Showing posts with label Tamil Language. Show all posts
Showing posts with label Tamil Language. Show all posts

Monday, January 12, 2015

தமிழ் எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சி வினோத் ராஜன் வர்சுவல் வினோத்

Arachalur Inscription Photo-courtesy  The Hindu

தமிழ் எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சி வினோத் ராஜன் வர்சுவல் வினோத்
மார்ச் 5, 2011


zha_tamil_correctஇந்தியாவின் பண்டைய இலக்கிய மொழிகளுள் ஒன்று தமிழ் மொழி. திராவிட மொழிகளிலேயே மிக முந்தைய இலக்கிய படைப்புகள் நிகழந்தது தமிழில் தான். பண்டைக்காலத்தில் வடபுலத்து சமஸ்கிருத பிராகிருத மொழிகளுக்கு இணையாக இலக்கியம் சமைக்கப்பெற்றதும் தமிழ் மொழியில் தான். தமிழ் இவ்வாறு தன்னை நிலைநிறுத்திக்கொள்வதில் முக்கிய பங்கு அதன் எழுத்தும் வகித்தது.
 
ஒரு மொழியை நிலைநிறுத்த எழுத்து என்பது என்றுமே மிகவும் அத்தியாவசியமானது. எழுத்தில்லாத மொழி நிலைப்பது கடினம். மொழியினை போற்றி பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு இட்டுச்செல்லக்கூடியது எழுத்து மட்டுமே. எழுத்தற்ற மொழி மிக விரைவிலேயே சிதைவுக்கு உள்ளாகி உருத்தெரியாமல் போய் விடும். இலக்கணம் சமைக்கவும் இலக்கியம் படைக்கவும் எழுத்து முக்கியம். இன்று எழுத்துமுறை இல்லாது இருக்கும் மொழிகள் அனைத்தும் இலக்கியமற்ற திருத்தம்பெறாத மொழி எழுத்துமுறைகள் பலவாறாக வகைப்படுத்தப்படுகிறது. உயிர் எழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள், உயிர்மெய்யெழுத்துக்கள் என எழுத்துக்களை வகுக்கும் எழுத்துமுறை “அபுகிடா” என்று அழைக்கப்படுகிறது. இந்திய மற்றும் சிங்கள, தாய், கம்போடிய, லாவோ முதலிய தெற்காசிய-தென்கிழக்காசிய எழுத்துமுறைகள் அனைத்தும் இந்த வகையின் கீழ் வரும். தமிழ் எழுத்துமுறையும் அபுகிடா வகையை சார்ந்ததே.

சிந்து சமவெளி எழுத்துக்கள்

இந்தியாவில் மிகவும் பழமையாக கிட்டக்கூடிய எழுத்துக்கள் சிந்துசமவெளி எழுத்துக்கள். ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. சிந்து சமவெளி எழுத்துகளின் மொழி இந்தோ-ஆரியம் என்றும், பழந்தமிழ் என்றும், முண்டா மொழிக்குடும்பத்தை சார்ந்தது என்றும் இஷ்டத்திற்கும் கருத்துக்கள் விரவி கிடக்கின்றன. பார்க்கப்போனால், சிந்து சமவெளி எழுத்துக்கள் உண்மையான எழுத்துமுறையா அல்லது வெறும் குறியீடுகளா என்பது கூட இன்னும் முழுமையான ரீதியில் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு நிறுவப்படவில்லை.


பிராமி

சிந்துசமவெளி எழுத்துக்களுக்கு பிறகு, அசோகர் காலத்தில் 300 BCE அளவில் இந்தியா முழுதும் தொல்லியல் நிபுணர்களால் பிராமி  என்றழைக்கப்பெறும் எழுத்துக்களில் பல்வேறு ஸ்தூபிகள், கல்வெட்டுகள் உருவாகின்றன. இந்தியா முழுதும் பிராகிருத மொழியினை பிராமி எழுத்துக்களிலியே அசோகர் கல்வெட்டுகளில் பொறிக்கிறார். அந்த பிராமியே பல்வேறு பிரதேச வேறுபடுகளால், திரிந்து, பல்வேறு உருபெற்று நவீன இந்திய எழுத்துமுறைகள் உருவாகின. அசோகரின் பிராமி எழுத்துமுறை அரமேய எழுத்துமுறையின் தாக்கத்தில் உருவானது என்று பொதுவாக கருதப்படுகிறது.
 
Brahmi_asoka_article
அசோகரின் அலஹாபாத் ஸ்தூபி கல்வெட்டு

brahmi_grantha_transcription

தே³வாநம்ʼ பியே பியத³ஸீ லாஜா ஹேவம்ʼ ஆஹா
அம்ʼநத அகா³ய த⁴ம்ʼம காமதாய அகா³ய பல […]

சங்க காலத்திலேயே ஜைன மதமும் பௌத்த மதமும் தமிழகத்தில் ஸ்தாபிக்கப்பட்டு, நிலைபெற்றுவிட்டன. இவ்விரு மதங்களுள் தமிழகத்தில் முதலில் ஸ்தாபனம் செய்யப்பட்ட்து ஜைன மதமாகத்தான் இருக்க வேண்டும். (சமண [ < சிரமண ] என்பது பௌத்த-ஜைன மதங்களை ஒன்றுசேர குறிக்கூடிய சொல், தமிழகத்தில் ஜைன சமயத்தை மட்டும் குறிப்பதில் இருந்தே, சிரமண சமயங்களில், முதலில் நுழைந்த்து ஜைன சமயம் என்று யூகிக்கலாம்).
அவ்வாறு ஜைன சமயத்தை வடநாட்டில் இருந்து தமிழகத்தில் ஸ்தாபனம் செய்யவந்த ஜைன முனிவர்களும் ஆச்சாரியர்களும் வடநாட்டில் வழக்கில் இருந்து பிராமி எழுத்துமுறையை தமிழகத்துக்கு கொண்டு வந்ததாக கருதப்படுகின்றது. ஜைனர்களும் பௌத்தர்களும் பொதுவாகவே மக்கள் மொழியில் போதிப்பவர்கள். எனவே, தமிழில் தங்களுடைய போதனைகளை வெளிப்படுத்த வேண்டி, பிராமியை தமிழுக்கு கொண்டுவந்திருக்க வேண்டும். ஆரம்ப கால தமிழ் பிராமி கல்வெட்டுகள் பெரும்பாலும் ஜைன முனிவர்களின் குகைகளில் காணப்படுவது இக்கருத்துக்கும் வலுசேர்ப்பதாக உள்ளது.

தமிழ் பிராமி

அவ்வாறு அவர்கள் கொண்டு வந்த பிராமி எழுத்துமுறை தமிழுக்குரியதாக இல்லை. பிராகிருதத்தின் ஒலியியலும் தமிழின் ஒலியியலும் வேறானவை. தமிழில் கூட்டெழுத்துக்கள் அதிகம் கிடையாது, சொல்லிறுதி தனிமெய்களும் அதிகம். பிராகிருத்ததில் மகரத்தை தவிர்த்து வேறு சொல்லிறுதி மெய்கள் வருவதில்லை. அதனால் அசோக பிராமியில் தனி மெய்யினை (க், ங் முதலியவை) குறிக்க இயலாது, மெய்யெழுத்துக்கூட்டுகளை வேண்டுமென்றால் கூட்டெழுத்துக்களாக எழுத இயலும் (உதாரணமாக, க்ய, க்த ஆகியவற்றை எழுதலாம், ஆனால் க் என்ற தனி மெய்யை எழுத முடியாது) .  எனவே, பிராமியை தமிழுக்கு ஏற்றார்போல் செய்ய பல்வேறு முயற்சிகள் நிகழ்ந்தன.
பிராகிருதத்தில் இல்லாத தமிழுக்குரிய ற,ழ,ன,ள முதலிய எழுத்துக்களுக்கு வடிவங்கள் உருவாக்கப்பட்டன, எ, ஒ என்ற குறில் எழுத்துக்களை ஏகார, ஓகார எழுத்துக்களின் மீது புள்ளியினை வைத்து உருவாக்கினர். [பிராகிருதத்தில் எ, ஒ கிடையாது] (தமிழில் எ, ஒ’விற்கு புள்ளி வழக்கம் வீரமாமுனிவர் காலம் வரை நீடித்தது) தமிழில் இல்லாத வர்க்க எழுத்துக்கள் பொதுவாக கைவிடப்பட்டன. அசோக பிராமியின் கூட்டெழுத்து முறையும் கைவிடப்பட்டது.
தமிழ் பிராமி மூன்று கட்டங்களை உடையாதாக அறியப்படுகிறது, முற்கால தமிழ் பிராமியில், எழுத்தில் உள்ளார்ந்த அகரம் கிடையாது. ஆகார’க்குறி அகரம், ஆகாரம் இரண்டையும் குறித்த்து. இடைக்கால தமிழ் பிராமியில், ஆகாரக்குறி நிலை பெற்றது. அனால், ஒரு எழுத்து மெய்யா, அல்லது அகர உயிர்மெய்யா என்ற தெளிவு இருக்காது. பிற்கால தமிழ் பிராமியில் மெய்யெழுத்துக்களையும் (மற்றும் எகர ஒகரங்களையும்) குறிக்க புள்ளி உருவாக்கப்பட்ட்து அதாவது, ”நிகழ்காலம்” என்ற சொல் பின்வாறாக எழுதப்பட்டிருக்கும்:
முற்கால முறை : நிகாழகாலாம
இடைக்கால முறை : நிகழகாலம
பிற்கால முறை : நிகழ்காலம்

