Tuesday, September 23, 2014

பழந்தமிழரும், கூத்துக்கலையும்! இல. கணபதிமுருகன் தமிழ்மணி (தினமணி)



தமிழ்மணி (தினமணி) 10.8.08 

https://groups.google.com/forum/#!msg/mintamil/5J1VAiwLT6Y/C0wkEjn6jZcJ

தமிழினம் பிறப்பு முதல் இறப்பு வரை இசையோடு ஒன்றிய வாழ்வைக் கொண்டிருந்த பெருமைக்குரியதாகும். பண்டைத் தமிழ் நூல்களான
  • அகத்தியம்,
  • செயிற்றியம்,
  • சயந்தம்,
  • குணநூல்
போன்ற நூல்களில் தமிழ்க் கூத்து வகைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
இசையும், கூத்தும், பிரிக்க இயலாத வகையில் பின்னிப் பிணைந்தே மக்களை மகிழ்வித்து வருவதாகக் கூறலாம்.
இசை, ஆட்டம், தாளம் ஆகிய மூன்றும் சேர்ந்ததன் தொகுப்பே "கூத்து" எனலாம். பொதுவாக சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு கூத்தினை,
  • வேந்தியல் (மன்னர்களுக்காக ஆடுவது)
  • பொதுவியல் (பொது மக்களுக்காக ஆடுவது)
என இருவகைப்படுத்தலாம். 

சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக்காதை "அவிநயம்" பற்றி விளக்குகிறது. பெண்கள் ஐந்து வயதிலிருந்து பன்னிரெண்டு வயதுவரை (7ஆண்டுகள்) பரதநாட்டியம் கற்றனர். பாடலின் பொருளை முகபாவம், அங்க அசைவுகள் போன்றவற்றின் வாயிலாக விளக்குவதே நடனம் (அ) கூத்து என வரலாற்று ஆய்வாளரான என்.சுப்பிரமணியன் விளக்கம் தருகிறார். 

கூத்துக் கலைஞர்களும், கூத்தநூல்களும்:
நடனமாடும் ஆண்மகன்
  • கூத்தன்,
  • ஆடுமகன்,
  • ஆடுகளமகன்
எனப்பட்டான்.
நடமாடும் பெண்மகள்
  • நடனமகள்,
  • விறலி,
  • கூத்தி,
  • ஆடுமகள்,
  • ஆடுகளமகள்
எனப்பட்டாள்.
இவர்கள் நடனமாடிய அரங்கம் "ஆடுகளம்" எனப்பட்டது.
  • வீரம்,
  • அச்சம்,
  • இழிவு,
  • வியப்பு,
  • இன்பம்,
  • துன்பம்,
  • நகை,
  • நடுவுநிலை,
  • வெகுளி
என்னும் ஒன்பது சுவைகள் நடனத்துக்குரியவையாகக் கருதப்பட்டன. "சந்திக்கூத்து" எனப்படும் கூத்தை ஆடியவர்கள் "கண்ணுளர்" எனப்பட்டனர்.
  • பரதம்,
  • பரதசேனாபதியம்,
  • குணநூல்,
  • முறுவல்,
  • சயந்தம்,
  • கூத்தநூல்,
  • இந்திரகாளியம்,
  • செயிற்றியம்,
  • இசை நுணுக்கம்,
  • அகத்தியம்,
  • மதிவாணனார் நாடகத்தமிழ்,
  • பஞ்சமரபு
போன்றவற்றை சங்க காலத்தில் இருந்த கூத்த நூல்களாக வகைப்படுத்தலாம்.
கூத்துக்கலை பற்றிய ஆதாரங்கள்:
 
கல்வெட்டு ஆய்வாளரான என்.ராமசந்திரன் 1962ல் அங்கல்லூர் (நல்லமலை) என்ற இடத்தில் கண்டறிந்த கல்வெட்டானது தொல்தமிழரின் நடனம் பற்றி விளக்குகிறது. இதன் காலம் கி.பி.3ம் நூற்றாண்டு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் நடனக் குறியீடுகள் "சமணத்துறவி" ஒருவரால் பொறிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

கி.பி.7ம் நூற்றாண்டில் வரையப்பெற்ற "சித்தன்ன வாசல் ஓவியங்கள்" வாயிலாக பல்லவர் நடனக்கலையின் சிறப்பம்சத்தினை உணரலாம். இங்குள்ள பரதநாட்டிய அபிநயங்களில் "ஹஸ்த அபிநயச் சிற்பம்" குறிப்பிடத் தக்கதாகும். 

