சிவனுடன் திருவாதிரை நட்சத்திரத்தையும் தொடர்புபடுத்துவது மரபு. 27 நட்சத்திரங்களில் இவை இரண்டுக்கு மட்டுமே திரு என்ற அடைமொழி சேர்க்கப்படுகிறது. திருவோண நட்சத்திரம் தண்ணீரின் அம்சம் உடையது என்றும், திருவாதிரை நட்சத்திரம் நெருப்பின் தன்மை உடையது என்பதும் இந்து சமய நம்பிக்கைகளாகும். (நாம் முன்னர்க் குறிப்பிட்ட நவநீதப்பாட்டியல் உரை மேற்கோளின்படி, விஷ்ணு நீல நிற விண்ணுடன் தொடர்புபடுத்தப்படுவார்.) எனவே, ஆதர் என்ற தெய்வத்தை நெருப்பு வடிவில் பாரசீக சமயத்தவர் வழிபடுவது வைதிக மரபுக்கும் ஏற்புடைய செயல்பாடே ஆகும். இது பாரசீக சமயத்தில் யாகத்தீயாக - யஜமானனாகக் கருதப்படுவதில்லையாயினும் படைக்கின்ற ஆற்றலாகக் கருதப்பட்டது. ஆதர் என்ற நெருப்புக் கடவுளை வழிபடுகின்ற பூசாரி அத்ரவன் எனப்பட்டார். குஜராத் பகுதியில் வழங்கிய பாரசீகக் கிளை மொழியாகிய பாசண்ட மொழியில் கிறிஸ்து சகாப்தத் தொடக்க நூற்றாண்டுகளில் இந்தத் தீ வழிபாட்டுப் பூசாரி அத்ரணன் என அழைக்கப்பட்டார் எனச் சில குறிப்புகளால் தெரிய வருகிறது. அத்ரணன் என்ற இச் சொல்லே தமிழில் அந்தணன் என வழங்குகிறது. ஆதர் என்ற பாரசீகப் பெயருடன் ஆதிரை என்ற தமிழ் வடிவமே நெருக்கமுடையதாகத் தோன்றுகிறது. சமஸ்கிருதத்தில் ஆர்த்ரா என்று இந்த நட்சத்திரம் வழங்கப்பட்டது. நாம் இங்குக் குறிப்பிட்டுள்ள ஆய்வுக் கருத்து பல்வேறு தளங்களில் ஆராய்ந்து நிலை நாட்டப்படவேண்டிய ஒன்றாகும். இப்போதைக்கு ஒரு தொடக்கம் என்றுதான் இதைச் சொல்ல முடியும். தமிழகச் சிவ வழிபாட்டு மரபில் பாரசீக சமயத்தின் ஒரு கிளையாகிய குஜராத்திப் பாசண்ட சமய மரபின் தாக்கம் எந்த அளவுக்கு இருந்துள்ளது என்பதற்கான ஒரு மேலோட்டமான சான்றாக இதனை எடுத்துக் கொள்ளலாம்[3]. மேலைக் கடற்கரைப் பகுதியாகிய மராட்டிய மாநிலப் பகுதிகளில் அக்ஷய த்ரிதியை முதன்மையான ஒரு விழாவாக நீடித்து வருவது பஹ்லவி மொழிப் புராணத் தொடர்பின் எச்சமே எனலாம்.

அரும்பெறல் ஆதிரையான் அணி

இனி, அக்ஷய த்ரிதியைக்கும் நகை அணிவதற்கும் என்ன தொடர்பு எனப் பார்ப்போம். இது தொடர்பாகச் சிந்திக்கும் போது இரண்டு கருத்துகள் தோன்றுகின்றன. ஒன்று நாம் மேலே கண்டது போல மின்னல் கொடி என்பது ஆதிரையானின் ஓர் அம்சமாகும். கலித்தொகை (150: 20-21) பாடலில் "அரும் பெறல் ஆதிரையான் அணி பெற மலர்ந்த பெருந் தண் சண்பகம் போல" என்ற குறிப்பு காணப்படுகிறது. சண்பகம் ஒரு காட்டு மலராகும். குற்றாலத்தில் சண்பக அடவி என்றே ஒரு காட்டுப் பகுதி உண்டு. அபாம் நபாத் எனப்பட்ட மின்னல் கொடியின் ஒளியில் காட்டு மலர்கள் மலர்வது இயல்பு. குறிப்பாக, மின்னல் ஒளி பட்டுத்தான் தாழை மடல் விரியும். மின்னலைக் குறிக்கும் கேது என்ற சொல்லுடன் தொடர்புடையதே "கைதை" என்ற சொல்லாகும். சமஸ்கிருதத்தில் கேதகி என்றும், மராட்டி மொழியில் கேட்கி என்றும் இச்சொல் வழங்கும். இவை தாழம் பூவுக்குரிய பெயர்களாகும். ஆஷாட (ஆடி) மாதத்தில் கார்காலம் தொடங்கும்போது மின்னலால் தாழை மலர்கிறது எனக் கவி காளிதாசனின் மேகதூதம் (1: 2-3) குறிப்பிடுகிறது. கி.பி. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பி இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதியில் கணநாத நாயனார் பிறந்த ஊராகிய சீர்காழியைக் குறிப்பிடும்போது, "கொண்டல் கொண்டேறிய மின்னுக்குக் கோல மடல்கடொறும் கண்டல்வெண் சோறளிக்குங்கடற் காழி" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. "மேகங்களினிடையே தோன்றுகின்ற மின்னலுக்குப் படையலாகத் தாழை தனது மடலை விரித்து மகரந்தமாகிய சோற்றினைப் படைக்கின்ற சீர்காழி" என்பது இதன் பொருளாகும்[4]. தாழை மடல் பொன்னிறமுடையதாகும். தாழையும் சிவ பெருமானால் விரும்பிச் சூடப்பட்டது என்பதற்கு சைவத் திருமுறைகளில் ஆதாரம் உள்ளது[5]. சைவ சமயத்தில் கோயில் என்றாலே சிதம்பரத்தைத்தான் குறிக்கும். சிதம்பரம் நடராசர் கொன்றையும் செண்பக மாலையும் சூடியதாக அபிராமி பட்டர் தமது அபிராமி அந்தாதியில் குறிப்பிடுகிறார். ("தாரமர் கொன்றையும் செண்பக மாலையும் சாத்தும் தில்லை ஊரர்"). திருவாரூர் அருகிலுள்ள முதன்மையான பைரவ வழிபாட்டுத் தலமாகிய திருச்செங்காட்டங்குடியில் சிறுத்தொண்டர் சிவப்பேறு பெற்ற இருபத்தோராம் நாள் சிவ பெருமான் செண்பகப்பூ மணம் வீச பவனி வருவார் என்று நம்பப்படுகிறது. ஆண்டுதோறும் சித்திரைப் பரணி கழிந்த இருபத்து ஒன்றாம் நாள் திருவோண நட்சத்திரத்தன்று செண்பகப்பூ உற்சவம் கொண்டாடப்படுகிறது. (ஸ்ரீ புஷ்பரதீசுவரர் சிவமஞ்சரியின் 46ஆவது மலர், திருவாவடுதுறை ஆதீன வெளியீடு, 2004 தீபாவளித் திருநாள்) சண்பகமலர் பொன்னிறமுடையது. சிவபெருமானின் சடையில் அணிவதற்குரியதே. ஆயினும் சீதையின் சாபத்தைப் பெற்றதால் தாழையும், நாரதரின் சாபத்தைப் பெற்றதால் சண்பகமும் சிவ வழிபாட்டில் விலக்கப்படுகின்றன எனப் பிற்கால நூல்களான சிவபுராணமும், சிவ மகாபுராணமும் குறிப்பிடுகின்றன (பக்கம் 811 மற்றும் 727, "அபிதான சிந்தாமணி" ஆ. சிங்காரவேலு முதலியார், Asian Educational Services, Madras 1988). தமிழக வழிபாட்டு மரபில் சிவன் கொன்றை மாலையையே சிறப்பாகச் சூடியதாகக் குறிப்பிடுவர். கொன்றை மலரும் பொன்னிறமுடையதே. "கண்ணி கார் நறுங் கொன்றை வண்ண மார்பில் தாரும், அ·தே" என்று புறநானூற்றுக் கடவுள் வாழ்த்து குறிப்பிடும். எனவே சிவபெருமான் பொன்னிற மலர்களை விரும்பி அணிபவர் என்பது புலனாகும். தமிழகச் சைவ வழிபாட்டு மரபில் சிவன் கொன்றை சூடியாகவே காட்சியளிக்கிறார். சேய்ஞலூர்ப் பிள்ளை எனப்படும் சண்டேஸ்வரருக்கு சிவன் தாம் அணிந்திருந்த கொன்றை மாலையைச் சூட்டிச் "சண்டேச பதம்" எனப்படும் பதவி அளித்ததாகத் தேவாரமும் பெரியபுராணமும் குறிப்பிடும். சங்ககால இலக்கியமான கலித்தொகையின் இறுதிப்பாடல் "பிறங்குநீர் சடைக்கரந்தான் அணி அன்ன நின்நிறம்", "உருவ ஏற்று ஊர்தியான் ஒள் அணி நக்கன்னநின் உரு", "புதுத்திங்கட் கண்ணியான் பொன்பூண் ஞான்று அன்ன நின் கவின்" என்றெல்லாம் தலைவியின் பொன்வண்ண எழிலைப் புகழ்ந்து உரைக்கின்றது. இவ்வரிகளிலெல்லாம் கொன்றைப் பூ பொன்னாக அல்லது பொன் நகையாக உருவகிக்கப்பட்டுள்ளது[6]. இவ்வாறு சிவபெருமானுக்கும் கொன்றைக்கும் உள்ள உறவு விதந்து ஓதப்பட்டாலும் பலவித மலர்கள் அணிவதையும் சிவன் விரும்பவே செய்கிறார் என்பது சைவத் திருமுறைகளால் தெரிய வருகிறது. "ஏற்று வெல்கொடி யீசன்றனாதிரை நாற்றஞ் சூடுவர் நன்னறுந்திங்களார் நீற்றுச் சந்தன வெள்ளை விரவலார் வேற்றுக் கோலங் கொள் வீழிமிழலையே" (ஐந்தாம் திருமுறை திருவீழிமிழலைப் பதிகம் பாடல் 2) என்ற தேவாரப் பாடலில் திருநாவுக்கரசர், யோகியான சிவபெருமான் போகியின் கோலத்தை ஏற்றுப் பலவித நறுமலர்களையும் சந்தனத்தையும் புனைந்து ஆதிரை நாளில் தோன்றுகின்ற காட்சியைக் குறிப்பிடுகிறார். மேலும், அவரே தமது திருவாரூர்ப் பதிகத்தில் "வீதிகள் தோறும் வெண்கொடியோடு விதானங்கள் சோதிகள் விட்டுச் சுடர் மாமணிகள் ஒளிதோன்றச் சாதிகளாய பவள முத்துத் தாமங்கள் ஆதி ஆரூர் ஆதிரை நாளாலது வண்ணம்" என்ற பாடலில் நறுமண மலர் மாலைகள் மட்டுமின்றிப் பவளங்களும் முத்துகளும் விரவிக் கோத்த மாலையையும் ஆதிரை நாளன்று சிவபெருமான் அணிந்து வண்ணமுறக் காட்சியளிக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளார். சைவத் திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையில் "அணியுடை ஆதிரை நாள்" என்ற ஒரு குறிப்பு காணப்படுகிறது (9: 29.12). பிள்ளைப் பிறை ஆதிரையான் தனக்கு அணியாக அல்லது மாலையாக மின்னல் கொடியைக் கொள்வது போல, அவனை வழிபடுபவர்களும் ஒளி மிகுந்த பொன் நகைகளை எய்துவர் என்ற ஒப்புமை அடிப்படையிலோ, அவன் அணிகிற - மின்னலால் மலர்கிற பொன்னிற மலர்களைப் போன்ற நகைகளை அடைவர் என்ற அடிப்படையிலோ இத்தகைய நம்பிக்கை தோன்றியிருக்கலாம். ஆற்றுப் பெருக்கு என்பதே வளமைச் சடங்குகளோடு தொடர்புடையாதாகும். குடும்பம் தழைக்க வேண்டும், மண வாழ்வு நிலைக்க வேண்டும் என்ற வேண்டுதலின் அடிப்படையில் ஆடிப் பெருக்கு நாளன்று தாலி பெருக்கும் சடங்கு செய்வது போல, வைகாசி மாத ஆதிரை நாளிலும் தாலி பெருக்கும் சடங்கு இந்தியாவின் மேலைக் கடற்கரைப் பகுதிகளிலோ, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலோ நிகழ்ந்திருக்க வேண்டும். குடகு மலையில் உதிக்கின்ற காவிரியின் பிறந்த நாளாக ஆதிரை நாளைக் 'காவேரி மஹாத்மியம்' (சரஸ்வதி மகால் நூலகச் சுவடி) குறிப்பிடுகிறது. எனவே, பருவ மழை தொடங்குவதற்கும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் உதிக்கின்ற ஆறுகளில் நீர்ப்பெருக்கு ஏற்படுவதற்கும் உரிய நாளாகிய வைகாசி ஆதிரை நாளன்று மங்கல நாண் உள்பட அணிகலன்களைப் பெருக்கிக்கொள்வதென்பது நம்பிக்கை சார்ந்த சடங்காகவும் தோன்றியிருக்கலாம். புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கை வாசல் கல்வெட்டில் (Pudukkottai State Inscriptions - 139), வைகாசி ஆதிரை நாள் விழா என்பது விளைச்சல் தொடர்பான விழாவாகவே தோன்றியது என்பதற்கான ஆதாரம் உள்ளது. மழை வளம் என்ற கருத்தோட்டமும், ஆற்று நீர்ப்பாசனத்தால் விவசாயம் செழித்தல் என்ற சமூகப் பொருளியல் நிலைப்பாடும் இந்த வைகாசி ஆதிரை நாள் ஆடல் மரபுடன் தொடர்புடையவையாகக் காணப்படுகின்றன. ஆறுகளைத் தெய்வமாகத் தொழுத முன்னோர், ஆற்றுப் பெருக்குடன் குடும்ப வாழ்க்கையின் நலன்களையும் தொடர்புபடுத்திப் பார்த்ததால்தான் ஆடிப்பெருக்கின் போது தாலி பெருக்கும் சடங்கு நிகழ்த்தப்படும் வழக்கம் தோன்றியது. சரியாகச் சொல்வதானால் ஆடி மாதம் 18ஆம் நாளன்று தாலி பெருக்கும் சடங்கினைச் செய்வது என்பதேகூட வைகாசி மாதம் 18ஆம் நாளன்று (பூர்ணிமாந்தக் கணக்கீட்டின்படி வைகாசி மாத வளர்பிறை ஆதிரை நாளன்று) தாலி பெருக்கும் சடங்கு செய்து வந்த மேலைக் கடற்கரைப் பகுதி மரபின் பிற்காலத் திரிபாகவே இருக்கவே வேண்டும். செண்பகமாறன் என்ற பாண்டிய குல முன்னவர் பெயரும் பொதிய மலையுடன் தொடர்புடையதே ஆகும். பிற்காலத்துக் கேரள அரச வம்சத்தவருள் செண்பகராமன் என்ற பெயர் அதிகமாக வழங்கியுள்ளது. இவையெல்லாமே மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை அமைப்புடன் தொடர்புடைய சொல் வழக்குகளே எனத் தோன்றுகிறது. மேலும் சண்பகம் என்பது வசந்த (இளவேனில்) காலத்தில் மலர்வது எனக் காளிதாசன் தனது ரிதுசம்ஹாரத்தில் (6:5) குறிப்பிடுகிறார். எனவே சண்பகம், தாழை, கொன்றை இவையெல்லாமே வேனிற் பருவத்துடனும் தென்மேற்குப் பருவக் காற்றுடனும் தொடர்புடைய மலர்களாகலாம்.