300 – 400 CE வரை தமிழ் பிராமியில் எழுதப்பட்டு வந்தது,

தொல்காப்பியம் புள்ளியை எகர ஒகரங்களுக்கும் மெய்யெழுத்துக்களுக்கும் குறிப்பிடுவதில் இருந்து, தொல்காப்பிய காலத்தில் புள்ளி வழக்கில் வந்திருக்க வேண்டும்.
 
pugalur_tamil_brahmi_inscription
2ஆம் நூற்றாண்டு CE – புகழூர் தமிழ் பிராமி கல்வெட்டு

உள்ள உரை:
கொஆதன செலலிருமபொறை மகன  
பெருஙகடுஙகொன மகன ளங 
கடுஙகொ ளஙகொ ஆக அறுததகல  

புள்ளியோ, எகர ஏகார, ஒகர ஓகார வேறுபாடோ கல்வெட்டில் இல்லாததை கவனிக்கவும். இகரமும் விடுபட்டுள்ளது

திருந்திய உரை:
கோஆதன் செல்லிரும்பொறை மகன் 
பெருங்கடுங்கோன் மகன் [இ]ளங்
கடுங்கோ [இ]ளங்கோ ஆக அறுத்தகல்

முசிறி – தமிழ் பிராமி  எழுத்துக்கள் – 2ஆம் நூற்றாண்டு பொது.சகாப்தம் 
 
 brami-amana 

”அமண” (< சமண) என்று பானையில் பொறிக்கப்பட்டுள்ள தமிழ்-பிராமி எழுத்துக்கள். ( அதற்கு அடுத்து இருக்கும் இரண்டு வடிவங்கள்- சித்திரக்குறியீடுகள்). பழந்தமிழ் துறைமுகமான முசிறியில் [இன்றைய கேரளாவின் எர்ணாகுளத்தில் “பட்டணம்”] இது கிடைத்துள்ளது. 2ஆம் நூற்றாண்டளவிலேயே ஜைன மதம் சேர நாட்டில் செல்வாக்குடன் திகழ்ந்தது என்பதை இதன் மூலம் அறியலாம்.
 
வட்டெழுத்து

பிறகு ஓலைச்சுவடியில் எழுதுவதற்கு வசதியாக தமிழ் பிராமி வட்ட வடிவமாக உருமாற துவங்கியது. இந்த காரணத்தினால் இக்காலக்கட்டத்து தமிழ் எழுத்து வட்டெழுத்து என அழைக்கப்படுகிறது. வட்டெழுத்து உருவான அதே கால கட்டத்தில், வடமொழி எழுதுவதற்காக பிராமியில் இருந்து பல்லவ கிரந்தம் என்ற எழுத்து பல்லவர் காலத்தில் தோன்றியது. வட்டெழுத்தும் பல்லவ கிரந்தமும் ஒரே காலக்கட்டத்தில் தோன்றியவை.
ஐந்தாம் நூறாண்டில் இருந்து 11ஆம் நூற்றாண்டு வரை தமிழை எழுத வட்டெழுத்து பயன்பட்டது. 7ஆம் நூற்றாண்டு வரை வட்டெழுத்து மட்டுமே, தமிழை எழுத பயன்பட்டது. அதன் பின்னர் அதன் பயன்பாடு படிப்படியாக குறைந்து. பிறகு நவீன தமிழ் எழுத்துக்களின், மூலமான பல்லவ-தமிழ் எழுத்துக்களால் முழுமையாக தமிழ் எழுதப்பட துவங்கியது. 11ஆம் நூற்றாண்டு வரை மட்டுமே தமிழ் எழுத பயன்பட்டாலும், 19ஆம் நூற்றாண்டு வரை கேரள தேசத்தில் மலையாள மொழியினை எழுத பயன்பாட்டில் இருந்தது. வட்டெழுத்தின் இன்னொரு வடிவமான கோலெழுத்து முறையும் மலையாளத்தை எழுத நீண்ட காலம் வழக்கில் இருந்தது.
வட்டெழுத்தில் புள்ளியின் பயன்பாடு நிச்சயமாக காணப்படும். அதனால், எகர ஒகரங்களும் தெளிவாக குறிக்கப்பெறும். ஒரே விஷயம் ப’கர வ’கர வேறுபாடுகள் அவ்வளவு தெளிவாக இருக்காது, இரண்டும் மிகவும் ஒத்த வடிவங்களை பெற்றிருக்கும்.

vatteluttu_inscription_corrected


மஹேந்திர பல்லவர் காலத்து நடுகல்லில் வட்டெழுத்து 

கோவிசைய மயேந்திர 
பருமற்கு முப்பத்திரண்டா 
வது பொன்மோதனார் சே 
வகன் வின்றண்[வ]டுகன்
புலி குத்திப் பட்டான் 
கல்
 
பல்லவ தமிழ்

பல்லவ கிரந்தத்தை பற்றி முன்னரே குறிப்பிட்டிருந்தோம் அல்லவா ? பல்லவ கிரந்தத்தை அடிப்படையாக கொண்ட எழுந்த பல்லவ-தமிழ் எழுத்துக்களும் அதே 7ஆம் நூற்றாண்டளவில் தமிழை எழுத பிரயோகிக்கப்பட ஆரம்பித்த்து. பல்லவ கிரந்தத்தில் இல்லாத ற,ழ,ன போன்றவை வட்டெழுத்தில் இருந்து கடன்பெற்று எழுதப்பட்டன. மகரமும் லகரமும் கூட வட்டெழுத்தை அடிப்படையாக கொண்ட வடிவத்தை பெற்றிருந்தன.
இந்த காலக்கட்டங்களில், அதாவது 7ஆம் நூற்றாண்டில் இருந்து, தமிழ் இரண்டு எழுத்துமுறைகளில் எழுதப்பெற்றது. பல்லவ-சோழ ராஜ்யமாக இருந்த வட தமிழகத்தில் பல்லவ எழுத்துக்களிலும் பாண்டிய ராஜ்யமாக இருந்த தென் தமிழகத்தில் வட்டெழுத்திலும் எழுதப்பட்டன.
11 ஆம் நூற்றாண்டளவில் வட்டெழுத்துமுறை முழுமையாக கைவிடப்பட்டு, தமிழ் முற்றிலும் பல்லவ எழுத்துக்களில் எழுதப்பட ஆரம்பித்த்து.
நம்முடைய தற்கால தமிழ் எழுத்துக்கள் இந்த பல்லவ எழுத்துமுறையில் இருந்து தோன்றியதே.
பல்லவ தமிழ் எழுத்தில் பல்வேறு குறைபாடுகள் இருந்தன. புள்ளி குறிக்கப்பெறவே இல்லை. நன்னூல் போன்ற பிற்கால இலக்கண நூல்களிலும் கூட புள்ளியின் பயன்பாட்டை ஏட்டளவில் குறித்தாலும் ஓலைச்சுவடிகளிலோ கல்வெட்டுகளிலோ புள்ளியை காண இயலாது. இதற்கு புள்ளியிட்டால் ஓலைச்சுவடி கிழிந்துவிடும் என்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. அதனால், எகர ஏகார ஒகர ஓகார வேறுபாடும் இருக்காது. ர’கரமும் காலும் ஒரே வடிவத்தை கொண்டிருக்கும்.
”கொள” என்ற சொல் கொள், கோள், கெரள், கெர்ள், கேர்ள், கேரள், கேரள என்று என்னவாகவும் இருக்கலாம். இடத்திற்கு ஏற்றார்போல் பொருள் கொள்ளுதல் வேண்டும்.
 
pallava_tamil_inscription


1005 CE சேர்ந்த ராஜ ராஜனின் செப்பேடு பல்லவ தமிழில்
 

வீரமாமுனிவருக்கு முற்பட்ட தமிழ்

சுமார் 15ஆம் நூற்றாண்டளவிலேயே தற்கால தமிழுக்கு மிகவும் நெருங்கிய வடிவினை தமிழ் எழுத்துக்கள் பெற ஆரம்பித்தன.  அதே நேரத்தில், பல்லவ தமிழின் குறைபாடுகள் அவ்வாறே தொடர்ந்த வண்னம் இருந்தன.
tamil_15th_century

பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் அச்சிடப்பட்ட ஒரு தமிழ் கிறிஸ்தவ நூல்.

ரகத்திற்கும் காலிற்கும் வித்தியாசம் இல்லாத்த்தை கவனிக்கவும். அதே போல புள்ளி இருக்காது. எகர ஏகார வேறுபாடும், ஒகர ஓகார வேறுபாடும் இருக்காது. செசுவகையிலுளபடடபாதிரிமாா (< சேசுவகையிலுளபட்டபாதிரிமார்), முகவுரை போன்ற சொற்களை காண்க.

வீரமாமுனிவரின் தமிழ்

வீரமாமுனிவர் என்று தன்னை அழைத்துக்கொண்ட கிறிஸ்தவ மிஷினரி கொன்ஸ்டன்ஸோ பெஸ்கி பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழகம் வந்தார். கிறிஸ்தவ மதத்தை தமிழகத்தில் பரப்புவதற்காக, தமிழ் மொழியை அவர் கற்றுக்கொள்ள நேர்ந்த்து. தமிழ் எழுத்துமுறையினில் பல குறைகள் அவரை உறுத்தியது.
வெளிநாட்டு கிறிஸ்தவ மிஷினரிகள் தமிழை கற்றுக்கொண்டு கிறிஸ்தவ மதத்தை பிரச்சாரம் செய்ய இவை தடையாக இருப்பதாக கருதினார், எனவே பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ் எழுத்துமுறையில் புகுத்தினார்.
ஏற்கனவே கூறியது போல், தமிழில் புள்ளி ஏட்டளவில் இலக்கண நூல்களில் மட்டுமே இருந்தது. நடைமுறையில், அதன் பயன்பாடு மிகவும் அருகிக்காணப்பட்டது. அச்சின் மூலம் புள்ளியின் பயன்பாட்டை மீண்டும் கொண்டு வந்தார்.
அதே போல, எ, ஒ முதலிய குறில்களும் (இலக்கணரீதியாக) புள்ளி பெற வேண்டி இருந்தது. புள்ளி பெறாதது நெடில்களாக கருதப்பட்டன.