இராஜராஜசோழன் 108 பரதநாட்டிய கரணங்களை, பிரகதீஸ்வரர் ஆலயத்தின் உச்சியில் வரையுமாறு செய்ததில் இருந்து அம் மன்னனுக்கு நாட்டியத்தின் மீது கொண்ட ஈடுபாடு விளங்கும். 

கூத்துக்கலையும் தேவதாசிகளும்:
 
இந்தியாவில் கோயில்களில் தெய்வப்பணி புரிவதற்காக ஆண்டவர்க்கு அணங்குகளை அர்ப்பணிக்கும் வழக்கம் எப்போது தொடங்கியது என்பதை வரையறுத்துக்கூற இயலாது. ஆனால், தமிழகத்தில் தேவதாசி முறையைப் புகுத்தியவர்கள் "சோழர்கள்" என்பர்.
"பொட்டுக்கட்டுதல்" என்னும் வழக்கத்தின் வாயிலாக கோயிலுக்கு பெண்கள் (தேவரடியார்கள்) காணிக்கை ஆக்கப்பட்டனர். பெரும்பாலும் 14 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பொட்டுக்கட்டுதல் என்னும் சடங்கு ஏறக்குறைய திருமண நிகழ்ச்சி போலவே ஏற்பாடு செய்யப்பட்டு, கோயிலில் சேர்க்கப்பட்டனர். 

"பொட்டுத்தாலி" என்னும் ஒருவகை மங்கலநாண் அணிவித்து பெண்கள் கோயிலில் பணிசெய்ய அமர்த்தப்பட்டனர். பொட்டுத்தாலியை கோயிலின் இறைவனுக்குப் பதிலாக கோயில் அந்தணர்(அ) பூசாரியே நேர்ந்து விடப்பட்ட பெண்ணுக்குக் கட்டினார். இச் சடங்குக்குப்பின் குறிப்பிட்ட பெண் கோயிலுக்கு சொந்தமானவளாக கருதப்பட்டாள். இல்வாழ்க்கையில் ஈடுபட அவர்களுக்கு அனுமதி இல்லை. 

கோயிலுக்கு பொட்டுக்கட்டிவிடும் இவ்வழக்கம் சிரியா நாட்டு "ஹேலியோ போலிஷ்" மற்றும் அர்மீனியா, மேற்கு சிற்றாசியாவில் உள்ள லிடியா மற்றும் கிரேக்க நாட்டின் கோசின்னித் (Cuzinith) என்ற நகரிலும் நிலை கொண்டிருந்தது. மெசபடோமியாவிலும் இதே முறை பின்பற்றப்பட்டு வந்தது. "மர்துக்" மற்றும் "ஷமஷ்" போன்ற கடவுளர்களுக்கு அங்குள்ள மகளிர் மணம் செய்து வைக்கப்பட்டனர். (மேலும் பார்க்க - http://www.kamat.com/kalranga/women/devadasi.htm)
கோயிலில் நடமாடுதல் மட்டுமல்லாது, கோயிலில்
  • திருவலகிடுதல்,
  • திருமெழுகிடுதல்,
  • படையல் அரிசியைத் தூய்மைப்படுத்துதல்,
திருப்பதிகம் பாடல் போன்ற பணிகளையும் தேவரடியார் செய்துவந்தனர்.
பல்லவர்கள் காலத்தில் தேவதாசிகள்
  • விற்கிருதை,
  • பிரத்தியை,
  • பக்தை,
  • கிருதை,
  • அலங்கரி,
  • ருத்திரகணிகை,
  • கோபிகை
என ஏழு வகைப் பிரிவினராக இருந்தனர்.
தேவரடியர்(அ) தேவதாசிகள் திருநீறுத்தட்டும், புஷ்பத்தளிகை போன்றவற்றை விழாக்காலங்களில் எடுத்துச்செல்வர். அம்மன் மற்றும் சுவாமிக்கு இவர்கள் "கவரி" வீசவும் செய்ததால் "கவரிப்பிணா" என்றும் அழைக்கப்பட்டனர்.
  • சிவன் கோயிலில் பணி செய்து வந்தவர்கள் ரிஷபத்தளியலார் என்றும்,
  • வைணவக் கோயில்களில் இருந்தவர்கள் ஸ்ரீவைஷ்ணவ மாணிக்கம்
எனவும் அழைக்கப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. 