ஆதிரை நாள் வண்ணமும் சேயோன் வழிபாடும்


(படம்: சிவனைப் போன்ற தோற்றமுடைய முருகன் - ஆந்திர மாநிலம் சேஜர்லா)

சங்ககாலக் குறிஞ்சி முல்லை ஆகிய நிலங்களுடன் தொடர்புடைய சேயோன் வழிபாட்டிலும், மாயோன் வழிபாட்டிலும் கடம்பு கொன்றை ஆகியன தொடர்புபடுத்திப் பேசப்படுகின்றன. சங்க இலக்கியத்தில "கடம்பமர் கடவுள்" எனச் சேயோன் குறிப்பிடப்படுகிறான். "கார்க் கடப்பந்தார் எம் கடவுள்" எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடும் (3:24:14). கார்க் கடப்பந்தார் என்பது கார் காலத்தில் இடி இடிப்பதால் மலர்கின்ற கடம்ப மலர்களால் கட்டப்பட்ட மாலை எனப் பொருள்படும். ஆதிரை நாளுடன் முருகனைத் தொடர்புபடுத்துவது இயலாத ஒன்றே. ஆயினும், சங்க காலச் சேயோன் வழிபாட்டுடன் நாம் மேலே கண்ட, பஹ்லவி மொழிப் புராணச் செய்திகளான காட்டு மலர்களை மலர்வித்தல், மலைகளை உடைத்து ஆறுகளைப் பெருக்கெடுக்கச் செய்தல் போன்றன தொடர்புடைய அம்சங்களாகவே காணப்படுகின்றன. குறிஞ்சிப் பாட்டில் தலைவன் வருகை வருணிக்கப்படுகையில் "வண்ண வண்ணத்த மலராய்பு விரைஇய தண்ணறுந் தொடையல் வெண்போழ்க் கண்ணி நலம்பெறு சென்னி நாமுற மிலைச்சி " (வரி 114-116) எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு உரை கூறுகையில் "பல நிறங்களையும் பல சாதிகளையும் உடைய மலர்களை ஆராய்ந்து தொடுத்த தண்ணிய நறிய தொடையலையும் வெள்ளிய தாழை மடலிலே யுடைத்தாகிய கண்ணியையும் முருகனென்று அச்சமுறும்படி சூடி" என நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார். (பக்கம் 194-5, பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும் - உ.வே. சாமிநாதய்யர் பதிப்பு, 1974.) குறிஞ்சிப்பாட்டில்தான் 99 வகை மலர்கள் குறிப்பிடப்படுகின்றன என்பது கவனிக்கத்தக்க ஒரு செய்தியாகும். முருகு என்ற சொல்லே மணம் என்ற பொருளுடையதாகும். "முருகமர் பூ முரண்கிடக்கை" எனப் பட்டினப்பாலை (வரி 37) குறிப்பிடுகிறது[7]. மலைகளை உடைத்துக் கொண்டு ஆறுகளைப் பெருக்கெடுக்கச் செய்தல் என்பதும் இடி விழுவதாலேயே மலைகளில் சுனைகள் தோன்றுகின்றன என்ற பழங்குடி நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதாகும். "குருகொடு பெயர் பெற்ற மால்வரை யுடைத்து மலையாற்றுப் படுத்த மூவிரு கயந்தலை" எனச் செவ்வேள் பற்றிய பரிபாடல் (5:9-10) குறிப்பிடுகிறது. இது மலைகளிலிருந்து ஆறுகளைப் பெருக்கெடுக்கச் செய்த அற்புதச் செயல் பற்றிய ஒரு வர்ணனையே ஆகும். "திறல் வேல் நுதியிற் பூத்த கேணி விறல் வேல் வென்றி வேலூர்" என்ற சிறுபாணாற்றுப்படை (172-3) வரிகளுக்கு முருகனின் வேல் நுனியால் உருவாக்கப்பட்ட கேணியை உடைய வேலூர் என்றே உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். சேயாறு (செய்யாறு) இவ்வாறு முருகனது வேலால் மலையை உடைத்து உருவாக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. (பக்கம் 733, "அபிதான சிந்தாமணி", ஆ. சிங்காரவேலு முதலியார்.) இவ்வாறெல்லாம் இருப்பினும் முருகனைக் கார்த்திகை நட்சத்திரத்துடன் தொடர்புபடுத்துவதான் மரபாக இருந்து வந்துள்ளது. மட்டுமின்றி, வருணன் மகன் அக்னி என்ற கருத்தோட்டத்தின்படி, முருகனை பிரம்மாவின் மகனாகவும் குபேரனின் மகனாகவும் வெவ்வேறு வகைகளில் சித்திரித்து வந்ததன் படிநிலை வளர்ச்சியாக முழுமுதற் பரம்பொருளாகிய சிவபெருமானின் மகன் என்ற நிலையை எய்தி அத்துடன் நிறைவு கொள்ள வேண்டியதாயிற்று. "நம்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்" என அப்பர் பெருமான் குறிப்பிடுவதைப் பார்க்கும்போது கெளமாரம் என்ற சமய மரபு, கி.பி. ஏழாம் நூற்றாண்டு அளவிலேயே தனது தனித்தன்மையைப் பெருமளவு இழந்து விட்டது என்பது புலனாகிறது. கடம்பமர் கடவுளாகிய கந்தன் குறிஞ்சி நிலக் கடவுளாக வட்டார அளவில் மட்டும் செல்வாக்குப் பெற்ற தெய்வமாக நின்றுவிட்டது போன்றே முல்லை நில வேட்டுவர்-ஆயர் வழிபாட்டு மரபாகிய பைரவ மரபும் சைவ சமயத்தின் அகச் சமயப் பிரிவுகளுள் ஒன்றாகச் சுருங்கிப் போயிற்று. "கரந்தை சூடி" எனச் சிவபெருமானைக் கி.பி. 12ஆம் நூற்றாண்டைய இலக்கியமான கம்பராமாயணம் குறிப்பிடுகின்றது (யுத்த காண்டம் இராவணன் சோகப்படலம் பாடல் 11). கரந்தை என்பது திருநீற்றுப் பச்சிலை ஆகும். சிவ பெருமானை இவ்வாறு குறிப்பிடுவதன் பின்னணி என்னவெனில் முல்லை நிலத்து ஆயர் மரபாகிய ஆநிரை காவல் மரபினைச் (கோரக்ஷகன் அல்லது கோரக்கன் = கோர்க்கா வடிவமாகிய பைரவன்) சிவ வழிபாட்டுடன் இணைத்ததன் விளைவே ஆகும்[8]. மழைக் காலத்தின் உட்பிரிவுகளாகிய கார்காலமும், கூதிர்காலமும் முல்லைக்கும் குறிஞ்சிக்கும் உரிய முதற் பொழுதுகள் ஆகும். எனவே, சிவ வழிபாட்டுடனும் சேயோன் வழிபாட்டுடனும் கார்காலத்தில் மலர்கின்ற அல்லது மின்னலால் மலர்கிற மலர்கள் உறவு உடையனவாகவே சித்திரிக்கப்பட்டு வந்தன. இந்த இலக்கிய மரபுப் பின்னணி காட்டுமலர்களை மலர்விக்கும் மூன்றாம் பிறை ஆதிரையான் வழிபாட்டுக்கும் பொருத்தமுடையதாக அமைந்திருப்பதால் ஆதிரை நட்சத்திரத் தொடர்பு சிவ வழிபாட்டின் அடிப்படை அம்சமாக ஏற்றுக் கொள்ளப்படுவதில் இடர்ப்பாடுகள் எவையும் நேரவில்லை.

வைகாசி ஆதிரை - கல்வெட்டு ஆதாரங்கள்

சைவ சமயத்தில் ஆழ்ந்த பிடிப்பும், சமய அனுபவமும் உள்ளவர்கள் சிவனின் திருநடனம் நிகழ்ந்த மார்கழித் திருவாதிரை நாளையே சிவனுடைய ஆதிரை நாளாகக் கருதுவார்களே தவிர, மூன்றாம் பிறை ஆதிரை நாளை முதன்மையானதாக ஏற்க மாட்டார்கள். மார்கழித் திருவாதிரை நாளென்பது சைவ சமய நாயன்மார்களில் குரு ஸ்தானத்தை வகிக்கின்ற திருஞானசம்பந்தரால் மயிலைப் பதிகத்தில் முதன்மையான ஒரு திருவிழா நாளாகக் குறிப்பிடப்படுகிறது ("கபாலீச்சுரம் அமர்ந்தான் ஆதிரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்" - இரண்டாம் திருமுறை, மயிலைப் பதிகம், பாடல் 4). மார்கழித் திருவாதிரை என்ற குறிப்பு இப்பாடலில் இல்லையாயினும் இதற்கு முந்தைய பாடலில் கார்த்திகை விளக்கீடு விழாவும், அடுத்த பாடலில் தைப்பூச விழாவும் குறிப்பிடப்படுவதால் இப்பாடலில் குறிப்பிடப்படும் ஆதிரை நாள் மார்கழித் திருவாதிரை என்பது எளிதில் முடிவு செய்யத்தக்கதே. ஆயினும், மார்கழி மாதப் பூர்ணிமை நாள் என்பது திருவாதிரை நட்சத்திரத்திற்கு முந்தைய நட்சத்திரமாகிய மிருகசிரஸ் நட்சத்திரத்தன்று நிகழ்வதாகும். மார்கசீரிஷ என்ற பெயரே மார்கழி எனத் தமிழில் திரிந்துள்ளது. சைவ சமயத்தின் தலைமை இடமாகக் கொள்ளத்தக்க நடன சபாபதியின் அம்பலமாகிய சிதம்பரத் திருத்தலத்தில் திருவாதிரைக்கு முதல் நாளாகிய மிருகசிரஸ் நட்சத்திரத்தன்றுதான் தேர்த் திருவிழா நடைபெறுகின்றது. எனவே, மார்கழித் திருவாதிரை என்பது சோதிட - வானநூல் அடிப்படையிலும் சைவ சமய வழக்குகளின்படியும் முழுமையான ஒரு திருநாளாக ஏற்றுக் கொள்ளத் தக்கதா என்பது ஐயத்துக்குரியதே[9]. ஆனால், வைகாசி மாத ஆதிரை என்பது பெருந்திருவிழா எனப்பட்ட வைகாசி விசாகத் திருவிழாவின் கால்கோள் நாளாகக் கருதிப் பின்பற்றப்பட்டு வந்தது என்பதைத் தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டுக் குறிப்புகளிலிருந்து நாம் உய்த்துணர முடிகிறது. "தஞ்சை ராஜராஜீஸ்வரம் உடையார் திருக்கோயிலில் வைய்காசிப் பெரிய திருவிழாவில் திருவாலன் திருமுதுகுன்றனான விசய ராசேந்திர ஆசாரியனும் இவன் வர்க்கத்தாரும் இராசராசேசுவர நாடகமாடினர்" எனக் கல்வெட்டு குறிப்பிடுகிறது (South Indian Inscriptions Vol II No. 17). நாடகம் நிகழ்த்தியவன் ஆசான் பட்டம் பெற்றவன். நாடகம் நடைபெற்றதோ சோழர்கள் தலைநகரப் பெருங்கோயிலில். நடைபெற்ற விழாவோ பெரிய திருவிழா. எனில், ஆடல் தொடர்பான ஆதிரை நாள் இத்திருவிழாவோடு ஏதோ ஒரு வகையில் தொடர்புற்றிருக்க வேண்டும் என நாம் முடிவு செய்வது தவறாகாது. நமது ஊகத்துக்குப் பக்க பலமாகப் பல கல்வெட்டுக் குறிப்புகள் கிடைக்கின்றன. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆதித்த சோழனின் ஆட்சிக் காலத்தில் திருவிடைமருதூரில் கீர்த்திமறைக்காடனான திருவெள்ளறைச் சாக்கை வைகாசித் திருநாளில் மூன்று கூத்துகள் நிகழ்த்தினான் எனக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. பெரம்பலூர் மாவட்டம் காமர(ச)வல்லியில் கி.பி. 1041இல் சாக்கைமாராயன் விக்ரமசோழன் என்பவன் மார்கழி, வைகாசித் திருவாதிரை நாள்களில் மூன்று முறை கூத்து நிகழ்த்தியுள்ளான் (Annual Report on Epigraphy for the year 1915 - page 98, para 22). இதே போன்று, திருமார்கழித் திருநாளும் திருவைய்காசித் திருநாளும் திருக்களபப்படி எனப்பட்ட சந்தனக்காப்பு நடைபெற்றது எனக் கச்சினம் சிவன் கோயிலிலுள்ள கி.பி. 1249ஆம் ஆண்டுக் கல்வெட்டால் அறியலாம். (திருத்துறைப்பூண்டிக் கல்வெட்டுகள் - தொடர் எண் 1976/56 - பொறுப்பாசிரியர் - இரா. நாகசாமி, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, 1978). நாம் முன்னர் குறிப்பிட்ட புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசல் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள இரண்டாம் இராசாதி ராச சோழனின் கி.பி. 1168ஆம் ஆண்டுக் கல்வெட்டில் "சதிர விடங்க நாயகற்கு வைகாசித் திருவாதிரை திருநாளுங்கண்டு திருநாளுக்கு கூத்தாடுகைக்குக் காணியாக... இத் திருநாளைக்கு ஆறு கூத்தாடுவாராகவும், விளையினும் விளையாவிடினும் இக் கூத்தாறும் ஆடக் கடவதாகவும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது (Pudukkottai State Inscriptions - No. 139). கி.பி. 1020ஆம் ஆண்டைச் சேர்ந்த நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் புஞ்சை நற்றுணை ஈஸ்வரர் கோயில் கல்வெட்டில் "வைகாசித் திருவாதிரைத் திருநாள் திரு உற்சவம்" என்ற குறிப்பு காணப்படுகிறது. ("ஆவணம்" இதழ் 6 பக்கம் 22 தமிழகத் தொல்லியல் கழகம் வெளியீடு திரு. சூ. சுவாமிநாதன் கட்டுரைக் குறிப்பு) வைகாசித் திருவாதிரைத் திருநாள் என்பது அக்ஷய த்ரிதியை என்பதைத் தவிர இதில் வேறு முதன்மை ஏதும் இருக்க வழியில்லை. இந்த இடத்தில் வேறொரு கல்வெட்டுக் குறிப்பும் நமது கருத்துக்கு வலிமை சேர்க்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் வட்டம் மாங்காடு வல்லீஸ்வரர் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள பல்லவ அரசன் நந்தி விக்கிரம வர்மனின் கி.பி. 863ஆம் ஆண்டுக் கல்வெட்டில் (South Indian Inscriptions Vol XII No. 53) அக் கோயிலில் நடைபெற்ற வருடாந்திர விழாக்கள் இரண்டு முதன்மையாகக் குறிப்பிடப்படுகின்றன. அவை: திருவாதிரைத் தலை உவா, திங்கள் நிலவு ஆகிய நாள்கள் ஆகும். இக்குறிப்பில் இடம் பெறும் நாள்கள் இரண்டுமே நிலவு தொடர்பான உவா நாள்களாகும். தலை உவா எனக் குறிப்பிடப்படுவது வளர்பிறையில் கண்ணுக்குப் புலப்படும் பிறையாகிய மூன்றாம் பிறையே ஆகும். திங்கள் நிலவு என்பது பூர்ணிமை நாளாகும். எனவே திருவாதிரை நட்சத்திரத்தன்று மூன்றாம் பிறை வருகின்ற வைகாசி நாளும் மார்கழித் திருவாதிரையுமே இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன எனத் தெரிகிறது. வேறு சில கல்வெட்டுக் குறிப்புகளாலும் இதனை நாம் உறுதிப்படுத்த முடியும். கோனேரி ராஜபுரம் உமாமகேஸ்வரர் கோயில் கல்வெட்டு (South Indian Inscriptions Vol III No. 151) மார்கழித் திருவாதிரை, வைகாசித் திருநாள் ஆகியவற்றுக்காக முசிதைக்குடி என்னும் சிற்றூருக்கு அறுநூறு கலம் நெல் ஆண்டுதோறும் அளிக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. இக் கல்வெட்டில் இரண்டு திருவிழாக்கள் முதன்மையாகக் குறிப்பிடப்படுகின்றன. இதில் இரண்டாவதாகக் குறிப்பிடப்படும் வைகாசித் திருநாள் என்பது வைகாசி விசாகத் திருநாளாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆயினும் இங்கு நாம் கவனிக்க வேண்டியது ஏகாதச ருத்ரர் என்ற வைதிக மரபுப்படி பதினொரு நாள் திருவிழாக் கொண்டாடுகிற இன்றைய சிவாலய வழிபாட்டு மரபுகளின் கண்ணோட்டத்தில் பார்த்தால் வைகாசித் திருவாதிரையன்று முதல் நாள் திருவிழா தொடங்கி வைகாசி விசாகத்தன்று பதினோராம் நாள் திருவிழாவை நிறைவு செய்ததாகக் கருதிட இயலும். கி.பி. 13ஆம் நூற்றாண்டில் நார்த்தாமலை விசயாலய சோழீஸ்வரர் கோயிலில் வைகாசி மாதத்தில் 10 நாள்கள் திருவிழா நடைபெற்றது என அக் கோவில் கல்வெட்டொன்றால் தெரிய வருகிறது. (Annual Report on Epigraphy 296/1964). வைகாசித் திருவாதிரை (அக்ஷய த்ரிதியை) நாள் அந்திப் பொழுதில் கால்கோள் விழாத் தொடங்கி புனர்பூச நட்சத்திர நாளினை முதல் நாள் திருவிழாவாகக் கொண்டு வைகாசி விசாகத்தன்று 10ஆம் நாள் திருவிழா நடத்தி நிறைவு செய்தனர் என நாம் முடிவு செய்யலாம்.