புள்ளியினை மீண்டும் பிரபலப்படுத்தினாலும், அதே எகர ஒகரங்களுக்கான புள்ளியை அவர் பிரபலப்படுத்தவில்லை. உயிர் எழுத்துக்கள் புள்ளி பெறுவதை அவர் விரும்பாத காரணத்தினால் எ, ஒ ஆகியவற்றின் அமைப்பில் சில மாற்றங்களை செய்து ஏ , ஓ என புது நெடில் உருவங்களை படைத்தார். அதே போல, ஒற்றைக்கொம்பை மாற்றி நெடில்களுக்கு இரட்டை கொம்பை (ே) உருவாக்கினார். ஈகார உயிர்மெய்கள் ஒரு சுழி பெறுவது போல, கொம்பும் இன்னொரு சுழி பெருமாறு வடிவம் உருவாக்கப்பட்டது. புள்ளி பெறாத பழைய நெடில்கள், வீரமாமுனிவரின் தமிழில் குறில்களை குறித்தன.
அவர் எண்ணிய இரட்டைக்கொம்பு கீழிருந்து மேலாக எழுதப்பட வேண்டும் என்பது [ஈகாரக்குறி போல], ஆனால், இப்போதைய நடைமுறையில் அது மேலிருந்து கீழாகத்தான் எழுதப்படுகிறது. இவ்வாறு தான் காலப்போக்கில் எழுத்துக்கள் மாறுபாடுகளை அடைகின்றன !
அதே போல, கால்’ போல இருந்த ரகரத்துக்கு கீழே இன்னொரு சாய்வுக்கோடு இட்டது, யாரோ ஒரு பெயர் தெரியாத அச்சுத்தொழிலாளி மாற்றியதாக அறியப்படுகிறது.
 
பெரியார் தமிழ்

பெரியாருக்கு முற்பட்ட தமிழில் ஐகாரத்திற்கு இருவேறு குறிகள் இருந்தன. ல,ள,ன,ண முதலியவை ஒரு குறியையும், பிற எழுத்துக்கள் வேறு குறியையும் பெற்றன. அதே போல், ற,ன,ண ஆகியவையின் ஆகார உயிர்மெய்கள் சிறப்பு வடிவம் பெற்று திகழ்ந்தன.
இவைகளை ஒழுங்கற்றவைகளை பெரியார் கருதியதால், அவை அனைத்தும் எம்.ஜி.ஆர்’ஆல் நடைமுறைப்படுத்தப்பட்டது. அனைத்தும் மெய்களும் ஒரே சீராக ஐகாரக்குறியையும், காலையும் பெற்றன.
tamil_periyar_reform

தமிழ்-பிராமியில் இருந்து துவங்கி வட்டெழுத்து, பல்லவர் எழுத்து என பல்வேறு வடிவங்களை பெற்று,  வீராமாமுனிவரின் சீர்த்திருத்தத்தில் துவங்கி, பெரியாரால் சீர்திருத்தம் செய்யப்பெற்ற எழுத்துக்களிலேயே இன்று தமிழ் எழுதப்பட்டு வருகிறது.
இவ்வாறாக, பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து பெற்று வந்தாலும், கடந்த 2000 வருடங்களாக, தமிழ் பல்வேறு எழுத்துமுறைகளில் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது என்பது பெருமைப்பட வேண்டிய விஷயம்.
 
பிற்சேர்க்கை

தமிழ்-பிராமி, வட்டெழுத்தாகவும் பல்லவ-தமிழ் எழுத்தாகவும் சமகாலத்தில் உருமாற்றம் பெற்ற விதம். நடுவில் தமிழி என்ற குறிப்பிடப்பட்டுள்ளது “தமிழ்-பிராமி”.
tamil_brahmi_vatteluttu

தமிழ் இணைய பல்கலைக்கழகம்: http://www.tamilvu.org/courses/degree/a051/a0514/html/a051414.htm

மேற்கோள்கள்
    1. Early Tamil Epigraphy, Airavatam Mahadevan
    2. Elements of South Indian Paleography, A.C. Burnell
    3. Indian Epigraphy, Richard Salamon
    4. Slides of Dr. S Swaminathan, Tamil Heritage Foundation http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=311&Itemid=398
    5. Indoskript http://userpage.fu-berlin.de/~falk/
    6. Dr. Rajam’s Post : Doctrina Christam, 1579, Cochin http://viruntu.blogspot.com/2010/09/doctrina-christam-1579-cochin.html
    7. Tamil-Brahmi script found at Pattanam in Kerala http://www.hindu.com/2011/03/14/stories/2011031453981800.htm
நன்றி: வினோத் ராஜன், வார்சுவல் வினோத்
 

Friday, December 12, 2014

An Efficient Period Prediction System for Tamil Epigraphical Scripts Using Transductive Support Vector Machine. S Venkatakrishnakumar and Poornima TV.


An Efficient Period Prediction System for Tamil Epigraphical Scripts Using Transductive Support Vector Machine. S Venkatakrishnakumar and Poornima TV. in International of Advanced Research  in Computer and Communication Engineering. Vol 3 Issue 9 September 2014

It appears you don't have a PDF plugin for this browser. No biggie... you can click here to download the PDF file.



Courtesy: International of Advanced Research  in Computer and Communication Engineering. Vol 3 Issue 9 September 2014

Tuesday, November 18, 2014

பெரியார் வழியில் தமிழ் எழுத்துச் சீரமைப்பு முனைவர் வா.செ.குழந்தைசாமி (காணொளி காட்சி)

(தமிழ் எழுத்துச் சீரமைப்பு பற்றி முனைவர் வா.செ குழந்தைசாமி அவர்கள் தமிழ் இணையப்பல்கலைக் கழகத்தில் காணொளி காட்சி மூலம் தெளிவு படுத்தியவைகளை.......இங்கே பதியப்பட்டுள்ளது.)

தமிழ் எழுத்துச் சீரமைப்பு


தமிழர்கள் ஒரு மொழியினர் பல நாட்டினர் எல்லா நாட்டிலும் சிறுபான்மையினர் தங்கள் அடையளத்தை காக்கவேண்டும்.

சிறுபான்மை மக்கள் தங்கள் அடையாளத்தை காக்கவேண்டும். தமிழர்களுக்கு நாடு அடையாளம் அன்று, மதம் அடையாளம் அன்று, அவர்கட்கு இருக்கும் ஒரே அடையாளம் தமிழ் மொழிதான். அவர்கள் தங்கள் அடையாளத்தைக் காக்கத் தமிழ் கற்கவேண்டும்.


தமிழ் மொழியின் 247 எழுத்துக்களைக் கற்க 107 குறியீடுகள் தற்பொழுது தேவைப்படுகின்றன.

ஆனால் ஒரு எழுத்துக்கூட குறையாது 247 எழுத்துகளையும் எழுதுவதற்கு 39 குறியீடுகள் போதும்.

இந்த மாற்றம் தான் தந்தை பெரியார் அவர்கள் முன் வைக்கும் தமிழ் எழுத்துச் சீரமைப்பின் குறிக்கோள்.

பெரியார் அவர்கள் முன்வைத்த தமிழ் எழுத்துச் சீரமைப்பு முழுவடிவம் பெற அடுத்த கட்டம், தமிழ் மொழியின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த படியாக வரவேண்டிய சீரமைப்பு. நாம் வாழ்வது கல்வியுகம் கல்வியறிவுதான் இன்றைய வளம்.



பண்டைக்காலத்தில் கல்வியென்பதே மொழிக்கல்வியாகத்தான் இருந்தது. கல்வியென்பது பெரும்பாலும் மொழிக்கல்வியாக இருந்ததாலும் மிக மிகச் சிலரே கல்வி கற்றதாலும், மொழியைக்கற்பது அதிக நேரத்தைச் செலவிடுவது மொத்தத்தில் அன்று பெரிய சமுதாய இழப்பாக இருக்கவில்லை. இன்று பல துறைகளை கற்பதற்கு கல்வி ஒரு கருவி. நாம் நம் முன்னோர்கள் போன்று மொழியை கற்பதற்கு மட்டும் அதிக நேரத்தை செலவிடமுடியாது. எனவே மொழியைக்கற்பது எளிதாக்கப்படவேண்டும். இது ஒரு சமுதாயத் தேவை.

கல்வியின் முதற் கட்டம் எழுதப்படிக்கத் தெரியவேண்டும். முதலில் எழுத்துகளை கற்கவேண்டும். எழுத்துகள் எளிதாக இருப்பது கற்பதை ஊக்குவிக்கும். படிக்கத் தெரிந்தால் கல்வியில் ஆர்வம் எழும்.

தமிழர்கள் இன்று உலகம் தழுவி வாழும் மக்கள். தமிழ் நாட்டின் எல்லைகள் முன்பு வடவேங்கடம், தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகம் என்ற நிலையில் இருந்தன. இன்று இந்தியத் துணைக்கண்டத்தின் எல்லைகள் கடந்து பூமிப்பந்திடை அமைந்த நாடு பலவினும், அதாவது 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் பரவி வாழ்கிறார்கள். தமிழச்சாதி ஒரு குவலயக்குடும்பம் எந்தவொரு இடத்திற்கும் ஒரு அடையளம் வேண்டும்.