அப்பர் தமது திருக்குறுக்கை வீரட்டப்பதிகத்தில் "தீர்த்தமாம் அட்டமிமுன் சீருடை ஏழு நாளும் கூத்தராய் வீதி போந்தார் குறுக்கை வீரட்டனாரே" எனப் பாடுகிறார். ஏழு நாள்கள் ஆடவல்லானுக்குத் திருவிழா நடந்தது என்றும் எட்டாம் நாள் விடாயாற்றி எனப்படும் தீர்த்தவாரி நடைபெற்றது என்றும் இப்பாடலால் தெரியவருகின்றன. அப்பர் காலத்திற்கு இரண்டு நூற்றாண்டுகள் கழிந்த பின்னர், கி.பி. 873-ல் திருக்குறுக்கைக்கு அருகிலுள்ள திருமெய்ச்சூரில் வைகாசி உத்திரம் என்ற விழா ஏழு நாள்கள் நடைபெற்றது எனக் கல்வெட்டுக் குறிப்பால் தெரியவருகிறது (South Indian Inscriptions Vol XIII No. 240). இவ்விழா வைகாசித் திருவாதிரை அன்று தொடங்கி ஏழு நாள்கள் நடந்து ஏழாம் நாளான உத்தர நட்சத்திரத்தன்று முடிவுற்றது என்று நாம் புரிந்து கொள்ள முடிகிறது. திருக்குறுக்கை நடராசரின் பெயராக அப்பர் பெருமான் குறிப்பிடுகின்ற "கூத்தராய் வீதி போந்தான்" என்ற பெயரை ஆட் பெயராகச் சூட்டிக் கொண்டவர்கள் திருக்குறுக்கை வட்டாரத்திலுள்ள அகஸ்தியன்பள்ளிச் சிவன் கோயில் கல்வெட்டில் (மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சிக்காலம் கி.பி. 1273 - South Indian Inscriptions Vol. XVII No. 550) இடம் பெறுகின்றனர். இதே கோயிலிலுள்ள மாறவர்மன் குலசேகரனின் கி.பி. 1299ஆம் ஆண்டுக் கல்வெட்டில் (South Indian Inscriptions Vol XVII No. 549) "பெருமாள் திருமேனி கல்லியாண திருமேனியாக வேண்டுமென்று வைகாசி மாதத்து அத்தம் தீர்த்தமாக நாங்கள் கண்ட திருவைகாசித் திருநாள்" என்ற குறிப்பு உள்ளது. வைகாசி மாதத்தில் அஸ்த நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி நடைபெற வேண்டுமெனில் திருவாதிரை நட்சத்திரத்தை முதல் நாளாகவும் உத்தர நட்சத்திரத்தை ஏழாம் நாளாகவும் அஸ்த நட்சத்திரத்தைத் தீர்த்தவாரி நடைபெறுகிற எட்டாவது நாளாகவும் கொண்டு விழா நடைபெற்றிருக்க வேண்டுமெனத் தெளிவாகிறது. "தீர்த்தமாம் அட்டமி" என அப்பர் பெருமான் குறிப்பிடுவதனை "எட்டாம் நாளாகிய தீர்த்தவாரி" என்ற வகையில் பொருள் கொண்டு இவ்வாறு நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்திலுள்ள வில்லியனூர்க் கல்வெட்டு ஒன்று (A.R.E. 187/1936-37) பராக்கிரம பாண்டியன் ஆட்சிக் காலத்தை (கி.பி. 14ஆம் நூற்றாண்டு)ச் சேர்ந்தது. திருவாதிரையன்று கொடியேற்றம் தொடங்கி, 8 நாள்கள் வைகாசித் திருவிழா நடந்து அஸ்த நட்சத்திரத்தன்று தீர்த்தவாரியுடன் விழா முடிவுற்றது என இக் கல்வெட்டால் தெளிவாகத் தெரிய வருகிறது. ஆருத்ரா தரிசனம் என்பது மார்கழி மாதத் திருவிழாவே என்ற நிலை உருவான பின்னரும் கூட, ஆடல்வல்ல பெருமானின் திருவிழா நடைபெற்ற நாள்களாக மார்கழித் திருவாதிரை மட்டுமின்றி வைகாசித் திருவாதிரையும் சிவாலயங்களில் தொடர்ந்து நீடித்து வந்துள்ளதென இக்கல்வெட்டுகளால் தெரிய வருகிறது.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் தமது மயிலைப்பதிகத்தில் கபாலீச்சுரத்தில் நிகழ்ந்த மார்கழித் திருவாதிரைத் திருவிழா பற்றிக் குறிப்பிடுகிறார் எனக் கண்டோம். அவ்வாறிருக்கையில் வைகாசி மாதத் திருவாதிரை சிவ வழிபாட்டின் முதன்மையான ஒரு விழாவாகக் கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரை நீடித்து வந்தது என்பது ஒரு முரண்பாடாகத் தோன்றலாம். ஆனால், திருஞானசம்பந்தர் தமது மயிலைப்பதிகத்தில் பங்குனி உத்தர நாள் விழாவினைக் குறிப்பிடும் ஏழாவது பாடலை அடுத்து வருகின்ற எட்டாவது பாடலில் அட்டமி நாள் விழாவினைச் சுட்டுகிறார். இது சித்திரை அட்டமி நாள் ஆகும். வைக்கத்து அட்டமி என்ற பெயரில் இன்றளவும் கேரள மாநிலம் வைக்கத்தில் சித்திரை மாதத்தில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. மயிலைப்பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் திருஞானசம்பந்தர் "நற்றாமரை மலர்மேல் நான்முகனும் நாரணனும் உற்றாங்குணர்கிலா மூர்த்தி திருவடியைக் கற்றார்களேத்துங் கபாலீச்சுரம் அமர்ந்தான் பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய்" எனக் குறிப்பிடுகிறார். இப்பாடல் வைகாசி மாததில் நிகழ்ந்த பொன்தாம்பு எனப்படும் மங்கல நாண் பூணும் விழாவைக் குறிப்பிடுகிறது. நாம் இக்கட்டுரையில் ஆராய்ந்த செய்திகள், கல்வெட்டுக் குறிப்புகள் மற்றும் கருத்துகள் அடிப்படையில் சிந்தித்துப் பார்த்தால் இத்திருவிழா வைகாசி மாத ஆதிரை நாளில் நிகழ்ந்த அக்ஷய த்ரிதியைத் திருவிழாவே என்பது தெளிவுறுகின்றது.

இறுதியாக, வேறொரு சிக்கலுக்கு நாம் விடை தேடவேண்டிய கடமை உள்ளவர்களாக இருக்கின்றோம். தண்ணீரின் கொப்பூழில் தோன்றியவன் என்ற கருத்தின் அடிப்படையில் மின்னல்கொடி என்பது படைப்பாற்றலின் உருவகமாகக் கருதப்பட்டது எனக் கண்டோம். மூன்றாம் பிறை ஆதிரை நாளன்று தோன்றுகிற மின்னல் தென்மேற்குப் பருவக் காற்றின் தொடக்கத்துடனும் அப் பருவக் காற்றால் ஏற்படுகிற மழை வளத்துடனும் தொடர்புபடுத்தப்பட்டது எனவும் கண்டோம். இத்தகைய படைப்பாற்றல் என்பது வைதிக மரபில் பிரம்மா என்ற தெய்விகக் கருத்தோட்டமாகத்தான் சித்திரிக்கப்பட்டது. நீர்த் தெய்வமாகிய நாராயணனின் கொப்பூழில் (தொப்புள் கொடியில்) தோன்றியவர் என்றும் ஆகம நெறிப்படி அமைக்கப்படும் கோயில்களில் கொடிக் கம்பமாக உருவகிக்கப்படுபவர் என்றும் தாயின் கர்ப்பப்பையில் முதல் வித்தாகத் தோன்றிப் பத்து மாத பந்தத்தின் அடையாளமாகவும் கருவின் உயிர்வாழ்க்கைக்கு ஆதாரமாகவும் திகழ்கிற கொப்பூழாக ரிஷிகளின் மனக் காட்சியில் தோன்றியவராகவும் பிரம்மாவை அறிஞர்களும் தத்துவவாதிகளும் அடையாளம் கண்டுள்ளனர். விந்து என்பது முதல் முதலில் படைக்கப்பட்ட ஒளி வடிவம் என்றும், நாதம் என்பது முதல் முதலில் தோன்றிய ஒலி வடிவம் என்றும் ஆன்மிகவாதிகள் கருதுவர். மின்னல் பிரம்மா எனில், இடி சரஸ்வதி ஆகும். கொப்பூழ் பிரம்மா எனில் மூச்சுக்காற்று (பிறந்த குழந்தையின் முதல் அழுகை) சரஸ்வதி ஆகும். இத்தகைய படைப்பாற்றலின் உருவகக் குறியீடுகளுடன் தொடர்புடைய தாழை மலர் அதாவது மின்னலால் மலர்கிற தாழை மலர், விண்ணுக்கும் பாதாளத்துக்குமாக ஊடுருவிப் பரந்து நிற்கும் ஊழித் தீயாக உருவகிக்கப்படும் சிவபெருமானின் முடியைக் கண்டதாக பிரம்மாவுக்கு சார்பாகப் பொய்ச் சாட்சி சொல்லிற்று என்ற ஒரு கதை பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது. இது ருத்ரமூர்த்தியின் யஜமான வடிவம் பெற்ற செல்வாக்கின் விளைவாகப் புனையப்பட்ட கதையே என்பது தெளிவு. வைதிக யக்ஞ மரபுக்கும், ஆகம நெறிகளுக்கும் வானநூல் அறிவின் அடிப்படையில் அமைந்த வழிபாட்டு மரபுகளுக்கும் இடையில் நேர்ந்த பல சமரசங்களின் விளைவாக மூன்றாம் பிறையும் ஆதிரையும் ருத்ர வழிபாட்டின் முதன்மையான அம்சங்களாக ஏற்கப்பட்டன. ஆயினும் ஆதிரை நட்சத்திரம் உருவானது குறித்த புராணக் கதைகளைப் பார்த்தால், பெண் மானாக மாறிய சரஸ்வதியை பிரம்மா தாம் ஓர் ஆண் மானாக மாறித் துரத்துகையில் சிவன் என்னும் வேடனால் அம்பெய்து கொல்லப்படுகிறார் என்றும் பிரம்மாவிடமிருந்து ஒரு ஜோதி தோன்றி ஆதிரை நட்சத்திரமாக மாறிற்று என்றும் தெரியவருகின்றன. பிரம்மன் என்கிற பெயரின் பாரசீக வடிவமாகிய பஹமன் (Bahaman) என்பது கிறிஸ்து சகாப்தத் தொடக்க நூற்றாண்டுகளில் அரசர் சிலரின் பெயராக இருந்துள்ளது. சரஸ்வதி நதிக்கரையில் வாழ்ந்தவர்களாகக் கருதப்படும் குசிகர் குலத்தவர்கள் (கெளசிக கோத்திரத்தவர்கள்) பாரசீகத் தொடர்புடையவர்கள் என அறிஞர்கள் முடிவு செய்துள்ளனர். ஆதிரையான் வழிபாட்டின் ஆதிமூலம் பாரசீகச் சமய மரபே என்பதற்கு இவையெல்லாம் ஆதாரங்கள் என நாம் கருதுவதில் தவறில்லை.

அடிக்குறிப்புகள்:

[1]. "குமரகுருபரர்... துருக்கர்களது உத்தேசப்படியே சிவக்கக் காய்ச்சிய இரும்பைக் கொணர்வித்து சைவ சமயமே மெய்ச் சமயமானால், அச் சமயத்துக்குரிய சிவ பெருமானுக்குப் பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம், சூரியன், சந்திரன், ஆன்மா என்னும் எட்டுமே திரு உருவமானால், அவ் வெட்டனுள்ளும் அக்கினியே பிரதானமானால் இது சுட மாட்டாது என்னும் கருத்தோடு அவ்விரும்பைத் தமது திருக்கரத்திலே ஏந்தி அருளினார்", பக்கம் 218, "ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள்" - மு. அருணாசலம், காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம், மாயூரம், 1990.


[2]. The Zend Avesta - Part II Translated by James Dermesteter, p. 6, The Sacred Books of the East - Vol 23 - General Editor: F. Max Muller, Motilal Banarsidas Publishers, New Delhi, 2000. மேலும் விவரங்களுக்குப் பார்க்க: The Sacred Books of the East - Vol 5, 18, 24, 37, 47 Pahalvi Texts Translated by E.W. West, Motilal Banarsidas Publishers.


[3]. இக்கட்டுரை ஆசிரியால் எழுதப்பட்டுவருகிற ஐயனார் வழிபாடு குறித்த கட்டுரையில் இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.


[4]. பழைய எம்.ஜி.ஆர். திரைப்படப்பாடலில் "சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போலே உனைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே" என்று ஒரு வரி இடம் பெற்றுள்ளது. இது கவிஞர் சுரதாவின் பாடலாக இருக்கலாம்.


[5]. இந்தியாவிலுள்ள மிகப் பழமையான சிவலிங்கங்களுள் ஆந்திர மாநிலம் குடிமல்லத்திலுள்ள பரசுராமேஸ்வரர் கோயிலில் காணப்படும் சிவலிங்கமும் ஒன்றாகும். இச் சிவலிங்கத்தில் சிவனுடைய மனித உருவச் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளது. இச் சிற்பத்தில் சிவ பெருமான் தாழை மடல் சூடியுள்ளதாக அறிஞர்கள் அடையாளம் கண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவ வழிபாட்டின் பரிணாம வளர்ச்சிக் கட்டங்களுள் இது மிகப் பழமையான ஒரு கட்டமாகும்.



[6]. நகுதல் என்ற கருத்திலிருந்தே நகை என்ற சொல் தோன்றியுள்ளது. ஜ்வலித்தல் என்ற சொல்லுக்கும் Jewell என்ற சொல்லுக்கும் உள்ள தொடர்பு வெளிப்படையானது. Smile, Smith என்ற சொற்களும் தம்முள் தொடர்புடையனவே. ஸ்மிதா என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு நகைப்பவள் என்று பொருள். Goldsmith என்ற சொல்லுடன் ஸ்மிதா என்ற சொல்லுக்கு உள்ள தொடர்பும் வெளிப்படையானதே. இக் கலித்தொகைப் பாடலில் கொன்றைப் பூ மாலை பொன் அணியாகவே உருவகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. "பொலஞ் செய் கிண்கிணிக் காசின் அன்ன போதீன் கொன்றை" எனக் குறுந்தொகை (148) குறிப்பிடுகிறது.


[7]. குறிஞ்சித் திணைக்குரிய உரிப் பொருளாகிய களவு மணத்தினைக் காந்தர்வ விவாகத்துடன் தமிழ் இலக்கண மரபு தொடர்புபடுத்தும். மணம் என்ற சொல்லே காந்தர்வம் என்ற சொல்லுக்கு வேர்ச்சொல்லாகிய கந்தம் என்ற சொல்லுடன் தொடர்புடையதாகத் தோன்றுகிறது. மணத்தல் (Smell) என்ற புலனுணர்வுக்கும் இணை விழைவு உணர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பது அறிவியலாளர்களின் கருத்தாகும். நம்முடைய ஆய்வுப் பொருளுடன் இக் கருத்து எவ்வாறு தொடர்புறுகிறது என்ற கேள்வி எழுவது இயல்பு. காந்தார நாடு எனப்படும் ஆப்கானிஸ்தான காந்தஹார்ப் பகுதிப் பூர்வகுடிகளின் மரபே காந்தர்வ உறவு முறை ஆகலாம். நக்கீரர் குறித்த "நெற்றிக்கண்" கதையில் இடம் பெறுகிற பெண்டிர் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா என்ற கேள்வியும், சிவபெருமான் இயற்கை மணம் உண்டு என்று இக்கேள்விக்கு பதிலளித்ததாகக் கூறப்படுவதும் ஆதிரையான் வழிபாட்டுடன் காந்தாரப் பகுதிக்கு இருந்த ஆரம்பகால உறவுகள் பற்றிய பூடகமான பதிவுகள் ஆகலாம். இது தனித்த விரிவான ஆய்வுக்கு உரியது.

[8]. இது குறித்த விளக்கமான கட்டுரை, 'Transformation of Tamil Society in North Tamilnadu - A random study through reinterpretation of some inscriptional terms and names' என்ற தலைப்பில் இக்கட்டுரை ஆசிரியரால் எழுதப்பட்டுள்ளது. (பதிப்பு: Journal of Tamil Studies - Vol. 57 & 58. June & December 2000, International Institute of Tamil Studies, Chennai - 600113.)

[9]. தில்லை வாழ் அந்தணர்களுள் ஒருவரும், சைவசித்தாந்த சந்தான குரவர்களுள் ஒருவரும், கி.பி. 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவருமான உமாபதி சிவாச்சாரியார், தமது சேக்கிழார் நாயனார் புராணத்தில் (பா. 80, 83), திருத்தில்லை மன்றினில் நின்றாடும் நடராசர்க்குச் சித்திரைத் திருவாதிரை தொடங்கி மகாபூசை நடைபெற்றதாகக் குறிப்பிடுகிறார். மாசிமகத் திருவிழாக் காலத்தில் வளர்பிறை ஏகாதசியன்று வருகிற திருவாதிரை நாளிலும் இறைவனுக்குச் சிறப்பான அபிஷேகம் நடைபெற்றது எனக் கி.பி. 937ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில் (South Indian Inscriptions - Vol. VII No. 517) குறிப்பிடப்பட்டுள்ளது. மாசி மகம் என்பது வருணன் விழா ஆதலால் வருணன் மகன் ஆதிரையான் என்ற பாரசீக மரபையும், ஏகாதச ருத்ரர் என்ற வைதிக மரபையும் இணைத்து இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கலாம்.

maanilavan@gmail.com
நன்றி: திண்ணை . எஸ் இராமச்சந்திரன் அணிகலன் பெருக்கும் அக்ஷய த்ரிதியை ஏப்ரல் 27 2006   Copyright:thinnai.com  


Monday, April 18, 2016

சித்திரையில்தான் புத்தாண்டு எஸ் இராமச்சந்திரன்

rko9q0ks5dmqws9zf4g8.gif (245×240)

srchandran.jpg (196×220)
எஸ் இராமச்சந்திரன்
இக் கட்டுரை முற்ற முழுக்க ஒரு வரலாற்று ஆய்வே. சித்திரை மாதம் முதல் தேதியன்று பிறக்கின்ற புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடுவது சரியா என்ற ஒரு விவாதம், கடந்த நூற்றாண்டில் தமிழறிஞர்களிடையே எழுந்தது. சித்திரையை முதல் மாதமாகக் கொள்ளும் காலக்கணக்கீடோ, அறுபது தமிழ் வருடப் பெயர்களாகக் குறிப்பிடப்படும் பிரபவாதி ஆண்டுகளின் பெயர்களோ தமிழ் மரபைச் சார்ந்தவையல்ல என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.


சங்க இலக்கியங்களில் "தைந்நீராடல்' எனப்பட்ட பாவை நோன்பு சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது என்பது உண்மையே. ஆனால் அதனைச் சூரிய வழிபாட்டுடன் தொடர்புபடுத்துவதற்குரிய குறிப்போ, புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு (உத்தராயனத் தொடக்கம்) தை மாதம் முதல் தேதியன்றுதான் நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்போ சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. எனவே சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் தைந்நீராடலுக்கும் புத்தாண்டுப் பிறப்பிற்கும் தொடர்பில்லை என்பது வெளிப்படை.

அவ்வாறாயின், தை மாதப் பிறப்பினைத் தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழறிஞர்கள் சிலர் முடிவு செய்ததற்கு என்ன அடிப்படை இருக்கக்கூடும் என யோசித்தால், ஆங்கில வருடப் பிறப்புக் காலமாகிய ஜனவரி மாதத்தினையொட்டித் தை மாதம் வருவதாலும், விக்ரம சகாப்தம், சாலிவாகன சகாப்தம் முதலியனவெல்லாம் காலாவதியாகிப் போய் ஐரோப்பிய சகாப்தம் - சொல்லப்போனால் கிறிஸ்துவ யுகம் - அகிலத்தையே ஆக்கிரமித்துவிட்டதாலும், அதற்கு ஒத்து வருகிற வகையில் நமது பழம் மரபுகளுக்குப் புதிய விளக்கமளிக்கிற ஓர் ஒத்திசைவே இதற்கு அடிப்படையாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. 

இந்தச் சிந்தனைப் போக்கு, 16ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டதெனத் தெரிகிறது. தமிழில் வெளிவந்த முதல் அச்சு நூலான தம்பிரான் வணக்கத்தில், கிறிஸ்துவ அப்தம் 1578ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அன்று அச்சிடப்பட்டதாகப் போர்ச்சுக்கீசிய மொழியிலும், அற்பிகை மாதம் 20ஆம் தேதி அச்சிடப்பட்டதாகத் தமிழிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்டோபர் மாதத்துக்கு நேரான தமிழ் மாதம் அற்பிகை (ஐப்பசி) எனக் கருதப்பட்டுள்ளது. 

கி.பி. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் சமயப் பணிபுரிந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கத் துறவியான வீரமாமுனிவர், தமது தேம்பாவணியில் (மகவருள் படலம், பா. 96) ஏசுநாதர் மார்கழி 25ஆம் தேதியன்று பிறந்தார் எனக் குறிப்பிடுகிறார். ஐரோப்பியக் காலண்டர் மாதங்களையும் தமிழ் மாதங்களையும் ஒன்றுபடுத்திப் பார்க்கும் போக்கின் தொடர்ச்சியாகவும், தைத்திங்களில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குவதாகக் கருதும் மனப்போக்கின் ஆரம்பமாகவும் இதனைக் கருதலாம். 

2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் Spring எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டுத் தொடக்கமாகக் கருதினர். கிரேக்க ரோமானிய நாகரிகங்களில், மார்ச் மாதம் முதல் நாளன்று வசந்த காலம் தொடங்குவதன் அறிகுறியாக ஒருவர் மேல் ஒருவர் சாய நீரைத் தெளித்துக் கொண்டும் குறும்புகள் செய்தும் சிரித்து விளையாடியும் மகிழ்வர். மேலைநாடுகளில் உறைய வைக்கும் குளிர்காலம் முடிந்து வெயிற்காலம் தோன்றுவது மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது. வணிகர்களும் அரசாங்கமும் தமது வரவு செலவுக் கணக்கை அன்றுதான் தொடங்குவர். இம்மரபுகள்தாம், ஏப்ரல் மாதம் முதல் நாளுக்கு மாற்றப்பட்டுத் தற்போது உலகளவில் பின்பற்றப்படுகின்றன. இவ்வாறு மாற்றப்பட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன. 

கிரேக்கக் காலக் கணக்கீட்டின்படி, செவ்வாய்க் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட "ஏரீஸ்' வீட்டில் சூரியன் இருக்கின்ற மாதமே மார்ச் மாதமாகும். ரோமானிய (லத்தீன்) காலக் கணக்கீட்டின்படி, ஏரீஸ் எனப்படும் முதல் மாதம், மார்ச் 21ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரையிலும் நீடிக்கும். பிசஸ் எனப்படும் இறுதி மாதம், மார்ச் 20ஆம் தேதி முடிவடையும். 

இந்திய ஜோதிட அறிவியலில் பூர்ணிமாந்தக் கணக்கீட்டின்படி, மாசி மகத்துடன் முடிவடையும் மாசி மாதத்துக்குப் பின்னர் பங்குனி மாதம், மார்ச் 14 தேதியளவில் பிறக்கும். பாரசீக சமயமான ஜெராஸ்ட்ரிய சமய நூல்களில் மாசி மாதம் (பிர்தௌஸ்) என்பதே ஓர் ஆண்டின் இறுதி மாதமாகும். இவ்வாறு பங்குனி - சித்திரை ஆகிய மாதங்களுள் ஒன்றே, அவ்வப் பிரதேச வேறுபாடுகளுக்கேற்ப ஆண்டின் தொடக்க மாதமாகக் கருதப்பட்டுள்ளது. காலக்கணக்கீட்டில் மீன (பங்குனி) மாதமும், மேஷ (சித்திரை) மாதமுமே முதன்மை பெற்று வந்துள்ளன என்பது ""மீன மேஷம் பார்த்தல்'' என்ற பேச்சு வழக்காலும் தெளிவாகும். 

இப்போது தை மாதத்தைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகக் கொள்வதற்குச் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் மறைமுகமாகவாகிலும் ஏதேனும் குறிப்பு காணப்படுகிறதா? 

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தொடங்கிய பக்தி இலக்கியக் காலகட்டத்தில் மார்கழி நீராடல் நோன்பாகப் பரிணமித்த தை மாதப் பாவை நோன்புக்கும், உழவர் திருநாளாகக் கருதிக் கொண்டாடப்படுகின்ற பொங்கல் திருநாளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்று நாம் புரிந்துகொள்வது அவசியம். 

மார்கழி நீராடல் மரபு வைணவ சம்பிரதாயத்தில் கண்ணன் வழிபாட்டோடு தொடர்புபடுத்தி முதன்மைப்படுத்தப்படுகிறது. மார்கழி நீராடல் மரபில் கண்ணனுடைய அண்ணனாகிய பலராமனுக்கும் ஓர் இடம் உண்டு. பலராமன் சங்க இலக்கியங்களில் வாலியோன் (வெள்ளையன்) என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறான். அவனுடைய ஆயுதம் ஏர்க்கலப்பை ஆகும். (""நாஞ்சிற்பனைக் கொடியோன்'' - புறநானூறு 56:4) அதாவது அவனே சங்ககால விவசாயக் கடவுள் ஆவான். 

பலராமனை "புஜங்கம புரஸ்ஸர போகி' எனக் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தக வீர நாராயண பாண்டிய மன்னனின் தளவாய்புரச் செப்பேடு' குறிப்பிடுகிறது. எனவே, போகிப் பண்டிகை என நாம் குறிப்பிடுவது பலராமனுக்கு உரிய விழாவே தவிர பரவலாகக் கருதப்படுவது போல இந்திரனுக்கு உரிய விழா அன்று. இந்திர விழா சித்திரை மாதப் பூர்ணிமையன்று நிகழ்ந்தது என்பது சிலப்பதிகாரத்தில் தெளிவுபடக் குறிப்பிடப்படுகிறது. எனவே, மார்கழித் திங்களின் இறுதி நாளன்று கொண்டாடப்படும் போகிப் பண்டிகை விவசாயக் கடவுளான பலராமனுக்கு உரிய விழாவே. 

பூம்புகாரில் இந்திர விழாவின்போது ""சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தெனக் காவற் பூதத்துக் கடை கெழு பீடிகை புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து'' மூதிற் பெண்டிர் வழிபட்டனர் எனச் சிலப்பதிகாரம், இந்திர விழவூரெடுத்த காதை வரி 64 - 69களில் குறிப்பிடப்படுகிறது. 

பிற்காலச் சோழராட்சியின்போது தைப் பொங்கல் விழா என்பது தமிழர் திருநாளாகக் கருதப்பட்டதா; தமிழ்ப் புத்தாண்டு என்பது தைப் பொங்கலன்று தொடங்கிற்றா? இவை இரண்டிற்குமே தெளிவான விடை ""அல்ல'' என்பதுதான். 

சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயனத்திற்குத் திரும்புகின்ற நாள் என்ற காலக்கணக்கீட்டின் அடிப்படையில் தை மாதம் முதல் தேதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது பிற்காலச் சோழர் ஆட்சியில் நடைமுறைக்கு வந்துவிட்டது என்பது உண்மையே. 

ஆட்டைவட்டம் எனப்படும் ஓர் ஆண்டின் சுழற்சியை - 360 பாகைகளை - 90 பாகைகள் கொண்ட நான்கு பிரிவுகளாகப் பிரித்து, சித்திரை விஷு, தக்ஷிண அயனம், ஐப்பசி விஷு, உத்தர அயனம் எனக் குறிப்பிடும் வழக்கம், கி.பி. 998ஆம் ஆண்டைச் சேர்ந்த தஞ்சை மாவட்டம் திருவலஞ்சுழி சேத்ரபால தேவர் கோயிற் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்நாள் புத்தாண்டுத் தொடக்கமாகவோ தமிழர்க்கு மட்டுமேயுரிய திருநாளாகவோ கருதப்படவில்லை. 