தமிழர்களுக்கு மதம் அடையாளமல்ல, சாதி ஓர் அடையாளமல்ல நாடும் அடையாளமல்ல. தமிழர்களுக்கு தமிழ் மொழி ஒன்றுதான் அடையாளம். தமிழர்கள் எங்கிருந்தாலும் தங்கள அடையாளத்தை காத்துக்கொள்ள தமிழ் கற்க வேண்டும்.

தமிழகத்தில் வாழும் தமிழர்களும் தமிழ் கற்கவேண்டும். இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வாழும் தமிழர்களும் தமிழ் கற்கவேண்டும். உலகத் தமிழ் குடும்பங்களும் தமிழ் கற்கவேண்டும்.

தமிழச்சாதிக்கு ஒரு வேண்டுகோள் தமிழர்களின் 20 சதவிகிதம் பேர் தமிழக எல்லைகட்கு வெளியே வாழ்கிறார்கள். 75 மில்லியன் தமிழர்களில் ஏறத்தாழ 15 மில்லியன் தமிழர்கள் தமிழக எல்லைகட்கு வெளியே வாழ்கிறார்கள். தமிழர்கள் பலநாட்டினர், பல மதத்தினர், ஆனால் எல்லா நாட்டிலும் சிறுபான்மையினர்.

இன்றையத் தகவல் தொழில்நுடப உலகில் பெரும்பான்மையினரின் ஆக்கம் ஒரு சக்திவாய்ந்த திரவம் போன்றது. அதில் சிறுபான்மையினர் கரைந்து, கலந்து தமது அடையாளத்தை இழந்துவிடக்கூடிய பேராபத்து இருக்கிறது. தமிழர்கள் தங்கள் தனித்தன்மையைக் காக்க, அடையாளத்தை நிலைப்படுத்த தமிழர்க்கு இருக்கும் ஒரேக்கவசம் தமிழ் மொழிதான்.

உலகத்தமிழினம் தமிழ் மரபோடு, தமிழ் பாரம்பரியத்தோடு தொடர்பு அராது வாழவேண்டும். தமிழர்கள் எங்கிருந்தாலும் தமிழ் கற்க வேண்டும். அவர்கள் தமிழில் பரிச்சயம் வேண்டும். நாம் இதுவரை கூறிய அனைத்தையும் நடைமுறைப்படுத்தவேண்டுமானால் உலகத் தமிழினம் தமிழ் கற்பது இன்றியமையாதது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் நாடுகள் தவிர, மற்ற நாடுகளில் தமிழ் கற்பது ஒரு பொருளாதார தேவையல்ல., அரசியல் தேவையுமல்ல. நாம் கூறியிருப்பது போல் தமிழை கற்பது கடினமாக இருந்தால் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் தவிர மற்ற நாடுகளில் இளந்தலைமுறையினர் தமிழ் கற்க முன்வரமாட்டார்கள். 

150 முதல் ஏறத்தாழ் 200 ஆண்டுகட்குள் பிஜி, பிரையோனியா, மொரிஷியஸ் போன்ற பலநாடுகட்கு சென்ற தமிழர்கள் தமிழை மறந்துவிட்டார்கள். இப்பொழுது இளந்தலைமுறைக்கு தமிழ் கற்பிக்க முயற்சிக்கிறார்கள். அமெரிக்கா, ஆஸ்டிரேலியா போன்று அண்மைத் தலைமுறைகள் குடியேறிய நாடுகளில் அடுத்த தலைமுறை தமிழை இழந்து வருகிறது. இவர்கள் தமிழ் கற்க தமிழர்களாய் வாழ தமிழ் கற்பதை இயன்றவரை எளிதாக்க வேண்டும். அதற்கு முதற்படியாக தமிழ் எழுத்துகள் கற்பதை எளிதாக்கவேண்டும்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் பதினைந்து இலட்சம் குழந்தைகள் முதல் வகுப்பில் சேருகிறார்கள். இவர்கள் அனைவரும் முதற் கட்டமாக தமிழ் எழுத்துகளை கற்கவேண்டும். எனவே பதினைந்து இலட்சம் குழந்தைகள் தமிழ் எழுத்துகளை கற்பதை எளிதாக்குவது மாபெறும் கல்விப்பணியாகும். மாபெறும் சமூதாயச் சேவையாகும். தமிழிலுள்ள 247 எழுத்துகளை கற்பதற்கு இன்று குழந்தைகள் 107 குறியீடுகளை கற்கிறார்கள். 247 எழுத்துகளை ஒரெழுத்துகூட குறையாமல் எழுதுவதற்கு 39 குறியீடுகள் போதும். இதைச் செய்வது பெரியார் சீர்திருத்தத்தின் அடுத்த கட்டம். அவசியமான கட்டம். இங்கு நாம் பரிந்துரைப்பது தமிழ் வரிவடிவத்தில் சீர்மையை, விரைமையை, கற்பதில் விரைவை ஏற்படுத்தும் மாற்றமாகும். உண்மையிலேயே மிகச்சிறிய மாற்றம். நாம் இந்த கருத்துரையை பரிந்துரைப்பது தமிழில் உள்ள உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து, ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு போன்றவற்றை குறிப்பிட வரிவடிவம் அல்லது எழுத்து அல்லது குறியீடு, ஆகிய சொற்களில் ஏதாவது ஒன்றை வேறுபாடின்றி ஒரு பொருள் பல சொல் என்ற வகையில் பயன்படுத்துகிறோம்.

‘’மாறாத பொருள் எதுவும் வளர்வதில்லை’’ இது டார்வினின் தத்துவம். காலத்துக்கேற்ப எளிமை, சீர்மை, விரைவு கருதி மாற்றங்கள் நாம் விரிம்பினாலும் விரும்பாவிட்டாலும் வாழ்வில் இடம்பெற்றுவருகின்றன. ஒருமொழிக்கு ஒலி நிரந்தரமானது. எழுத்துகள் எனபவை ஒலிகளுக்கு நாம் உருவாக்கும் குறியீடுகள் மாறக்கூடியவை.

கிமு மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கி காலந்தோறும் தமிழ் வரிவடிவம் அதாவது எழுத்துகள் மாறியே வந்திருக்கின்றன.

தமிழ் நெடுங்கணக்கில் உள்ள ஒலி எழுத்துகளை இரு பெரும் பிரிவுகளாகப்பார்க்கலாம்.
1, முதன்மை எழுத்துகள்
2. சார்பு எழுத்துகள்
அவை பின்வருமாறு
முதன்மை எழுத்துகள்
உயிர் எழுத்துகள் 12
மெய் எழுத்துகள் 18
ஆய்த எழுத்துகள் 1
---------------------
மொத்த முதன்மை எ.ழுத்துகள் 31
---------------------
சார்பு எழுத்துகள்
உயிர் மெய் எழுத்துகள் 216
மொத்த தமிழ் ஒலி எழுத்துகள் 247 (முதன்மை எழுத்துகள் + உயிர்மெய் எழுத்துகள்)

ஐரோப்பிய மொழிகளிலும், இந்திய ஆசிய மொழிகளிலும் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் மட்டுமே உள்ளன. இந்திய மொழிகளில் மட்டும் தான் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் மட்டுமின்றி உயிர்மெய் எழுத்துகள் என்ற தனி வரிவடிவம் கொண்ட எ.ழுத்துகள் இருக்கிறது. அதனால் எழுத்துகளின் எண்ணிக்கை அதிமாகிவிட்டது.

தமிழில் உள்ள 216 உயிர் மெய் எழுத்துகள் எளிமை, சீர்மை, விரைவு என்ற மூன்று நிலைகளிலும் பயணம் செய்து எவ்வாறு இனிவரும் காலத்திற்கு ஏற்ப அமைப்பை பெறலாம் என்பதை எடுத்துக்கூறுவதே நாம் பரிந்துரைக்கும் எழுத்துச் சீர்மையின் நோக்கமாகும்.

தமிழ் எழுத்துகளை கற்பதற்கு இப்பொழுது தேவைப்படும் குறியீடுகள் 107 அவை பின்வருமாறு.....

முதன்மை எழுத்துகள்
உயிர் எழுத்துகள்

அ முதல் ஔ வரையுள்ள உயிர் எழுத்துகள். இவற்றில் ஔ கூட்டெழுத்து எனவே பனிரெண்டு ஒலிகளுக்கு தேவைப்படும் குறியீடுகள் பதினொன்று.

மெய் எழுத்துகள்

க முதல் ன வரை பதினெட்டு இவற்றுடன் ஒரு புள்ளி . ஆக 19 குறியீடுகள். ஆயுத எழுத்து ஒன்று. மொத்த குறியீடுகள் முப்பத்தி ஒன்று.
சார்பு எழுத்துகள்

அதாவது உயிர் மெய் எழுத்துகள் தமிழில் உயிர்மெய் எழுத்துகளின் வரிவடிவத்தில் ஒரு சீர்மை இல்லை. சில வரிசைகளில் தனித்தனி வரிவடிவம் இல்லை. சில வரிசைகளில் தனித்தனி வரிவடிவம் உள்ளது.

தமிழில் அகரமெய் தவிர்த்த ஏழு வரிசைகளில் தனித்தனி வரிவடிவம் இல்லை. பொதுவான குறியீடுகளே உள்ளன. இந்த எட்டு வரிசைக்குத் தேவைப்படும் புதியக்குறியீடுகள்...

ஆகாரக் குறியீடு (‘’கால் எழுத்து’’)
எகரக்குறியீடு (‘’ஒற்றைக்கொம்பு’’)
ஏகாரக்குறியீடு (‘’இரட்டைக் கொம்பு’’)
ஐகாரக்குறியீடு (‘’இரட்டை சுழி’’)
ஆக நான்கு மட்டுமே!

தமிழில் அகர மெய்தவிர்த்த ஏழு வரிசைகளுக்கு தனித்தனி வரிவடிவம் இல்லை. பொதுவான குறியீடுகளே உள்ளன.

அகரம் ‘க’ முதல் ‘ன’ வரை
ஆகாரம் ‘கா’ முதல் ‘னா’ வரை (ஆகாரக் குறியீடு கால் எழுத்து)
எகரம் ‘கெ’ முதல் ‘னெ’ வரை (எகரக் குறியீடு ஒற்றைக் கொம்பு)
ஏகாரம் ‘கே’ முதல் ‘னே’ வரை (ஏகாரக் குறியீடு இரட்டைக்கொம்பு)
ஐகாரம் ‘கை’ முதல் ‘னை’ வரை (ஜகாரக்குறியீடு)
ஒகரம் ‘கொ’ முதல் ‘னொ’ ஒரை (ஒகரக் குறியீடு (எகரக்குறியீடு + ஆகாரக் குறியீடு))
ஓகாரம் ‘கோ’ முதல் ‘னோ’ வரை (ஓகாரக்குறியீடு (ஏகாரக்குறியீடு+ஆகாரக்குறியீடு))
ஔகாரம் ‘கௌ’ முதல் ‘னௌ’ வரை (ஔகாரக்குறியீடு (எகரக்குறியீடு+ வரிவடிவம்)

ஆக எட்டுவரிசைகளான 147 எழுத்துகளுக்கு நான்கு குறியீடுகள் போதும். (ஆகாரம், ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு, ஜகாரம்)

தனித்தனி வரிவடிவம் தமிழ் எழுத்துகளுக்கு இருப்பதெல்லாம் நான்கு வரிசைகளுக்கு மட்டும் தான் அது..

இகரம் ‘கி’ முதல் ‘னி’ வரை
ஈகாரம் ‘கீ’ முதல் ‘னீ’ வரை
உகாரம் ‘கு’ முதல் ‘னு’ வரை
ஊகாரம் ‘கூ’ முதல் ‘னூ’ வரை

ஆக இந்த நான்கு வரிசைகளுக்கு தேவைப்படும் எழுத்துகள் 72

இநனோடு சேர்த்து மொத்த குறியீடுகள் 107.

தற்பொழுது உள்ள வழக்கில் 247 தமிழ் எழுத்துக்கள் கற்பதற்கு 107 வரிவடிவங்கள் தேவைப்படுகின்றது..

தமிழில் உயிர் மெய் எழுத்துகள் 216

அதில் உயிர் மெய் இகர, ஈகார, உகர, ஊகார நான்கு வரிசைகள் தவிர மீதமுள்ள 8 வரிசைகளில் உள்ள 144 எழுத்துகளுக்குத் தேவைப்படும் குறியீடுகள் 4. (ஆகாரம், ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு, ஐகாரம்).



இதைப்போலவே இகர, ஈகார, உகர, ஊகார உயிர் மெய் வரிசைகட்கு உயிர்மைக்குறியீடுகளைப் பயன்படுத்தினால் 4 உயிர்மெய்குறியூடுகள் போதும். இதனால் 68 வரிவடிவங்கள் குறையும்.

எடுத்து வைத்த உத்தியைச்செய்லபடுத்த 4 புதிதாக நான்கு உயிர் மெய் குறியீடுகள் தேவை. நாம் பயன்படுத்தக்கவைகளாக ஒரு பரவலான கருத்துக்கணிப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம் இவற்றின் உயிர் மெய்குறியீடுகள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன.

இதனால்,

உயிர் எழுத்திற்கும் ஆயுதத்திறகும் 12 குறியீடுகள்
உயிர் மெய் அகரத்திற்கு 18 குறியீடுகள் மற்றும்
உயிர்மெய் குறியீடுகள் ஒரு புள்ளியுடன் சேர்த்து 9 ஆக மொத்தம் 39 குறியீடுகள் மட்டும் போதும்.

நாம் விளக்கும் இந்த மாற்றங்கள் ஏற்றுகொள்ளப்பட்டால்

30 முதன்மை எழுத்துகள் 9 உயிர் மெய் குறியீடுகள் ஆக 39 வரிவடிவங்களை கற்றாலே போதுமானது. இவற்றில் 4 நான்கு உயிர் மெய் குறியீடுகள் மட்டும் தான் புதியவை.. இவற்றை கற்பது மிகவும் எளிது.

நாம் புதிதாக உருவாக்கப்பட்ட நான்கு குறியீடுகள் ஒரு கருத்துகணிப்பின் மூலம் உருவாக்கப்பட்டவை. இவை தமிழ் வடிவத்தோடு இயைந்து வருவதோடு தேவைப்பட்டால் வேண்டிய அளவு மாற்றப்படலாம். கொடுத்திருப்பது முடிந்த முடிவு அல்ல. முக்கியமாகத் தேவைப்படுவது உயிர்மெய் இகர, ஈகார, உகர, ஊகார வரிசைகட்கும் மற்ற வரிசைகளைப்போலவே (ஆகார, எகர,ஏகார, ஐகார குறியீடுகளை பயன்படுத்தும்) குறியீடுகளைப் பயன்படுத்தலாம் என்ற கொள்கையினை ஏற்பது தான்.
தமிழில் உள்ள 247 எழுத்துக்களை எழுதுவதற்கு ஒரு எழுத்துக்கூட குறையாமல் எழுதுவதற்கு இந்த 30 குறியீடுகள் போதும். நாம் முன்வைத்த சீர்திருத்தத்தை ஏற்று 39 எழுத்துகளை கற்றபின் தமிழ் கணக்கை குழந்தைகள் எழுதுவது எவ்வளவு எளிது என்பதை படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது....


தமிழ் வரிவடிவத்தை கற்பதும் தொடர்ந்து தமிழ் மொழியைகற்பதும் எளிதாக்கப்படும், ஊக்குவிக்கப்படும்.....

உலகத் தமிழர்கள் தமிழ் மொழியோடு, தமிழ் இலக்கிய உலகோடு தொடர்பறாது வாழ பெரிதும் உதவும்.

ஒரு மொழிக்கு உண்மையான வலிமை என்பது இலக்கணம், இலக்கியம் என்பதை விட பேசும் மக்களின் எண்ணிக்கை தான். அந்த எண்ணிக்கையை காப்பதற்கு முறையான வழியில் எந்த மாற்றமும் செய்யலாம், எந்த விலையும் கொடுக்கலாம்.
பெரியார் வழியில் நாம் சொல்லும் மாற்றம் எளியது, சிறியது, இயற்கையானது. மண்ணில் இருக்கும் தமிழ் வானில் பறக்க இறக்கை கொடுப்பது போன்றது. நாம் எடுத்து வைத்த ஒரு எளிய, சிறிய மாற்றத்தின் மூலம் குழந்தைகள் கற்க வேண்டிய எழுத்து வடிவங்கள் அதாவது குறியீடுகள் 107 இலிருந்து 39 தாக குறைகின்றன.

இது போன்ற மாற்றம் தமிழ் மொழிக்கு புதியது அல்ல. கி.மு 3 ஆம் நூற்றாண்டில் தொடங்கி காலந்தோறும் தமிழ் எழுத்துக்களின் வரிவடிவம் மாறியே வந்திருக்கிறது. ஒலி நிரந்தரமானது. வரிவடிவம் மாறக்கூடியது.

18 ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் செய்த மாற்றங்கள் எகரத்திறகும் ஒகரத்திற்கும் இருந்த புள்ளிகளை நீக்கிவிட்டு எகரத்தில் ஒரு சிறு கோடு சேர்ப்பதன் மூலம் ஏகாரமாகவும், ஒகரத்திற்கு சுழிப்பதின் மூலம் ஒகாரமாகவும் அவர் உருவாக்கினார். பனை ஏடுகளில் புள்ளி வைக்கும் சிரமத்தை தவிர்க்க அவர் இவ்வாறு செய்திருக்கலாம்.


சென்ற நூற்றாண்டில் பெரியார் நூற்றாண்டு விழாவில் தமிழக அரசு (படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது போல்) உயிர் மெய் ஆகார வரிசைகளில் மூன்று எழுத்துகளையும், உயிர் மெய் ஐகார வரிசைகளில் நான்கு எழுத்துகளையும் சீர்மையை கொண்டு வந்தது. இந்த மாற்றங்களினால் தமிழ் வரிவடிவம் ஒழுங்கு பெற்றதேயன்றி தமிழுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. நாம் பரிந்துரைக்கும் சீரமைப்பில் உயிர் மெய் இகர, ஈகார வரிசைகளிலும், உயிர் மெய் உகர, ஊகார வரிசைகளிலும் தனித்தனி எழுத்துகளை பயன்படுத்துவதற்கு பதிலாக உயிர் மெய் இகர ஈகார வரிசைகளிலும், உயிர் மெய் உகர ஊகார வரிசைகளிலும் மற்ற உயிர் மெய் வரிசைகளைப்போலவே உயிர் குறியீடுகளை பயன்படுத்துவதை பரிந்துரைத்திருக்கிறோம் இதனால் இந்த நான்கு வரிசைகளிலும் ஒரு சீர்மை யூனிபார்மட்டி வருகிறது. 72 வரிவடிவங்களை கற்பதற்கு பதிலாக நான்கு குறியீடுகளை கற்கவேண்டியிருப்பதால் கற்பது எளிதாகிறது. கற்பதில் விரைவு இடம் பெறுகிறது.