சூரிய குலத்தைச் சேர்ந்தவர்களாகச் சொல்லப்படும் சோழர்களின் ஆட்சியில் முதன்மையான நிர்வாகப் பதவியை வகித்த சேக்கிழார் நாக தெய்வத்தைத் தமது குல தெய்வமாகக் கொண்டவர் ஆவார். அப்படி இருக்க சேக்கிழார் தம் பெரிய புராணத்தில் ஓரிடத்தில்கூடத் தைப் பொங்கல் விழாவை முதன்மைப்படுத்தியோ, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியின் உழவர்கள் கொண்டாடிய முதன்மையான ஒரு விழாவாகவோ குறிப்பிடவில்லை என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது. 

சோழ நாட்டு மள்ளர்களைக் (பள்ளர்களை) குறிப்பிடுகையில் ""இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம் தொழுது நாற்று நடுவார் தொகுதியே பழுதில் காவிரி நாட்டின் பரப்பெல்லாம்'' என்றே சேக்கிழார் வருணிக்கிறார். (திருத்தொண்டர் புராணம், திருநாட்டுச் சிறப்பு, பா. 10, 12). 

தமிழக வரலாற்றில் மருத நில உழவர்களான தேவேந்திர குல மள்ளர்களின் இடத்தையும், மழைக் கடவுளாகிய இந்திரனுக்குரிய இடத்தையும், நிர்ணயிக்க உதவும் பல குறிப்புகளுள் இதுவும் ஒன்றாகும். இங்கும் வேளாண்மை தொடர்பான விழாவாகத் தைப் பொங்கலோ, வேளாண்மைக்குரிய கடவுளாக பலதேவனோ முதன்மைப்படுத்தப்படவில்லை. 

பிற்காலச் சோழர்களின் ஆட்சிக்காலத்தில்கூட இந்திர விழாவைவிட பலராமன் விழாவாகிய போகி - பொங்கல் விழா முதன்மை பெற்றுவிடவில்லை என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. பூம்புகாரில் சித்திரைத் திங்களில் இந்திர விழா கொண்டாடப்பட்டதைப் பற்றிய இலக்கியச் செய்திகளின் அடிப்படையில் பார்த்தாலும் தேவர்களின் தலைவனாகிய இந்திரனுக்கு ஆண்டின் தொடக்க காலத்தில் விழா எடுக்கின்ற மரபு நீண்ட நெடுங்காலமாகச் சோழ நாட்டில் தொடர்ந்து வந்திருக்கின்றது என்பதும் பலராமன் விழாவாகிய தைப்பொங்கலைவிட இந்திர விழா பழைமையானது என்பதும் புலனாகின்றன. 

பருவங்களின் தலைவன் பிரஜாபதி என வேதங்கள் கூறுகின்றன. மகாபிரஜாபதி என இந்திரனைக் குறிப்பிடுவர். எனவேதான், பருவங்களின் தலைமைப் பருவம் தொடங்கும் சித்திரை மாதத்தில் இந்திரவிழா கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். மருத நிலத்தின் தெய்வமாக இந்திரனையும், அந்நிலத்துக்குரிய பெரும் பொழுதாக இளவேனில் பருவத்தையும் குறிப்பிடுவதே தமிழிலக்கிய மரபாகும். 
வரலாற்று உண்மைகளிலிருந்து நாம் சற்று கவனத்தைத் திருப்பிப் பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட இயற்கையின் காலக்கணக்கீட்டுக்கு வருவோம். 

""திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்'' என்பது சங்க இலக்கியமாகிய நெடுநல்வாடையில் இடம்பெறும் தொடராகும். (வரி 160 - 161) மேஷ ராசியே தலையான (முதல்) ராசி என்பது இதன் பொருள். மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும். ரோமானிய நாகரிகத்தில் முதல் மாதமாகக் கருதப்பட்ட "ஏரீஸ்' என்பது ஆடு (மேஷம்) என்றே பொருள்படும். 
இக்ஷ்வாகு மன்னர்களின் கி.பி. 3 - 4ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கிம்ஹ (கிரீஷ்ம), வஸ்ஸ (வர்ஷ), சரத் என்ற மூன்று காலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதாவது கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில் - முதுவேனில், கார் - கூதிர், முன்பனி - பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே வானநூல் - ஜோதிட அடிப்படையிலும் கோடைக்காலமே ஆண்டின் தொடக்கமாகும். 

சீவக சிந்தாமணியில் முக்தியிலம்பகத்தில் (3070 - 72) சீவகன் ஓராண்டுக் காலம் தவம் செய்தது வர்ணிக்கப்படுகிறது. நந்நான்கு மாதங்கள் கொண்ட மூன்று பருவங்களாக, ""தீயுமிழ் திங்கள் நான்கு, வானம் நீர்த்திரள் சொரிந்திடு திங்கள் நான்கு, பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடை நான்காய திங்கள்'' என ஓராண்டுக்காலம் குறிப்பிடப்படுகிறது. இங்கெல்லாம் கோடைக்காலமே முதலாவது பருவமாகக் குறிப்பிடப்படுவதைக் கவனிக்க வேண்டும். 

இனி, 60 ஆண்டுக் கணக்கீட்டினைப் பற்றி ஆராய்வோம். தமிழ் வருடப் பெயர்கள் எனக் குறிப்பிடப்படும் ""பிரபவ'' தொடக்கமாக அமைகிற 60 பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல என்பது உண்மையே. 60 ஆண்டுகள் கொண்ட பிரபவாதி சுழற்சிமுறை ""வியாழ வட்டம்'' (Jovian Circle) எனப்படும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற குருவும் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற சனியும், ஒரே நேரத்தில் தாம்தாமிருந்த பழைய இடங்களுக்கே வருவது 60 ஆண்டுக்கு ஒருமுறைதான் நிகழும். எனவேதான் 60 ஆண்டுச் சுழற்சி முறை முதன்மை பெறுகிறது. ஆயினும் இந்த வியாழ வட்டத்திற்கும் சித்திரை மாதத்தில் புத்தாண்டு பிறப்பதற்கும் அடிப்படையான தொடர்பு ஏதுமில்லை. 

சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வானநூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. எனவே, பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு இயற்கையை ஒட்டி, சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாகக் கொண்டமைந்த ஆண்டுக் கணக்கீடுதான் பூர்விகத் தமிழ் மரபாகவும் இருக்க முடியும். 

கி.பி. 16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து ரோமன் கத்தோலிக்க சமயக் கண்ணோட்டத்தில் ஏசுநாதர் பிறந்த கேப்ரிகார்ன் (மகர) மாதம் முதன்மைப்படுத்தப்பட்டு, ஜனவரியே கிறிஸ்து சகாப்தத்தின் முதல் மாதம் என்ற நிலை உருவாகிவிட்டது. 16ஆம் நூற்றாண்டுக்குப் பின் நிகழ்ந்த ஐரோப்பியக் காலனி ஆதிக்கம், "இனம் புரிந்த', இனம் புரியாத வகைகளிலெல்லாம் இந்தியச் சிந்தனையாளர் வர்க்கத்தை ஈர்த்து அடிமைப்படுத்திற்று. அதன் விளைவாக ஐரோப்பியர்கள் கைகாட்டுகிற திசையில் தமது தனித்த அடையாளத்தைத் தேடிக் காண்கிற முயற்சிகள் தொடங்கின. 

இந்தியா ""தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற'' காலகட்டத்தில், ""நேரங் கெட்ட நேரத்தில்'' மேற்கொள்ளப்பட்ட காலங்கள் பற்றிய கணக்கீட்டில் ""தை மாதம்தான் தமிழர்களின் புத்தாண்டுப் பிறப்பு'' என்ற தவறான முடிவு விடையாகக் கிடைத்ததில் வியப்பில்லை. சார்பு நிலையால் ஏற்படும் மனமயக்கங்களில் ஆழ்ந்துவிடாமல் "சுதந்திர'மாக ஆராய்ந்தால் கிடைக்கும் விடை: ""சித்திரையில்தான் புத்தாண்டு''. 

(எஸ் இராமச்சந்திரன் (கட்டுரையாளர்) தொல்லியல் ஆராய்ச்சியாளர்)



South Indian Social History Research Institute: SISHRI URL: http://www.sishri.org/puthandu.html



நன்றி: தினமணிi 24-1-2008 பக்கம் 8


Thursday, April 14, 2016

கழகக் கந்தன் என்கிற பரிஷத் முருகன் எஸ். இராமச்சந்திரன்


http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60604074&format=html&edition_id=20060407