இப்படிபற்ற மாற்றத்தை நாம் தான் முதன் முதலில் செய்ய சொல்லுகிறோம் என்பதில்லை. நமது முன்னோர்கள் இவ்வாறு எழுதியிருக்கிறார்கள் சான்றுகள் பின்வருமாறு....
நமது முன்னோர்கள் உயிர் மெய் இகரத்திற்கு குறியீட்டை பயன்படுத்தியிருப்பதை படத்திலுள்ள வேள்விக்குடி செப்பேட்டில் பார்க்கலாம்.

உயிர்மெய் ஊகாரத்திறக்கும் குறியீட்டை பயன்படுத்தியிருப்பதை வேள்விக்குடி செப்பேட்டில் பார்க்கலாம்.

உயிர்மெய் ஐகாரத்திற்கு குறியீட்டை தமிழக அரசு செய்த சீர்திருத்திற்கு முன்பே நமது முன்னோர்கள் பயன்படுத்தியிருப்பதை பள்ளன் கோவில் செப்பேட்டில் காணலாம்.
உயிர்மெய் எழுத்துகளன்றி உயிர் எழுத்துக்கு கூட உயிர் குறியீட்டை பயன் படுத்தியிருப்பதை காணலாம்.

கிரந்த எழுத்துக்களுக்கும் இது போன்ற உயிர் மெய்க் குறியீடுகளை பயன்படுத்துகிறோம்.
 
இகர, உகர வரிசைகளில் உயிர் மெய் எழுத்துகளுக்கு உயிர் மெய் குறியீடுகளை நமது முன்னோர்கள் பயன்படுத்தியிருப்பதை செப்பேடுகளில் கண்டோம். என்வே எவ்வித தயக்கமுமின்றி இந்த நான்கு வரிசைகட்கும் சீரமைக்க உயிர் மெய்குறியீடுகளை பயன்படுத்தலாம் என்பது இயல்பாகவே தோன்றும் சீரமைப்பாகும்.

இதில் புரட்சிகரமான அம்சம் ஏதுமில்லை. இதனால் ஏற்படும் நன்மை தான் புரட்சிகரமானது. இதில் கற்பனை செய்யப்படும் அளவில் தமிழுக்கு ஏற்படும் இ.ழப்பு என்று ஏதுமில்லை.

டார்வினின் தத்துவம் வலியது வெல்லும் என்பதன்று. சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் உயிர் வெல்லும் மாற மறுப்பது மறையும் என்பது தான்.

நாம் இங்கு எடுத்து வைத்திருக்கும் மாற்றம் நடைமுறைப்படுத்தபட்டால் பெரியார் அவர்கள் எடுத்துவைத்த தமிழ் எழுத்து சீரமைப்பு முழுமை பெறும்.

நாம் கூறும் மாற்றம் மிகவும் எளியது. அளவில் சிறியது ஆலின் விதை போன்றது. அதன் பயன் உண்மையிலேயே ஆல் போன்றது.
தமிழச்சாதி ஒரு குவலயக் குடும்பம்

யாதும் ஊரே யாவரும் கேளிர்  

என்று இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு பாடிய கவிஞன் கணியன் பூங்குன்றன் ஒரு தீர்க்கதரிசி. இன்று நாம் குளோபல் வில்லேஜ் அதாவது குவலயக்கிராமம் என்று பேசுகிறோம். உலகு தழுவி வாழும் தமிழினம் இன்று அந்த குவலயக்கிராமத்தில்... குவலயக்குடும்பமாக... குளோபல் பேமிலியாக உருவாகியிருக்கிறது. தமிழர்களை உலகம் இன்று ஒரு மாகாணத்தில் வாழும் மக்களாக பார்க்கவில்லை. பொதுவாக உலகுத் தழுவி வாழும் மக்களாக, குறிப்பாக தெற்கு ஆசிய மக்களாக பார்க்கிறார்கள்.

இந்திய மொழிகளில் வங்கமும் உருதும் அணைடை நாடுகளில் ஆட்சி மொழிகள். அவற்றை விடுத்து மற்ற மொழிகளை மட்டும் நாம் இந்திய மொழிகள் என்று குறிப்பிடுவோம்.

சீன வானொலி 42 மொழிகளில் ஒளிபரப்புகிறது. அவற்றுள் இந்திய மொழிகள் இந்தி தமிழ் ஆகிய இரண்டு மட்டும் தான். காரணம் தமிழ் தெற்கு ஆசிய மொழி. சௌத் ஏசியன் லேங்குவேஜ் என கருதப்படுகிறது. உண்மையில் இன்று அது உலக குடிமக்களின் மொழி.

பிபிசி வானொலி உலகு அறிந்தது. அது 32 மொழிகளில் ஒளிபரப்புகிறது. பிபிசி வானொலியும் இந்தாய மொழிகளில் இந்தி தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டும் தான் ஒளிபரப்பு செய்கிறது. முதலில் கூறிய அதே காரணங்களுக்காகத்தான்.

அண்மைக்காலம் வரை யூனஸ்கோ நிறுவனம் கூரியர் என்ற மாத இதழை 30 க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிட்டு வந்தது. அதில் இடம் பெற்ற இந்திய மொழிகள் இந்தியும் தமிழும் தான்.

இன்று தமிழகத்தில் சில தொலைக்காட்சிகள் உங்கத் தமிழர் செய்திகள் என்ற செய்தி ஒளிபரப்புச் செய்கின்றன. சில தினசரி பத்திரகைகள் வாரம் ஒருமுறையாவது உலகத் தமிழர் செய்திகள் என்று வாரம் ஒருமுறையாவது செய்திகள் வெளியிடுகின்றன. இவையனைத்தும் தொடர வேண்டுமானால், வலிமைப்படவேண்டுமானால், விரிவடைய வேண்டுமானால், உலகத் தமிழ் மக்கள் தமிழோடு, தமிழ் மரபோடு தொடர்பு உடையவர்களாக வாழ.வேண்டும். தமிழ் இணையப்பல்கலைக்கழகம் உலகத் தமிழர்கள் தமிழ் கற்க உதவுகிறது. எழுத்து சீர்திருத்தம் தமிழ் கற்க பெரியளவில் எளிதாக்கும். குறிப்பாக உலகத்தமிழர்கள் தமிழ் கற்பதை எளிதாக்கும். அவர்கள் தமிழ் கற்பது தமிழ் இனத்தின் எதிர்காலத்திறகு வளம் சேர்க்கும், வலிமை சேர்க்கும்.
சங்ககாலக் கவிஞன் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடினான். தற்காலத் தமிழர் புவனமும் மானுடர்க்கு பொது என்று வாழ்கிறார்கள்.

தமிழர்கள்
ஒரு மொழியினர்,
பல நாட்டினர்,
எல்லா நட்டிலும் சிறுபான்மையர்.
தமிழர்கட்கு தாங்கள் இன்று பன்னாட்டுச் சிறுபான்மையர் என்ற பார்வை வேண்டும். விழிப்புணர்வு வேண்டும்.

புவனமும் மானுடர்க்கு பொதுவெனும் தமிழச்சாதி ஒரு குவலயக்குடும்பம்.
ஒரு மொழிக்கு உண்மையான வலிமை
இலக்கணம் இலக்கியம் என்பதை விட
பேசும் மக்களின் எண்ணிக்கைதான்.
அந்த எண்ணிக்கையை காப்பதற்கு
முறையான வழியில் எந்த மாற்றமும் செய்யலாம்.
எந்த விலையும் கொடுக்கலாம்.
பெரியார் வழியில் நாம் சொல்லும் மாற்றம்
எளியது, சிறியது, இயற்கையானது.
மண்ணில் நடக்கும் தமிழ் வானில் பறக்க
இறக்கை கொடுப்பது போன்றது.

http://www.tamilvu.org/esvck/index.htm

.........முனைவர் வா.செ.குழந்தைசாமி

Wednesday, November 12, 2014

தமிழ் எழுத்து சீர்திருத்தம்: பெரியார். குடி அரசு தலையங்கம் (20.01.1935)


தமிழ் பாஷை எழுத்துக்கள் விஷயமாய் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பது அனேகருக்குள் வெகுகாலத்திற்கு முன்பு இருந்தே ஏற்பட்டிருந்த அபிப்பிராயங்களாகும்.

தோழர் குருசாமி அவர்கள் எழுதியது போல் பெருத்த பண்டிதர்களில் கூட பலர் எழுத்துச் சீர்திருத்த விஷயமாய், வெகு காலமாகவே பேசி வந்திருக்கிறார்கள்.

தமிழ் எழுத்துக்களைப் பற்றி அழுக்கு மூட்டைப் பண்டிதர்கள் எவ்வளவு தத்துவார்த்தம் சொன்னாலும் அது எவ்வளவோ விஷயத்தில் சீர்திருத்தமடைய வேண்டும் என்பதில் நமக்குச் சிறிதும் சந்தேகமில்லை.

Sunday, October 19, 2014

கல்வெட்டியல் அறிஞர் புலவர் செ.இராசு அவர்கள். மு.இளங்கோவன்


கல்வெட்டியல் அறிஞர் புலவர் செ.இராசு அவர்கள். முனைவர் மு.இளங்கோவன்
 

புலவர் செ.இராசு அவர்கள்

திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் யான் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றபொழுது நடைபெற்ற இலக்கியமன்ற விழாவில் அறிஞர்கள் பலர் உரையாற்ற அழைக்கப் பெற்றிருந்தனர். அவர்களுள் எளிய தோற்றத்துடன் ஒருவர் மிகச் சிறந்த கல்வெட்டுச் செய்திகளை அவைக்கு வழங்கிக்கொண்டிருந்தார். தமக்குத் தொடகத்தில் பேச இயலாத தன்மை இருந்ததாகவும் பின்னர் பேசிப்பேசி அக்குறை நீங்கிவிட்டதாகவும் குறிப்பிட்ட அந்த அறிஞரின் பேச்சு இன்றும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே உள்ளது.

ஆம்.அவ்வாறு பேசியவர் நம் மதிப்பிற்குரிய புலவர் செ.இராசு அவர்களேயாவர். பிறகு அவர்கள் எழுதிய நூல்கள், கட்டுரைகள், ஆய்வுரைகளைப் படிக்கும் வாய்ப்பு அமைந்தாலும் அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அமையாமல் போனது.அண்மைக் காலமாக எமக்கு வாய்த்த உயரிய நட்புக்கு உரிய முனைவர் நா.கணேசன் (அமெரிக்கா) அவர்கள் வழியாகப் புலவரின் பன்முகச் சிறப்புகளையும் உள்ளம் உவக்கும்படி கேட்டு அவர்களுடன் நட்பு கொள்ளத் தொடங்கினேன்.

தமிழுக்கு உழைத்த அறிஞர் பெருமக்களின் வரலாறு இணையத்தில் பார்வைக்குக் கிடைக்காத சூழலில் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை இயன்ற வகையில் எழுதுவதை வழக்கமாகக் கொண்டவன் யான் என்பதால் புலவர் செ.இராசு அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை இணையத்தில் அறிய விழைவார்க்குப் பயன்படும் வகையில் பதிவு செய்கிறேன். விரிவான வரலாறு அறிய விழைவாருக்கு உதவும் வகையில் அவர்களின் முகவரியும் தருகிறேன். தக்கவர்கள் தக்காங்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Wednesday, October 15, 2014

பண்டைத் தமிழ் எழுத்தின் காலம் – நடன காசி நாதன்

பண்டைத் தமிழ் எழுத்தின் காலம் – நடன காசி நாதன்

இன்றைக்கிருக்கும் தமிழ் எழுத்தின் மிகப் பழைய வடிவத்தைப் ”பண்டைத் தமிழ் எழுத்து” என்கிறோம். இவ்வெழுத்தைச் சிலர் தற்பொழுது ”தமிழ் பிராமி” என்றும் ”தாமிழி” என்றும் எழுதுகின்றனர். தமிழ் பிராமி என்றழைப்பதற்கு அவர்கள் கூறும் காரணம் தமிழ் மொழிக்காக உருவாக்கப்பெற்ற பிராமி எழுத்து என்றும், அசோகன் பிராமி அல்லது மௌரியன் பிராமியிலிருந்து இவ்வெழுத்துத் தோன்றியதே எனினும் அதிலிருந்து வேறுபட்டது என்றும் கூறுகின்றனர். அவ்வாறெனில் பிராகிருத மொழிக்காக எழுதப்பெற்ற எழுத்தைப் ”பிராகிருத பிராமி” என்று அழைப்பதுதானே சரியாகும். மேலும் அப்பிராமி எவ்வெழுத்திலிருந்து தோன்றியது? திடீரென்று அவ்வெழுத்தை மௌரியர் உருவாக்கிக் கொள்கையில் மற்ற பகுதி மன்னர்கள், குறிப்பாகத் தமிழ் மன்னர்கள் தங்களுக்கென ஒரு எழுத்தை உருவாக்கிக் கொண்டிருக்கமாட்டார்களா? அவ்வாறு தங்களுக்கு உருவாக்கிக்கொண்ட எழுத்துதான் தமிழ் எழுத்து. அதன் பழமை குறித்துப் பண்டைய வடிவத்தைப் ”பண்டைத் தமிழ் எழுத்து” என்று அழைக்கிறோம்.

சற்றேறக்குறைய கி.மு.300ல் எழுதப்பெற்றதெனக் கொள்ளப்பெறும். ”சமவயங்க சுத்த” என்னும் சமண நூலில் பதினெட்டு வகையான எழுத்துகள் குறிக்கப் பெற்றுள்ளன. ”பம்பி”, ”தாமிழி” என்ற எழுத்துகள் அவற்றில் காணப்படுகின்றன. ”பம்பி என்பது பிராமி எழுத்தைக் குறிக்கும் பிராகிருதச் சொல் என்றும், ”தாமிழி” என்பது தமிழைக் குறிக்கும் பிராகிருதச் சொல் என்றும் கொள்ளப்படுகிறது. அந்த பிராமி எழுத்தில் அசோகன் கல்வெட்டுகள் உள்ளன என்றும் தாமிழி எழுத்தில் தமிழ்நாட்டில் உள்ள பண்டைய கல்வெட்டுகள் எழுதப்பெற்றுள்ளன என்றும் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள கல்வெட்டுகள் தமிழ் எழுத்திலும், தமிழ் மொழியிலும் இருப்பதால் இதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் பிராகிருத மொழியில் உள்ள அசோகன் கல்வெட்டுகள் ”பம்பி” எழுத்தில்தான் உள்ளன என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. ஆனால் ”பம்பி” எழுத்தில் உள்ளதாகக் கொள்ளப்படுகிறது. அசோகன் கல்வெட்டில் காணப்படும் எழுத்திற்குப் ”பிராமி” என்ற பெயரை முதன் முதலில் சூட்டியவர் ப்யூலர் என்ற மேல்நாட்டார்தான். அவ்வாறு அழைக்கப்பெற்றது சந்தேகத்திற்கு இடமானது என்றும், வேறு ஒரு புனிதமான எழுத்திற்கு ”பிராமி” என்ற பெயர் சூட்டப்பட்டு இருக்கலாம் என்றும் டி.பி. வர்மா கருதியுள்ளார்.

அசோகன் கல்வெட்டுகள் நிலையே அவ்வாறு இருக்கும்போது தென் இந்திய பண்டைக் கல்வெட்டுகள் ”தென்னிந்திய பிராமியிலே” எழுதப் பெற்றுள்ளன என்பதும், தமிழ்நாட்டுப் பண்டைய கல்வெட்டுகள் ”தமிழ் பிராமியில்” எழுதப்பட்டிருக்கின்றன என்பதும் ஏற்றுக் கொள்ள இயலாதவை.

தமிழ் எழுத்துப் பிராகிருத மொழியில் ”தாமிழி” என்று குறிக்கப்பட்டுள்ளது. தரங்கம்பாடி ஆங்கிலமொழி பேசுவோரால் ”ட்ராங்குபார்” என்றழைப்பதுபோல், தமிழ்மொழி பேசும் நாம் தமிழ் எழுத்து என்றுதான் குறிப்பிடுதல் வேண்டும். இந்தியாவின் முதன்மைக் கல்வெட்டு ஆய்வாளராக இருந்த கே.ஜி. கிருஷ்ணன் தமிழ் எழுத்து என்றே கூறிவந்தார்.

Friday, October 3, 2014

தமிழர் உணவு - பக்தவத்சல பாரதி - காலச்சுவடு பதிப்பகம்

தமிழர் உணவு - பக்தவத்சல பாரதி - காலச்சுவடு பதிப்பகம்


தமிழர் உணவு, பக்தவத்சல பாரதி, காலச்சுவடு பதிப்பகம், நகார்கோவில், பக்கங்கள் 415, விலை 250ரூ

பரபரப்பான இன்றைய வாழ்க்கை முறையில் உணவைப் பசிக்காகவோ, ருசிக்காகவோ உண்பது என்ற நிலை மாறிவிட்டது. அன்றாட நாளில் அதுவும் ஒரு கடமையாகவே கழிகிறது. தமிழர் உணவு பாரம்பரியம் மிக்கது. உண்டால் அம்ம இவ்வுலகம் என்ற புறநானூற்றுப் பாடலானது இந்நாட்டின் அடிப்படை தத்துவமான அன்னம் பகு குர்வீத என்ற தார்மீக வழியில் உருவாக்கிய உணவை பகுத்துண்டு ஆரோக்கிய வாழ்வு வாழ்ந்து சிறந்த நெறியை அடைய வேண்டும் என்ற கருத்தைப் இன்றைய தலைமுறையினருக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் தமிழர்களின் உணவு முறைகளை நூலாகத் தொகுத்துள்ளார் பக்தவத்சல பாரதி. இந்த நூல் வித்தியாசமான நூல்.  தமிழக மக்களின் அர்த்தமுள்ள உணவு ரசனைகள் இக்கட்டுரைகளில் இடம் பெற்றிருக்கின்றன.

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர் இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகச் சமூகவியல் துறையில் கல்விசார் பணியில் இருப்பவர் என்பதால், பல்வேறு தலைப்புகளில் தமிழர் உணவு குறித்த கட்டுஐரகளைத் தொகுத்து, நம் பண்பாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

உணவு என்பது சமூகம் சார்ந்தது. உணவும் சமூகமும் அல்லது உணவும் பண்பாடும் என்பவை நாணயத்தின் இரு பக்கங்கள் போல என்ற ஆசிரியர் கருத்து உண்மையானது. தம் குலத்தில் குறியாக உள்ள விலங்கை உண்ணுதல் விலக்களிக்கப்பட்டதைக் கூறும் ஆசிரியர் பசுவைக் கொல்லுவதும் இந்த விலக்களிக்கப்பட்ட நடைமுறையாகும்.