கழகக் கந்தன் என்கிற பரிஷத் முருகன்

எஸ். இராமச்சந்திரன்
முருகு அல்லது முருகன் என்ற கருத்தோட்டம் வெறியாடல் என்ற அற்புதத் தன்மையிலிருந்து தோன்றியது என்பது இன்று ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது[1]. குன்றக் குறவர் தெய்வமாக - குறிஞ்சிக் கடவுளாகத் தோன்றிய இத் தெய்வம், தமிழ்ச் சங்கத்தின் தலைமைத் தெய்வமாகவும் கருதப்பட்டது. குறிஞ்சித் திணைக்குரிய உரிப்பொருளான புணர்ச்சி (தலைவனும் தலைவியும் சந்தித்துக் களவுமணம் புரிதல்) என்பது பூத்தரு புணர்ச்சி, புனல்தரு புணர்ச்சி, களிறுதரு புணர்ச்சி என்று மூன்று வகைகள் உடையதாக இலக்கண ஆசிரியர் குறிப்பிடுவர். ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்துவதற்காகக் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு (வரி 212) இம் மூன்று வகைப் புணர்ச்சிகளுள் களிறுதரு புணர்ச்சியையே முதன்மைப் படுத்துகிறது. களிறு என்பது குறிஞ்சித் திணையின் உரிப்பொருளான களவு மணத்துடன் நெருங்கிய தொடர்புடையதாக இருப்பதால் குறிஞ்சி நிலப் பறவையாகிய மயிலை விட முருக வழிபாட்டுடன் அழுத்தமான தொடர்பைப் பெறுகிறது. கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் 10ஆம் நூற்றாண்டு வரையிலான முருகன் சிற்பங்களிலெல்லாம் முருகனின் வாகனமாக யானையே சித்திரிக்கப்படுகிறது. இந்த யானை பிணிமுகம் என்ற பெயருடையது என்று சங்க இலக்கியங்களால் தெரிய வருகிறது. யானை வடிவெடுத்து வள்ளியை அச்சுறுத்தி முருகனிடம் அடைக்கலம் புகச் செய்து இருவரையும் மணம் புணரச் செய்தவர் விநாயகரே என்று கி.பி. 15ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த அருணகிரிநாதர் தமது திருப்புகழில் குறிப்பிடுகிறார். (அத்துயர் அதுகொடு சுப்பிரமணி படும் அப்புனம் அதனிடை இபமாகி அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணமருள் பெருமாளே) கோவை மாவட்டம் மருதமலைக்கு அருகிலுள்ள குமிட்டிபதி என்ற மலையில் காணப்படுகிற கி.மு. 1000ஆவது ஆண்டைச் சேர்ந்தனவாகக் கருதப்படும் பாறை ஓவியங்களில், யானையின் மேல் வீரன் ஒருவனின் உருவமும் ஐந்து பெண்டிர் கைகோத்துக் குரவையாடும் காட்சியும் சித்திரிக்கப்பட்டுள்ளன. இவை வரலாற்றுக்கு முற்பட்ட பழங்குடியின மக்களால் வரையப்பட்ட ஓவியங்களாகும். குறிஞ்சி நிலப் பழங்குடிகளிடையே முருக வழிபாடு தொடர்பான குரவைக் கூத்து பெற்றிருந்த முதன்மையும், யானை இவ்வழிபாட்டில் பெற்றிருந்த இடமும் இவ் ஓவியங்களால் தெளிவாகின்றன[2]. தமிழ் மரபு என்பதே அகத்திணை (காதல், களவுமணம்)தான் என்பதும், குறிஞ்சித்திணையே அகத்திணையின் அடித்தளம் என்பதும், குறிஞ்சிக் கிழவனாகிய முருகனே தமிழ் மரபின் தலைமகன் என்பதும் 'இறையனார் களவியல் உரை ' (கி.பி. 8ஆம் நூற்றாண்டு) தோன்றிய பின்னணியால் தெரிய வருகின்றன.
அருணகிரிநாதர், 'சிவனை நிகர்பொதிய வரை முனிவன் அகம் மகிழ இருசெவி குளிர இனிய தமிழ்பகர்வோனே ' எனப் பாடுகிறார். எனவே, 'தென்னாடுடைய சிவனை ' விட முதன்மையான தெய்வம் முருகனே என்ற கருத்துக்கும் வலிமையான வரலாற்றுப் பின்னணி உள்ளது. பிற்காலச் சோழர் ஆட்சியில் சைவத் திருமுறைகள் தொகுக்கப்பட்டபோது, சங்க இலக்கியங்களில் சிவனைப் பற்றிக் கூறுவனவாக இன்று கருதப்படும் ஒரு பாடல்கூட அத்தொகுப்பில் சேர்க்கப்படாமல், முருகனைப் பற்றிய பாடலான திருமுருகாற்றுப்படை மட்டும் 11ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டது. தமிழ்ச் சங்கத் தலைவரான நக்கீரர் (திருமுருகாற்றுப்படை ஆசிரியர்) பற்றிய கதைகளும் கி.பி. 8-9ஆம் நூற்றாண்டுகளிலிருந்து வழங்கத் தொடங்கின. சங்ககாலத் தமிழகத்தில் முருகனே சிவனது பலவடிவங்களுள் ஒரு வடிவம்தான் எனக் கருதப்பட்டதால் திருமுருகாற்றுப்படை சைவத் திருமுறைகளுள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டதா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, பழந்தமிழிலக்கண நூலான தொல்காப்பியம் நானிலத் தெய்வங்களுள் சேயோனைக் குறிப்பிடுகிறதே தவிரச் சிவனைக் குறிப்பிடவில்லை[3]. இதுவும் ஒரு முதன்மையான ஆய்வுச் சிக்கலை உருவாக்குகிறது.
சேயோன் = சிவன்
சேயோன், சிவன் இரண்டுமே சிவந்த நிறத் தெய்வம் என்ற பொருளுடைய சொற்களாகும். நிறத்தில் மட்டுமின்றி, சீற்றம் என்ற தன்மையில் இவ்விரு தெய்வங்களும் ஒத்த தன்மையுடையவர்களாவர். ( 'முருகற் சீற்றத்து உருகெழு குரிசில் ' - பொருநராற்றுப்படை 131; 'கூற்றொத்தீயே மாற்றருஞ் சீற்றம் ' -புறநானூறு 56:11) இந்திரன் என்ற தேவர்கள் அரசனின் படைகளான மருதகணங்களின் தலைவனாக ருத்ரன், வேதங்களில் குறிப்பிடப்படுவது போன்றே வடமொழிப் புராணங்களில் தேவசேனாபதியாக முருகன் (ஸ்கந்தன்) குறிப்பிடப்படுகிறான். இந்த ஏற்புத் தன்மை இருந்ததால் சங்ககாலத் தமிழகத்தில் வைதிக ருத்ர வழிபாட்டினர் (கடியலூர் உருத்திரங்கண்ணனார், நல்லுத்திரனார் போன்றோர்) முருகனைச் சிவனது ஓர் அம்சமாகவே ஏற்றிருக்க வாய்ப்புண்டு[4]. பாசுபத சைவம் போன்ற நிறுவனமயமாக்கப்பட்ட சைவசமயம் உருவாகாத காலகட்டம் அது ஆதலால் எந்த அம்சத்துக்கு முதன்மையளிப்பது என்பது போன்ற குழப்பங்கள் நேர்ந்திருக்க வாய்ப்பில்லை. முருக வழிபாட்டினை முதன்மையாப் பின்பற்றியவர்களும் முரண்பாடின்றி இதனை ஏற்று வைதிக அங்கீகாரம் பெற்றிருக்கக் கூடும்.
சுக்லயஜுர் வேதத்தைச் சார்ந்த சதபத பிராம்மணத்தில் பருவங்களின் தலைவனான பிரஜாபதி உஷையுடன் கூடி ருத்ரனாகிய குமாரனைப் பெற்றார் என்ற குறிப்பு உள்ளது. விஷ்ணு புராணத்திலும், மார்க்கண்டேய புராணத்திலும் பிரம்மாவின் நெற்றியிலிருந்து ருத்திரன் பிறந்ததாகக் கூறப்பட்டுள்ளது[5]. குமரன், பிரம்மண்யன் (பிராமணன்) போன்ற பெயர்கள் எல்லாம் ருத்திரனுக்கே உரியவை என்பதை இக்குறிப்புகள் உணர்த்தும். ருத்ரன் பிரம்மாவின் மகன் என்பதால்தான் சங்க இலக்கியங்களும் சிவனைப் 'பார்ப்பான் ' எனக் குறிப்பிடுகின்றன (பரிபாடல் 5: 26-27). முருகனுக்குரியவையாகத் தற்போது வழங்கும் குமரகுருபரன்[6], சுப்பிரம்மண்யன், பிரம்மசாஸ்தா போன்ற பல பெயர்களுக்குரிய பின்னணி, ருத்ரனுக்கே உரியவையாகும்[7]. தகப்பனின் ஐந்து தலைகளுள் ஒன்றைச் சிவன் கிள்ளியெடுத்ததாகக் கூறப்படும் பழம்புராணக் கதையே, பிரணவத்தின் பொருளறியாத பிரம்மனின் சிரத்தில் முருகன் குட்டியதாகவும், பிரணவத்தின் பொருளைத் தகப்பனுக்குக் காதில் உரைத்ததாகவும் புனைந்துரைக்கப்பட்டன[8].
கி.பி. 3-4ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த ஆந்திர மாநில இக்ஷ்வாகு மன்னர்களின் கல்வெட்டுகளில் 'விரூபக்கபதி ' என்ற தெய்வம் குறிப்பிடப்படுகிறது[9]. விரூபகர் எனப்பட்ட குள்ள பூதங்களின் தலைவனாகிய முருகனே இவ்வாறு குறிப்பிட்டப்படுகிறான் என்பது இக்கட்டுரையாசிரியரின் கருத்தாகும். குள்ள பூதங்களைக் 'கூளியர் ' எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும். 'சூர்நவை முருகன் சுற்றந்தன்ன நின் கூர் நல்லம்பின் கொடுவிற் கூளியர் ' எனப் புறநானூறு (பா. 23) குறிப்பிடும். சிற்பங்களிலும் முருகன் இத்தகைய பூதகணங்களுடன் சித்தரிக்கப்படுவதுண்டு[10]. பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் வேதாளிகர் எனப்பட்ட இசைப்பாடகர்கள்-ஆடலர்கள் (மதுரைக்காஞ்சி 671, சிலப்பதிகாரம் 5:48; 26:74; மணிமேகலை 28:50) இத்தகைய பூதகணங்களே எனக் கொள்ளலாம். இம்மரபினைத் தெளிவாக அறிந்திருந்ததால்தான் 'வேதாள கணம் புகழ் வேலவனே ' என்றும், 'பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும் பாடலை மெச்சும் கதிர்வேலா ' என்றும் அருணகிரிநாதர் (கி.பி. 15ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) பாடுகிறார் எனத் தோன்றுகிறது. இவர்கள் யக்ஷர், குஹ்யகர் முதலிய குள்ளவடிவக் குலக் குழுவினராகலாம்.
பரிபாடலில் முருகன் பிறப்பு
பரிபாடலில் செவ்வேள் பற்றிய பாடலில் (பா. 5) உமாபதியாகிய ருத்ரனின் ஸ்கலிதமான விந்திலிருந்து ஸ்கந்தன் பிறந்தது குறிப்பிடப்படுகிறது. இக்கதை மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் கதையாகும். குப்தர்காலத்தைச் சேர்ந்த காளிதாசனின் குமாரசம்பவம் (9:14) இதனை விரிவாகக் குறிப்பிடுகிறது - பரிபாடல் வருணிக்கும் விவரங்கள் பெருமளவில் குமாரசம்பவத்தையொட்டியே இருப்பது சிந்திக்கத்தக்கது. பரிபாடலின் கால நிர்ணயத்துக்கு இது உதவக்கூடும். ஸ்கலிதம் என்பது வேதங்களிலும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் அது ருத்ரனோடு தொடர்புபடுத்தப்படுவதில்லை. வருணா - மித்ரர், திலோத்தமையின் நடனத்தைக் கண்டு காமவசப்பட்டதால் ஸ்கலிதம் ஏற்பட, அதனைக் கும்பத்தில் பிடித்து வைத்ததில் தோன்றியவர்களே அகத்தியரும் வசிஷ்டருமாவர். இக்கதை, 'முதுமறை முதல்வன் முன்னர்த் தோன்றிய கடவுட்கணிகை காதலஞ்சிறுவர் அருமறை முதல்வர் அந்தணர் இருவரும் ' என மணிமேகலையில் (13:94-96) கூறப்பட்டுள்ளது[11]. குறிப்பாக, வாருணி எனப்பட்ட (வருணன் மகனான) அகத்தியரை அக்னியோடு இணைத்து, 'அங்கி அகத்தியன் ' எனத் திருமூலரின் திருமந்திரம் குறிப்பிடும். எனவே வருணனுக்கு ஏற்பட்ட ஸ்கலிதத்தில் பிறந்தவன் அக்னி என்ற வேதகாலக் கதையின் திரிந்த வடிவங்களே முருகன் பிறப்பு பற்றிய இக்கதைகள் என்பது புலப்படும். சதபதப் பிராம்மணத்தில் பருவங்களின் தலைவனான பிரஜாபதி என்று குறிப்பிடப்படுபவர் ரிதம் அல்லது ருதுக்களின் தலைவனாக வேதப்பாக்களில் குறிப்பிடப்படும் வருணனே என்றோ மித்ரனே என்றோதான் கொள்ள இயலும். குப்தர் காலத்தில் பாசுபத சைவ சமய எழுச்சி ஏற்பட்டபோது சிவனே பரம்பொருள் என்ற கோட்பாடு உருவாகி, யஜுர்வேத (நமசிவாய) முத்திரையும் பெற்ற பின்னர்தான் சேயோன் (முருகன்) சிவனது மகனாகச் சித்தரிக்கப்பட்டிருக்க வேண்டும். இதனைப் பின்பற்றியே பரிபாடலில் முருகன் பிறப்பு வருணிக்கப்படுகிறது எனத் தெளிவாகத் தெரிகிறது[12].
திருமுருகாற்றுப்படையில் முருகன் பிறப்பு
இப்போது நமது முதன்மையான பிரச்னைக்கு வருவோம். திருமுருகாற்றுப்படையினைப் பரிபாடலைவிட மிகவும் முற்பட்ட நூலாகக் கொள்ள இயலாது என்பது தமிழறிஞர்கள் அறிந்த ஒன்றே. மட்டுமின்றி, திருமுருகாற்றுப்படையிலும், முருகனின் பிறப்பு வருணிக்கப்படும்போது, மகாபாரதத்திலும் குமார சம்பவத்திலும் குறிப்பிடப்படும் சில செய்திகள் இடம்பெறத்தான் செய்கின்றன. எடுத்துக்காட்டாக, ஸ்கலிதமான விந்தினை அக்னி ஏந்திச் சென்று கங்கையில் விடுவது. இது, 'ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப அறுவர்ப்பயந்த ஆறமர் செல்வ ' எனத் திருமுருகாற்றுப்படையில் குறிப்பிடப்படுகிறது (வரி. 253-255). ஐவருள் ஒருவன் என்பது பஞ்சபூதங்களுள் ஒருவனான அக்னி. இவன், ஸ்கந்தன் பிறந்தபோது தாங்கமுடியாத சூட்டோடு இருந்ததால் தனது கையில் ஏந்திக் கங்கையாற்றில் விடுத்தான் என மகாபாரதம், குமாரசம்பவம் கூறுகின்றன. மேலும் சிவனது மனைவியாகப் புராணங்களில் குறிப்பிடப்படும் மலைமகள் முருகனது தாயாகக் குறிப்பிடப்படுகிறாள் (வரி. 257). இவ்வாறிருக்க, திருமுருகாற்றுப்படை மட்டும் எவ்வாறு வேறுபடுகிறது என்ற கேள்வி எழுவது இயல்பே. ஆனால் உரையாசிரியர் நச்சினார்க்கினியர் ஐவருள் ஒருவரான அக்னி ருத்ரனின் தெய்வம் எனக் குறிப்பிடுகிறார். எனவே, அக்னி முருகனை சுவீகரித்த தந்தையே. முருகன் 'ஆல்கெழு கடவுட் புதல்வன் ' எனத் திருமுருகாற்றுப்படையில் குறிப்பிடப்படுகிறான். (வரி. 256) எனவே, ஆல்கெழு கடவுளே முருகனின் உண்மையான தந்தை எனத் தெரிகிறது. ஆலின் கீழ் அறம் பகர்ந்தான் எனப் பக்தி இலக்கியங்களிலும் ஆகமங்களிலும் அவற்றின் அடிப்படையில் சிற்பங்களிலும் சித்தரிக்கப்படும் தக்ஷிணாமூர்த்தி வடிவச் சிவன்தான் இவ் ஆல்கெழு கடவுள் என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும். ஆனால் இது சரியன்று. வடாஸ்ரயன் (ஆலமர் செல்வர்) என்பது குபேரனின் பட்டப் பெயராகும். ஆலமரத்தை வைஸ்ரவணாலயம் (குபேரன் கோயில்) எனக் குறிப்பிடுவது பழைய மரபாகும்[13]. 'ஆலமர் செல்வன் மகன் ' என்பது முருகனைக் குறிப்பிடுவதற்குச் சிலம்பிலும் (24:15) மணிமேகலையிலும் (3:144) பயன்படுத்தப்படும் அடைமொழியாகும். சிலம்பில் 'கயிலை நன்மலையிறைமகன் ' என்ற குறிப்பும் சேர்ந்து காணப்படுகிறது. கயிலைமலை சிவ வழிபாட்டுடன் இணைந்ததால் இது தெளிவாகச் சிவனையே குறிப்பிடுவதாகத் தோன்றும். ஆனால் வால்மீகி ராமாயணத்தில் கைலாச மலைச் சிகரத்தில் வசிப்பவன் தனதன் எனப்படும் குபேரன் என்ற குறிப்பு உள்ளது. (கைலாச சிகரா வாஸீதனத) வெள்ளிமலை என்பது குபேரன் மலை என்பதும் அங்குள்ள அலகம் என்ற சுனை அவனுக்குரியது என்பதும் வேறு சில புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, 'ஆல் கெழு கடவுள் ' எனத் திருமுருகாற்றுப்படை கூறுவது யக்ஷர் குலத்தவரின் முதன்மைத் தெய்வமான குபேரனாக இருக்கவே வாய்ப்புகள் அதிகமாகும். குபேரனுக்கும் ஹாரிதிக்கும் பிறந்த நளகூபரன், மணிக்ரீவன் என்ற இருவர் பற்றியும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. ஸ்கந்த - விசாக என்ற இரு கடவுளர்களே இணைந்து சுப்பிரமணியன் என்ற தெய்வமாயினர் என்றும் ஒரு கருத்து உண்டு. 'இரு பேருருவின் ஒரு பேர் யாக்கை அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி ' எனத் திருமுருகாற்றுப்படை (வரி. 57) குறிப்பிடுவது இக்கருத்தையே எனலாம்.