ஈழத்தின் உணவு, புலம்பெயர்ந்தோர் உணவு, இஸ்லாமிய உணவு, செட்டிநாட்டு உணவு, முதலிய 35 கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. கிராமத்தில் கள்ளும் ஒரு உணவாகவே பார்க்கப்படுகிறது. பனங்கள், தென்னங்கள், தவிர ஈச்சமரம், வேப்பமரம், அரசமரம், சப்பாத்திக் கள்ளியிலும் கள் ஊறும்.

ஐப்பசி அடைமழைக் காலத்தில்மரவள்ளிக் கிழங்கு எப்படி அரிசி தட்டுப்பாட்டைப் போக்கும் உணவாக இருந்தது என சோலை சுந்தரப் பெருமாள் கட்டுரையில் காணலாம்.

முல்லை நதி சமையல் பற்றி விளக்கும் செல்லக்குமார், கர்நாடகாவில் இருந்து இங்கு வந்து வாழும் ஒக்கலிக காப்பியக் கவுண்டர்கள் உணவில் காணப்பயறுக்கு (கொள்ளு) முக்கியத்துவம் தருவது படிக்க சுவையான தகவல். யானைக்கு வாழைத் தண்டு. ஆம்பளைக்கு கீரைத் தண்டு. ஏன் என்பதை பழமலய் கட்டுரையில் படித்து ரசிக்கலாம்.

செந்நிற நெல் உடல் உறுதியைத் தரும். பழைய அரிசியில் சமைத்தால் சோறு அதிகமாக இருக்கும் என்று சோழர் கால கல்வெட்டுத் தகவல்கள், ஈழத்து மக்கள் சிலர் கிறிஸ்வராக மதம் மாறிய பின்னும் பரம்பரை வழக்கப்படி சைவ உணவை தொடரும் வழக்கம் சிந்திக்க வைக்கிறது. பச்சைக்கு திரை வாலி தானியச் சோறு சுவையாக இருக்கும் என மேலாண்மை பொன்னுச்சாமி கூறிய தகவல் இன்று பலருக்கு தலையை சுற்றலாம்.

கம்மங்கஞ்சியோடு தயிர் அல்லது மோர் ஊற்றி கலக்கி குடிக்கலாம். வெஞ்சனம் எலுமிச்சை ஊறுகாய் அல்லது ஊறப்போட்ட மிளகாய் சும்மா கபகபவெனப் போகும் என்பது நாவில் நீர் சுரக்க வைக்கும் தகவல். தெலுங்கு ஆட்சி வந்த பின் கார இனிப்பு வகைகள் கடலை மாவுத் தயாரிப்பில் தமிழகத்தில் கால் பதித்தன. ஆங்கிலேயர் கொண்டு வந்தது ரொட்டி, பிஸ்கட், பாயா, குஸ்கா உருதுபேசிய முஸ்லிம் வருகையின் அடையாளம்.

தவிரவும் கீரை வறுமையின் அடையாளம் என்பதால் நாட்டார் கோவில்களிலும், சொத்துடைமைக் கோவில்களிலும் கீரை தெய்வ உணவுப் பட்டியலில் இல்லை. இது தவிர சில சாதிகளில் காணப்படும் உணவு முறைகள் பரத்தையர் வீட்டில் இருந்த பிராமணன் உணவு முறை. பரோட்டா வந்தது எப்போது என பல்வேறு தகவல்களும் நூலை வரிவிடாமல் படிக்கத் தூண்டும்

வேகமாக மாறி வரும் உலகப் பொருளாதார சூழ்நிலையால் தமிழர்கள் தங்களது உணவுப் பண்பாட்டை அறிய இந்த நூல் உதவிடும். கருத்து வேறுபாடுகள் அதிகம் எழாவண்ணம் நூலைத் தொகுத்து வெளியிட்டவிதம் சிறப்பானது. ஐந்தாண்டு கால முயற்சி, உழைப்பால் ஆசிரியர் இந்த நூலை நேர்த்தியாகப் படைத்திருப்பது பாராட்டுக்குரியது.

வேப்பங்கள் மருந்தாகப் பயன்படுகிறது என்பன போன்ற புதிய தகவல்களும் பரிமாறப்பட்டுள்ளன. வீட்டுத் தோட்டத்து காய்கறி சமையலும் இருக்றிது. முனியாண்டி விலாஸும் இடம்பிடித்துள்ளது. சாப்பிடும் இலை தொடங்கி சைவ, அசைவ உணவுகள், புளித்த மோர், நிலாச்சோறு, வெற்றிலை வரை அனைத்தின் பண்புகளும் விரிவாக அலசப்பட்டுள்ளன.

அமெரிக்க உணவு வகைகளும், இத்தாலி ரக உணவும், முகலாய உணவும் நம்மைப் புரட்டிப் போடும் இக்காலத்தில் தமிழக மக்களின் அர்த்தமுள்ள உணவு ரசனைகள் இக்கட்டுரைகளில் இடம் பெற்றிருக்கின்றன. படிக்க படிக்க நாவில் எச்சில் ஊற வைக்கும் நூல்.

தமிழ்த் திண்ணைப் பள்ளிகளில் கணிதக் கல்வி த.செந்தில் பாபு. கீற்று.


தமிழ்த் திண்ணைப் பள்ளிகளில் கணிதக் கல்வி  த.செந்தில் பாபு. கீற்று. 16 செப்டம்பர் 2011


Ancient Vedic School (Gurkul Type) in Tamil Nadu

காலனி ஆதிக்கத்திற்கு முன்பு பரவலாக இருந்த பாரம்பரியப் பள்ளிகளில் கணிதம் எவ்வாறு கற்பிக்கப்பட்டது என்பது குறித்து மிக சொற்பமான தகவல்களே உள்ளன. 18-19 நூற்றாண்டுகளில் தமிழகப் பகுதியில் திண்ணைப் பள்ளிகள் என அறியப்பட்ட கல்வி நிறுவனங்களில் கணக்கு எவ்வாறு பயிற்றுவிக்கப்பட்டது என்பதே இந்தக் கட்டுரையின் சாராம்சம். நம் அனைவருக்கும் தெரிந்த நவீனக் கணிதக் கல்வியின் சிக்கலான வரலாற்றை முறையாகப் புரிந்து கொள்ளப் பாரம்பரியக் கல்வியில் கணிதத்தின் இடம் குறித்த வரலாற்றுப் புரிதல் தேவைப்படுகிறது.

பொதுவாகவே நமது பாரம்பரியக் கல்வி முறையைக் காலனியமும் நவீனமும் அழிதொழித்துவிட்டது என்ற தேசீய வாதவரையறையைத் தாண்டி, பிராந்திய அளவிலான சிக்கல்கள் நிறைந்த வரலாற்றை மறுகட்டமைக்க வேண்டிய தேவை இன்று உள்ளது. திண்ணைப் பள்ளிகளில் பயின்ற கல்வியின் அடித்தளம், மனப்பாடத்தின் அடிப்படையில் தான். ஆனால், இந்த மனப்பாடம் நமக்கு அர்த்தத்தில் பழகிப்போன, நவீன காலத்தில் நல்ல கல்விக்கு மாறாகக் கணிக்கப்படும் இயந்திரத்தனமான; புரிந்து படித்தல் என்பதற்கு மாறான மனப்பாடம் அல்ல. அந்த மனப்பாடத்திற்கு இடம், அர்த்தம், முறை, நோக்கம் முற்றிலும் வேறானது. எப்படிக் காலனிய நவீனம் அந்தக் கல்விமுறையைத் தவறாகப் புரிந்துகொண்டு, நிறுவன ரீதியான தலையீடுகளினால் திண்ணைக் கல்வியை எதிர் கொண்டு 19ஆம் நூற்றாண்டு முழுக்கத் திக்குமுக்காடியது என்பது தனிக் கதை.

இந்தக் கட்டுரையைப் பொறுத்த வரையில், திண்ணைப் பள்ளிக் கல்வியில், கணிதப் பயிற்சி சார்ந்த மனப்பாடக் கல்வி எப்படி மையமாக இருந்தது என்பதை விவரிப்பதே ஆகும். உழைப்பு, சாதி அடிப்படையில் பிரிக்கப்பட்டிருந்த ஒரு விவசாய - வர்த்தக சமூக அமைப்பில் உருவான ஒரு பாடத்திட்டத்தில் திறனும் பயனும் எப்படி தகவமைக்கப்பட்டது? திறனையும் பயனையும் மையமாகக் கொண்டிருந்த ஒரு உள்ளூர் சார்ந்த நிறுவனக் கல்விக்கு மனப்பாடமும் மனப் பயிற்சியும் எப்படி உகந்த முறைகளாக அமைந்தன என்பதை ஆராய்வது இதன் நோக்கம்.

Wednesday, September 24, 2014

தமிழ்ச் சமணம் !: தமிழ்ச் சமணர்களின் தமிழ்த் தொண்டு! இரா.பானுகுமார்

தமிழ்ச் சமணம் !: தமிழ்ச் சமணர்களின் தமிழ்த் தொண்டு!: சமணரின் தமிழ் தொண்டு! தமிழ்ச் சமணரின் தமிழ்த் தொண்டு மிக சிறப்புடைத்து. பன்முகப்பட்டது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை, தமிழ் மீது சமணர்கள் சைனர்கள்) காட்டிய அக்கறை மிக பெரியது. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழில் கொண்டு வந்தார்கள். தமிழ்ச் சமணர்கள் தொடாத இலக்கிய வகைகளே இல்லை எனலாம். ... சமணர்கள் அருளிய தமிழ் இலக்கியங்கள் : ஆசிரியர் தமிழ் இலக்கியம், இலக்கணம், நீதி நூல்கள், இசை, நடனம், நாடகம், கணிதம் போன்ற தலைப்புகளில் மிக நீண்ட பட்டியலைத் தருகிறார்