முருகனைச் செட்டி எனக் குறிப்பிடுவதுண்டு. சுந்தரர் தேவாரத்திலும், வேம்பத்தூரார் திருவிளையாடற்புராணத்திலும் தனிப்பாடல்களிலும் இத்தகைய குறிப்பு உள்ளது. இது குபேர மரபின் தொடர்பைக் காட்டுவதே என்பதில் ஐயமில்லை[14]. ஆயினும் நாம் முக்கியமாக ஆராய வேண்டியது, யக்ஷர் (இயக்கர்) குலத்துக்கும் முருகனுக்கும் இடையிலான தொடர்பேயாகும். இயக்கர்கள் குபேரனைத் தலைவனாகக் கொண்டவர்களாவர் என்பது புராண மரபாகும். இவர்கள் மலைக் குகைகளில் வசித்ததால் குஹ்யகர் எனவும் குறிப்பிடப்பட்டனர். முருகனைக் குறிக்க வழங்கும் குஹன் என்ற பெயர் இப்பொருளுடையதே. இலங்கையில் 'மலையக்க ', 'கிரியக்க ' என்ற பெயர்களில் முருகனை வழிபடுவது இந்தோ ஆஸ்திரலாய்டுப் பழங்குடி மரபாக இருந்துள்ளது[15]. இப்பழங்குடியினரால் வழிபடப்பட்ட தெய்வம் குருதியின் மணத்தை விரும்பி வருகிற பேயாகக் கருதப்பட்டது. போர் வீரர்களின் புண்ணிலிருந்து வடிகிற குருதியை மட்டுமின்றிப் பெண்டிரின் மாதவிலக்கு ரத்தத்தின் மணத்தையும் குஹ்யகர்கள் விரும்புவர் என்பது புராணங்களின் கருத்தாகும்[16]. அதாவது ரணஜன்னி, மாதவிலக்குக் காலத்தில் பெண்டிர்க்கு ஏற்படும் மனநோய் அல்லது மனஅழுத்தம் போன்றவை குஹ்யகர்களால் ஏற்படுவன எனக் கருதப்பட்டது[17]. முருகயர்தல் என்பது போர் தொடர்பாகவும் வேலன் வெறியாடல் என்பது காதல் தொடர்பாகவும் முருகனுக்கு நடத்தப்படும் வழிபாடுகள் என்பது சங்க இலக்கியக் குறிப்புகளால் தெரியவருகிறது. 'நெறியறிந்த கடிவாலுவன் அடியொதுங்கிப் பிற்பெயராப் படையோர்க்கு முருகயர ' என மதுரைக்காஞ்சி (வரி. 37-38) குறிப்பிடுவது போர் தொடர்பிலான முருகயர்தல் ஆகும். மாதவிலக்குக் காலத்தில் பெண்டிர் முருகன் கோயிலுக்குச் சென்றால் முருகனால் பீடிக்கப்பெற்றுச் சுருண்டு விழுந்து விடுவர் என்ற பொருளில் 'அணங்குடை முருகன் கோட்டத்துக் கலந்தொடா மகளிரின் இகழ்ந்து நின்றவ்வே ' எனப் புறநானூறு (பாடல் 299) குறிப்பிடுகிறது. முருகு என்ற சொல்லே முருக்குதல் (உடலை முருக்குதல், போர் செய்தல்) முருகுதல் (மணத்தல் - மணம்புரிதல்) ஆகிய இருவகைக் கருத்தோட்டங்களுடன் தொடர்புடையதாகும். இக்குறிப்புகளால், வடமொழிப் புராணங்களில் யக்ஷர் என்றும் குஹ்யகர் என்றும் குறிப்பிடப்படும் குள்ளமான உருவம் படைத்த இனக் குழுவினரின் தெய்வமே முருகன் என்ற கருத்து சங்ககாலத் தமிழர்களுக்கு அன்னியமானதன்று என நாம் ஊகிக்கலாம்[18].
பரிஷத்தும் முருகனும்
பரிஷத் என்ற பழங்குடியமைப்புச் சபை பற்றி வேதங்களும் மகாபாரதமும் குறிப்பிடுகின்றன. 'பாரிஷத்ய ' எனப் பரிஷத்தின் உறுப்பினர்கள் குறிப்பிடப்படுவர். பாரிஷத்யர்கள் மழையைத் தடுத்ததால் இந்திரன் தனது வஜ்ராயுதத்தை எறிந்து அவர்களை அழித்தான் என ரிக்வேதம் (III:33:7) குறிப்பிடுகிறது[19]. முருகன் பிறந்ததும் இந்திரன் தனது வஜ்ராயுதத்தை எறிந்து முருகனை ஆறு கூறாக்கியதாகப் பரிபாடல் (5:51-54) குறிப்பிடுகிறது. இது மேற்குறித்த வேதக் கருத்தின் வளர்ச்சியே எனலாம். பரிஷத் என்ற அமைப்புக்கு ஸ்கந்தனே தலைவன் என மகாபாரதம் குறிப்பிடும்[20]. பாரிஷத்யர் எனப்பட்ட இக்குடியரசுச் சபை உறுப்பினர்களுக்கும் தாய்வழிச் சமூகக் கூறுகள் உடைய மாருதிகணம் (மருத்கணம்) உறுப்பினர்களும் பலவகைகளில் ஒத்துக் காணப்படுவர். மாருதி கணத்தில் ஆடலும் பாடலும் நிகழ்வது வேதங்களில் குறிப்பிடப்படுகிறது[21]. பாரிஷத்யகணம் என்பதே சைவ சமய பக்தி இலக்கியங்களில், சிவன் நடனமாடும்போது இசைக்கருவிகள் இயக்கும் 'பாரிடகணம் ' எனக் குறிப்பிடப்படுகிறது[22]. இவை குள்ள பூதங்களாகும். ஆணாதிக்கச் சமூகத்துக்கு முற்பட்ட பழங்குடி அமைப்புப் பின்னணியைக் கொண்ட முருக வழிபாட்டில், இப்பாரிட கணங்களில் பெண்டிரும் இருந்திருக்க வேண்டும். 'மதிமுக மடவார்தம் பண் தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக் கண்டேத்தும் செவ்வேள் ' எனச் சிலம்பு (1:36-38) குறிப்பிடும் 'பண்தேய்த்த மொழியினார் ஆயம் ' இத்தகைய பரிஷத்தே எனலாம். கம்பராமாயணம் காலத்தால் பிற்பட்ட நூலாயினும், 'பந்தினை இளையவர் பயிலிடம் மயிலூர் கந்தனையனையவர் கலை தெரிகழகம் ' எனக் (1:2:48) குறிப்பிடுவதிலுள்ள கழகமும் இத்தகைய பரிஷத்தே எனக் கொள்வதில் தவறில்லை. 'கழகம் ' என்பது சூதாடும் இடம் என்ற பொருளில் குறளில் பயன்படுத்தப்பட்டுள்ளதும்[23], இது முன்னேற்றமடைந்த நாகரிகச் சமூகத்தின் ஒழுக்கக் கோட்பாடுகளால் தவறானதாகக் கணிக்கப்பட்ட பழங்குடிச் சமூக அமைப்புச் சபையே என்பதை உணர்த்தும்[24]. உண்மையில், திருமுருகாற்றுப்படை (வரி. 264) 'மங்கையர் கணவ ' என முருகனைக் குறிப்பிடுவது மங்கையர் கணத்தின் தலைவன் என்ற பொருளிலேயே ஆகும். 'கணப ' என்ற இச்சொல்லின் பெண்பால் 'கணிகை ' ஆகும். ஆடல் பாடலில் வல்ல கணத்தலைவியே கணிகை. (பழங்குடியமைப்பில் 'காளி 'யே கணிகை) இத்தகைய பரிஷத் கணத்தின் உறுப்பினர்களான பாரிஷத்யர்கள், 'விரூபகர்கள் ' என்றும், 'மகாபாஷாணயோதினாம் ' (பெரிய கற்கருவிகளைக் கொண்டு போரிடுவோர்) என்றும், பறவைகள் மிருகங்கள் போன்றவற்றைக் குலக் குறியீடுகளாகக் கொண்டவர்கள் என்றும் புராணங்களில் குறிப்பிடப்படும் விவரங்கள் இவர்கள் பழங்குடிச் சமூகத்தவரே என உணர்த்தும். எனவே முருகனைத் தமிழ்ச் சங்கத்தின் அல்லது கழகத்தின் முதல்வனாகக் குறிப்பிடும் மரபு அர்த்தமற்றதல்ல என நம்மால் உணரமுடிகிறது. கழகம் என்ற சொல், அறிஞர் வையாபுரிப்பிள்ளை குறிப்பிடுவதைப் போலக் 'கலப ' (Club) என்ற கருத்தோட்டத்துடன் தொடர்புடையதாகும். இதனோடொத்த பழங்குடிச் சமூக அமைப்பே பரிஷத் ஆகும். தமிழகக் கோயிற் கல்வெட்டுகளுள் பழமையான கல்வெட்டுகளில் 'மூலபரிடை '(மூலபரிஷத்) குறிப்பிடப்படுவது கவனிக்கத்தக்கது. மூலபரிடை ஆடல்பாடல் வடிவிலான வழிபாட்டை நிர்வகித்திருக்கக்கூடும்.[25]
குஹ்யக மரபின் பிற்கால எச்சங்கள்
குஹ்யக மரபும் பரிஷத் தொடர்புகளும் முற்றிலும் மறைந்து போய், முருகன் தெளிவாக வைதிக அடையாளம் பெற்று விட்ட பிற்காலத்தில் கூட, முருகன் பெண்டிரைப் பீடிக்கும் பேய்த் தெய்வம் என்ற கருத்து இலக்கியங்களில் இடம் பெறுகிறது. கி.பி. 17-ஆம் நூற்றாண்டைய வில்லுப்பாட்டு நூலான சிவனணைஞ்சான் கதையில், (குறவர் குலப்பூசாரியாகிய) 'மலை வேலன் ' எனப்படும் இருளன் ஆசான், கதை நாயகனான சிவனணைஞ்சானுக்கு வசியமருந்து தயாரித்துக் கொடுக்கிறான்; சிவனணைஞ்சான் அதனைத் தனது காதலி சின்னணைஞ்சிக்குக் கொடுக்க, அதனை அருந்தி மயங்கும் சின்னணைஞ்சி, முருகன் தன்னைப் பிடித்துக் கொண்டானோ என ஐயுறுகிறாள் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது[26]. அதே போல, குறமகளாகிய வள்ளி மாதவிலக்காக இருந்த வேளையில் அவளைச் செந்தில் முருகன் நெருங்கிச் சேட்டை செய்ததாக 17ஆம் நூற்றாண்டுக் கவிஞரான வசைகவி ஆண்டான் என்பவர் பாடுகிறார்[27]. இத்தகைய எச்சங்கள், மிகப் பிற்காலம் வரையிலும் முருகனின் குஹ்யக மரபு தொடர்ந்து மக்கள் நினைவில் இருந்து வந்துள்ளது என்பதை உணர்த்தும். இம்மரபு, இன அடிப்படையில் இந்தோ-ஆஸ்திரலாய்டு மற்றும் மங்கோலிய இனக் கூறுகள் கலந்த சிவந்த நிறக் தெய்வமரபாக இருக்கக்கூடும். பழந்திராவிட (Proto Dravidian) மரபு இது எனக் குறிப்பிடுவது மொழியியல் அடிப்படையில் பொருத்தமாக இருக்குமா எனத் தெரியவில்லை. இது தொடர்பாக முடிவு மேற்கொள்வதற்கு தொல்லியல், மானிடவியல், மொழியியல் துறைகள் சார்ந்த விரிவான ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வருணன்-திலோத்தமை (திலோத்தமா என்றால் எள் போன்ற உத்தமமான கரிய நிறத்தவள் எனப் பொருள்படும்) உறவு குறித்து மேற்குறித்த துறைகள் சார்ந்த ஆய்வுகளின் அடிப்படையிலான விளக்கம் இதற்குத் துணை புரியக் கூடும். ஆனால் பொதியமலைக் குறவர்கள், தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பு உருவாவதற்கு வித்திட்டிருக்க வேண்டும் என்பதிலும், இக் குறவர்கள் மேற்குறித்த இனக்கூறுகள் உடையவர்களாக இருந்திருக்க வேண்டும் என்பதிலும் ஐயமில்லை.
முருகன் - சிவன் உறவு முழுமையடைதல்
மகாபாரதம் வனபர்வதத்தில் தொடங்கும் சிவனுக்கும் முருகனுக்கும் இடையிலான தகப்பன் - மகன் உறவு முறை, பாசுபதத் தாக்கத்தால் பரிபாடலில் ஓரளவு வளர்ச்சி பெற்று கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் தொடங்கிய பக்தி இயக்கத்தின் பணியால் தெளிவான தோற்றத்தைப் பெறுகிறது எனக் கண்டோம். ஆயினும், கி.பி. 13ஆம் நூற்றாண்டில்தான் தமிழகக் கோயிகளில் - சிவாலயங்களில் - முருகனுக்கு வடமேற்குத் திசையில் தனிச் சன்னிதி அமைக்கும் மரபு தோன்றுகிறது. திக் பாலர்களில் வாயுவுக்கு உரிய திசை வடமேற்காகும். வாயுதிசையில் முருகனுக்கு சன்னிதி அமைப்பதற்கு அடிப்படையாக அமைவது, 'ப்ருஷ்ணி எனப்படும் நிலமகளுடன் புணர்ந்து ருத்ரன் மருத் (வாயு) கணங்களைப் பெற்றான் ' என்று பொருள்படும் வேதப் பாக்களின் கருத்தேயாகும். வைதிக மரபுப்படி, மருத் கணங்கள் என்பவை இந்திரனின் (தேவர்களின்) போர்ப் படைகள் ஆகும். தேவசேனாபதியாகிய முருகன், ருத்ரனின் மகனாக்கப்பட்டுவிட்டதால், வைதிக மரபுப்படி ருத்ரனுக்கும் ப்ருஷ்ணிக்கும் பிறந்த மருத் (வாயு) கணத்துடன் இணைக்கப்பட்டு முரண்பாடற்ற வகையிலும், அவனது பூர்விகத்தை உணர்ந்தவர்களும் ஏற்கும் வகையிலும், சிவாலயத்தின் வடமேற்கில் அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்கிறான். இக்கால கட்டத்திற்குப் பின்னர், சைவம் என்றாலே சிந்தாத்த சைவம் என்ற அடையாளத்தைப் பெற்று விடுகிறது. சைவ சமயத்தைப் பின்பற்றிய, அதே வேளையில் இசை - நடனக் கலைப் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த அருணகிரி நாதர் போன்றோர் மட்டுமே முருகனின் பூர்விகத்தை மறக்காமல் போற்றினர்.
அடிக்குறிப்புகள்:
1. 'முருகாற்றுப்படுத்தல் ' என்ற அகநானூற்றுக் குறிப்புக்கு உரையாசிரியர்கள், 'முருகனை மேனியின் கண்ணே ஆற்றுப்படுத்தல் ' எனப் பொருள் கொண்டுள்ளனர். திருமுருகாற்றுப்படை, இத்தகைய சடங்குக்கு உரிய மந்திரக் கவிதையாகும்.
2. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கோவை மாவட்டப் பதிவு அலுவலர் (ஓய்வு) திரு. இரா. பூங்குன்றன் அவர்களால் கண்டறியப்பட்ட ஓவியங்கள் இவை. இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் சில கருத்துகள் செம்மைப்படுத்தப்படுவதற்கு அவருடனான உரையாடல்கள் பெருமளவுக்கு உதவிகரமாக இருந்தன.
3. சிவன் நால்வகை நிலங்களின் தெய்வங்களான சிறு தெய்வங்களுக்கு மேம்பட்ட பரம்பொருளாதலால் தொல்காப்பியர் சிவனைக் குறிப்பிட்டுச் சிறுமைப்படுத்தவில்லை என்பது போன்ற விளக்கம் சில அறிஞர்களால் வழங்கப்படுவது ஏற்கத்தக்கதாக இல்லை. பார்க்க: பக்கம் 21-22, துர்க்கை வழிபாடும் சிற்பங்களும் - ச. கிருஷ்ணமூர்த்தி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை - 600108, 2000.
4. சிவலிங்கம் என்று சைவர்களால் குறிப்பிடப்படும் வடிவம் சங்ககாலத்தில் கந்து அல்லது கந்தழி என குறிப்பிடப்பட்டது. இலங்கையின் பழமையான வரலாற்று நூலான மகாவம்சத்தில் தமிழகத்தில் லிங்க வழிபாடு வழக்கிலிருந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இக் குறிப்புகள் கந்து வழிபாட்டையே குறிப்பிடுகின்றன என்பதில் ஐயமில்லை. கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் எழுதப்பட்ட பட்டினப்பாலையில் (வரி 249) பூம்புகார் நகரிலிருந்த 'கந்துடைப் பொதியில் ' குறிப்பிடப்பட்டுள்ளது. திருமுருகாற்றுப்படை (வரி 226) முருகன் உறைகின்ற இடங்களாக மன்றம், பொதியில், கந்துடை நிலை ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. முருகனை ஸ்கந்தன் என அழைக்கின்ற சமஸ்கிருத மரபு கந்து வழிபாட்டு தொடர்பில் உருவான மரபாகலாம்.
5. திருச்சிராப்பள்ளி கீழ்க் குடைவரையில் (கி.பி. 7-8ஆம் நூற்றாண்டுகள்) முருகனுடன் குள்ள பூதங்கள் நிற்கின்ற காட்சி சிற்பமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
6. முருக வழிபாட்டில் பூசாரியாகச் செயல்பட்ட வேலன் முருகனைத் தன் மேனியின்கண்ணே ஆற்றுப்படுத்தியமையால் அவன் குருநாதனாகவே கருதப்பட்டிருக்க வேண்டும். குரவன் என்ற சொல்லால் சங்க காலத்தில் வேலன் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். 'குன்றக் குரவை ' என்ற முருகன் தொடர்பான ஆடல் குரவன் (குருநாதன்) என்ற வழக்கோடு தொடர்புடையதாகத் தோன்றுகிறது. கெளமாரம் என்பது குமரன் (முருகன்) வழிபாட்டுச் சமயமாகும். இவ்வழிபாட்டு மரபின் அடிப்படையே சாமியாடுதல் தான். துளு மொழியில் 'கோமரே ' என்ற சொல் சாமியாடுதலையும், குறி சொல்லுதலையும் குறிக்கும். நெல்லைச் சீமையில் பேய்க் கோயில் என அழைக்கப்படும் ஒருவகைச் சுடலை கோயில்களில் கோமரத்தாடி என்ற சாமியாடுபவர் வழிபாட்டில் முதன்மையான இடம்பெறுவது வழக்கம். 'கெளமாரத்து ஆடி ' என்ற சொல்லே இவ்வாறு வழங்குகிறது என்பது தெளிவு. குறி சொல்லுதல் என்பதை மட்டும் எடுத்துக்கொண்டால் அது அண்மைக் காலம் வரை குன்றக் குறவர் மரபாகவே இருந்து வந்துள்ளது.
7. லாவோஸ் ராஜ்யத்தின் வாட்லுவாங்கெள எனுமிடத்தில் உள்ள சமஸ்கிருதக் கல்வெட்டில் 'பகவந் மஹாபுருஷ ப்ரஹ்மண்ய தாநுசாரீவ ப்ராஹ்மண்ய பாவே ' என்ற வரி உள்ளது. (பக்கம் 95, பல்லவர் செப்பேடுகள் முப்பது - பி. ஸ்ரீ., தி.நா.சு., உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை - 600113, 1999) 'பகவான் மகாபுருஷனுடைய பிரம்மண்ய பாவத்தை அனுசரித்துச் செல்லும் பிராம்மண பாவம் உடையவன் ' எனப் பொருள்படும். இது அகஸ்தியரைக் குறிக்கும் என்றும், சுப்பிரமணியரிடம் அகஸ்தியர் தமிழ் கற்றார் என்ற புராணக் கதையும், அகஸ்தியர் சிவனோடு ஒன்றுபடுத்தி அடையாளங் காணப்பட்டதால் முருகனிடம் சிவன் சிஷ்யனாகப் பாடம் கேட்டார் என்ற கதையும் உருவாகியிருக்கலாம் எனத் தி.நா.சு. கருதுகிறார். ஸ்கந்தசிஷ்யன் என்ற பல்லவனின் பெயர் அகஸ்தியரையும் சிவனையும் குறிக்கும். 'ஜடிலத்தவன் இட்ட விசிட்ட குலத்தொரு செட்டி யிடத்தின் உதித்தருள் ருத்ர ஜன்மன் பெயர் செப்பியிடப் பரிவாலே சனகற்கும் அகஸ்த்ய புலஸ்த்ய சனற் குமரற்கும் அனுக்ரஹ மெய்ப்பலகைச் சதுபத்து நவப் புலவர்க்கும் விபத்தியின் ஞான படலத்துறு லக்கண லக்ய தமிழ் த்ரயமத்தில் அகப் பொருள் வ்ருத்தியினைப் பழுதற்றுணர்வித்தருள் வித்தக சற்குரு நாதா ' என்று அருணகிரி நாதர் திருப்புகழில் ஓசைநயத்துடன் வருணிப்பது சிவனுடைய தட்சிணாமூர்த்திக் கருத்தோட்டத்தையும், முருக வழிபாட்டுடன் இணைத்து இசையுடனும் ஆடலுடனும் இணைந்த அகப்பொருள் (களவு அல்லது காந்தர்வ மணம்) மரபினை அறிவுலகத்துக்கு அறிமுகப்படுத்தியவன் முருகனே என்ற ஒரு சித்திரத்தைப் படைக்கும் முயற்சியாகும்.
8. பிரணவம் (ஓம்) என்பது ஹீப்ரு மொழியில் 'ஒமேகா ' என வழங்கப்படுகிற இறுதி எழுத்தாகும். ஓ-மெகா அல்லது மெகா-ஓ என்றால் பெரிய ஓ எனப் பொருளாகும். எல்லையற்றது என்பது இதன் பொருள். ஹீப்ரு மொழியில் சொற்றொடர்களை வலமிருந்து இடமாக எழுதும் முறை நிலவிற்று. இடமிருந்து வலமாக எழுதும் முறை பின்பற்றப்பட்ட நாடுகளில் ஹீப்ரு எழுத்துகளும் இட வல மாற்றம் பெற்றன. ஒமேகா என்பது குறியீட்டில் எழுதப்பட்டு ஓம் என உச்சரிக்கப்பட்டது. குறியீட்டில் ஓம் என எழுதப்படுவது இம் மரபைப் பின்பற்றியே. வேதம் ஓதும் பிரம்மாவுக்குப் பிரணவத்தின் பொருளை முருகன் உரைத்தான் என்பதை இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், 'பிராமி ' எழுத்து முறையை உருவாக்கியவனே நல்ல பிராமணனாகிய சுப்பிரம்மண்யன்தான் என்று பொருள்படக்கூடும். பிராமி எழுத்து முறை, யூதர்களின் வட அரமைக் எழுத்து முறையை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டது என்பது தொல்லெழுத்து நிபுணர்களின் கருத்தாகும்.
9. 'விரூபக்கபதி மகாசேன ' - இக்ஷ்வாகு மன்னர் கல்வெட்டுகள் - Epigraphia Indica - Vol. XX, p.6 (Archaeological Survey of India, New Delhi)
10. Elements of Hindu Iconography, T.A.Gopinatha Rao, Motilal Banarasidas, New Delhi, 1985.
11. மகாபிரம்மா, திலோத்தமையின் நடனத்தைக் கண்டு காமவசப்பட்டது மணிமேகலையில் கூறப்படுகிறதெனில், அவனுக்கு நான்கு முகங்கள் ஏற்பட்ட பின்னணி, திலோத்தமையின் ஆடலை ரசிப்பதற்காக மூன்றரைக் கோடி வருடத் தவத்தின் பலனை இழந்து பெற்ற முகங்களே என்ற கதை சீவக சிந்தாமணி பாடல் 207இல் கூறப்படுகிறது. இந்நூல்களில் முதுபெரும் கடவுளான பிரம்மாவாக அல்லது நான்முகனாகச் சித்திரிக்கப்படுபவர் வேதகால வருணனே ஆவார்.
12. மகாபாரதத்தில் குப்தர்காலத்து இடைச் செருகல்கள் உள்ளன என அறிஞர்கள் கருதுகின்றன. மகாபாரதத்தில் ஓரிடத்தில் சிவன் லகுளீசராகக் குறிப்பிடப்படுகிறார். அத்தகைய குறிப்புகள் பாசுபத சைவத்தின் செல்வாக்கை உணர்த்தும். வியாசரின் மகாபாரதம் ஆரண்ய பர்வம் 234-6ஆம் அத்தியாயங்களில் அக்னி பகவான் சப்தரிஷிகளின் மனைவியர் மேல் ஆசை கொண்டபோது ஸ்வாஹாதேவி, அருந்ததி தவிரப் பிற அறுவரின் வடிவங் கொண்டு அவனுடன் கூடியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 'மேருக்குன்றத்து ஊறுநீர்ச் சரவணத்து அருந்திறல் முனிவர்க்கு ஆரணங்காகிய பெரும் பெயர்ப் பெண்டிர் பின்பு உளம் போக்கிய அங்கிமனையாள் அவரவர் வடிவாய்த் தங்கா வேட்கை தனையவள் தணித்ததூஉம் ' என மணிமேகலை 18: 92-97 கூறும். இது அறுமுகன் பிறந்த கதைக்கு அடிப்படையாகலாம். அறுமுகனை அக்னிபுத்ரன் எனக் கொள்வதற்கு இக்கதையே ஏற்றது. (இருப்பினும், பிக்ஷாடனர் - ரிஷிபத்னி குறித்த கதை, சப்தமாதர் - வீரபத்ரர் குறித்த கதை ஆகியனவும் இதனோடு தொடர்புடையனவே.) இக்கதை, குப்தர்கால இடைச் செருகலாக மகாபாரதத்தில் நுழைந்திருக்கலாம்.
13. மாசிமகம் - வருணன் வழிபாடு, எஸ். இராமச்சந்திரன் - மாசிமகமும் மங்கலநீர் விழாவும், பக்கம் 33, சேகர் பதிப்பகம், சென்னை - 600 078, 1991.
14. வைதிக சமயத்தின் தத்துவத் தலைவனாக அல்லது வேதகாலத்து ஞான காண்ட முதல்வனாகக் கருதத்தக்க வருணனின் செல்வ வளத்தன்மை பாற்கடலாக உருவகிக்கப் பட்டிருக்க வேண்டும். வருணனின் இரு தொடைகள் க்ஷார, க்ஷீர, உததிகள் (உப்புக்கடல், பாற்கடல்) என்ற கருத்தோட்டம் அதர்வண வேதத்தில் காணப்படுகிறது. க்ஷீரன் என்ற கருத்தோட்டம் குவீரன், குவேரன் எனப் பிராகிருதத்தில் திரிந்து வழங்கி மீண்டும் குபேரன் என்ற வடிவில் புராண காலத்தில் சமஸ்கிருத வடிவம் அடைந்திருக்கலாம். அனைத்துச் செல்வங்களுக்கும் அதிபதி க்ஷீரனே (பாற்கடல் இறைவனே) என்பது பெளராணிக மரபாகும். பிராமணன் செட்டியாக உருமாற்றம் அடைந்தது, வருணன் குபேரனாக உருமாற்றம் அடைந்ததை ஒட்டி நிகழ்ந்த மாற்றமே ஆகும்.
15. South India and Sri Lanka - K.K. Pillai, Page 15, Madras University, 1975
16. Dictionary of Hinduism - Page 105, Margaret and James Stutley, Allied Publications Pvt. Ltd., Chennai.
17. Hysteria என்ற சொல் Hyster (கருப்பை) என்ற கிரேக்கச் சொல்லோடு தொடர்புடையது. அதாவது பருவகாலத்தில் பெண்டிர்க்கு ஏற்படும் மனநோய் அல்லது மனஅழுத்தமே ஹிஸ்டாரியா எனக் கருதப்பட்டது. எனவே இந்நம்பிக்கை பழங்குடி மூலமுடையது ஆகும். முருகன் இளம் பெண்டிரை வசியம் செய்து வசப்படுத்துவதை மாற்றி சாந்திப்படுத்துவதற்காக வேலனின் வெறியாட்டம் நிகழ்வதுண்டு. காதல் வசப்பட்ட பெண்டிர் தமது உளநோய் முருகனால் நேர்ந்ததன்று என்று உறுதிபடக் குறிப்பிடுவதும் உண்டு. பின்னாளைய இலக்கியங்களில் இது வெறிவிலக்குதல் என்ற துறையாகவே வளர்ச்சி பெற்றது. அதே வேளையில், இளம் பெண்டிர் மனதில் முருகனைப் பற்றிய ஓர் அச்சமும் தொடர்ந்து இருந்து வந்துள்ளது. பருவப் பெண்டிருக்கு முருகனை வழிபடும் உரிமை மறுக்கப்படுவது இன்றும் சில பகுதிகளில் பழங்குடி மரபின் எச்சமாக நிலவி வருகிறது. மும்பைக்கு அருகிலுள்ள பர்வதகிரி சுப்ரமணியர் கோயிலில் பெண்டிர் அனுமதிக்கப் படுவதில்லை எனத் தெரிய வருகிறது. இக்கட்டுரையின் அடிக்குறிப்பு [2]-ல் குறிப்பிடப்படும் குமிட்டிப்பதி பாறை ஓவியங்கள் இடம்பெற்றுள்ள மலைப்பகுதிக்குப் பெண்டிர் செல்லக்கூடாது என்ற ஒரு மரபு வழக்கிலுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழக்கிலுள்ள தடையும் இத்தகைய பழங்குடி மரபுத் தொடர்ச்சியே.
18. நெடுவேள் என முருகனைக் குறிப்பிடும் மரபு தனி ஆய்வுக்குரியது. திருச்செந்தூரைப் பொருத்தவரை இது இந்திரனைக் குறிக்கக் கூடும்.
19. மேற்கோள்: Chapter 9. Aspects of Political Ideas and Institutions in Ancient India - R.S.Sharma - பதிப்பு: I.C.H.R. இக்குறிப்பு, 'மழை பிணித்தாண்ட பாண்டிய மன்னன் ' பற்றிய பழங்கதைக்கும் அடிப்படையாகலாம். இக்கதை, 'மேகஞ்சிறை கொண்ட ஐயனார் வில்லுப்பாட்டில் ' (நெல்லை மாவட்டம், ஆலங்குளம் அருகில் உள்ள மகிழ்வண்ணநாதபுரம்) பாடப்படுகிறது.
20. மகாபாரதம் X:7 :8; III 228 : 1; IX : 45 : 102; 46 : 79-88. மேற்கோள் Chapter IX. Aspects of Political Ideas and Institutions in Ancient India - R.S.Sharma - I.C.H.R.
21. அதர்வண வேதம் IV : 15:4 - மேற்கோள்: Chapter VIII. Aspects of Political Ideas and Institutions in Ancient India - R.S.Sharma - I.C.H.R.
22. 'பாரிடம் பாணி செய்ய ' - சம்பந்தர் தேவாரம் - திருவொற்றியூர்ப் பதிகம் பாடல் 2. தேவாரப் பாடல்களில் 'பாரிடம் ' என்ற சொல் பூதகணங்களைக் குறிப்பதற்குப் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
23. சூதுபொருதல் என்பது, குடியரசு கணங்களில் அரசுரிமையை நிர்ணயிக்கும் போட்டிகளுள் ஒன்றாக இருந்ததென்பது மகாபாரதக் கதையாலும் புலனாகும். மேலும் விவரங்களுக்குப் பார்க்க: Chapter XI. Aspects of Political Ideas and Institutions in Ancient India - R.S.Sharma - I.C.H.R.
24. 'கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார் ' (குறள் 935); 'பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின் ' (குறள் 937)
25. 'இவாள்வார் திருவிழாவிலேழா நாளாலாடிப் பாடின பரிஷை நாயகன்மார்க்கு ' - வடஆர்க்காடு மாவட்டம், வாலாஜாபாத் வட்டம் திருமால்புரம் - முதல் இராஜராஜ சோழன் கல்வெட்டு - பதிப்பு: சூ. சாமிநாதன், மைசூர் - ஆவணம் இதழ் 4, பக்கம் 3, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர்.
'அருஷை யொடரஹர வெனக் குனித்தடிமை செய் பருஷையர் வெஹுவிதம் பயின்றது ' என்று இராஜராஜ சோழனின் திருக்கோவலூர்ப் பாடற் கல்வெட்டு குறிப்பிடுகிறது. (பதிப்பு: பிற்காலச் சோழர் வரலாறு, தி.வை. சதாசிவ பண்டாரத்தார், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், 1974, பக்கம் 607-608) குனித்தல் என்ற சொல் பூசையின் ஒரு பகுதியாகிய ஆடலைக் குறிக்கும். பருஷையர் (பரிஷை நாயகன்மார்) என இக்கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுவோர் பாரிஷத்யர்களே என்பதில் ஐயமில்லை.
26. சிவனணைஞ்சான் கதை, பதிப்பாசிரியர்: நிர்மலாதேவி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை - 600 113, 1999.
27. 'மைச்சேலுண் கண்ணொருத்தி மாதவிடாய்க் காரியவள் மாட்டுச் சென்று கைச்சேட்டை செய்த கந்தா ' - வசைகவி ஆண்டான் கவிராயர் பாடல், தமிழில் வசைப் பாடல்கள், பதிப்பு: முனைவர் ஆ. தசரதன், தமிழ் ஓலைச் சுவடிகள் பாதுகாப்பு மையம், சென்னை - 600 041
maanilavan@gmail.com