முதலாம் இராசராசன், தஞ்சைப் பெரிய கோயிலின் இறை பணிக்காகவும், இசை நடனத்தை வளர்க்கவும் ஆடல், பாடல்களில் வல்ல 400 பெண்கள் வரவழைத்தான். அவர்கள் தளிச்சேரிப் பெண்டுகள்(தளி - கோயில்) எனப்பட்டனர். அவர்கள் தங்கியிருந்த இடம் "தளிச்சேரி" எனப்பட்டது. 

முதலாம் இராசராசனால் குடியமர்த்தப்பட்ட பெண்டுகள் அனைவரும் சோழர் பழந் தலைநகரமான "பழையாறையின்" வடதளி, தென்தளி எனப்படும் சிவாலயங்களைச் சேர்ந்தவர்களாவர். முதலாம் இராசேந்திரன் கங்கை கொண்ட சோழபுரக்கோயிலைச் சேர்ந்த 24 தேவதாசிகளுக்கு நிலமும், பொன்னும் கொடையாக அளிக்கப்பட்ட செய்தியை "குளம்பந்தல் கல்வெட்டு" வாயிலாக அறியலாம்.
  • தலைக்கோலி,
  • காவிதிகானை பேராள்,
  • காவிதிதாங்கி
போன்ற பட்டங்கள் தேவரடியார்களுக்கு வழங்கப்பட்டன. "தலைக்கோல்" என்பது ஏழுசாண் நீளத்தில் மூங்கிலால் ஆனதாகும். கணுக்கள் தோறும் மணிகள் பதிக்கப்பட்டு இடையிடையே "பொன்கட்டு" இடப்பட்டிருந்தது.
இந்திர விழாவின்போது தலைக்கோலுக்குப் பூசை நடத்தப்பட்டு ஆடல் மகளிருக்கு இக்கோல் வழங்கப்பட்டது. இக்கோலைப் பெற்றவள், "தலைக்கோலி" எனவும், நட்டுவன் "தலைக்கோலாசான்" எனவும் பாடல் பாடியோர் "தோரியமடந்தை" என்றும் அறியப்பட்டனர். 

தேவரடியார்களில் சிலர் அறப்பணியும் மேற்கொண்டனர் என்பதற்கு ஆதாரமாக, சடையவர்மன் வீரபாண்டியன் (13ம் நூற்றாண்டு) ஆட்சி காலத்தில் தேவரடியார்களில் ஒருத்தியான துக்கையாண்டி மகள் நாச்சி குடுமியான்மலை குடைவரையின் தெற்குப் பக்கத்தில் உள்ள "சவுந்திரநாயகி அம்மன்" கோயிலைக் கட்டியிருக்கிறாள் என அறியப்படுகிறது. 

கோயில் கலைப்பணிக்காக நியமிக்கப்பட்ட தேவரடியார்கள் அமைப்புகாலப்போக்கில் மாறுதல் அடைந்தது. அம்முறை பின் ஒழிக்கப்பட்டது. 

தமிழ்க் கூத்துக்கலையிலிருந்து பிரிந்து உருவான பரதம் இன்றளவிலும் ஓரளவு சிறப்புப் பெற்றிருப்பினும் பிற கூத்து நடனங்கள் ஆதரவின்றி அழியக்கூடிய தருவாயில் உள்ளன என்பது மறுக்க இயலாத உண்மையாகும்.
நலிந்து வரும் கூத்துக் கலைஞர்களுக்கு ஆதரவளித்து, கூத்துக்கலையை காப்பதன் வாயிலாகவே தமிழர் பண்பாட்டை உலக அரங்கில் மிளிரச்செய்ய இயலும்.
இல. கணபதிமுருகன்
நன்றி: தமிழ்மணி (தினமணி)
- - - - - - - - - - - - - - - -  - - - - - -  - -  - - - - - - - - - - - - -  - - - - - - - -  - - - - - - - -
"தமிழ்மணி" பகுதியில் 10.8.08 அன்று வெளியான கணபதிமுருகன் எழுதிய "பழந்தமிழரும் கூத்துக்கலையும்" என்ற கட்டுரையில் சில பிழைகள் காணப்படுகின்றன. 

"சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை "அபிநயம்" பற்றி விளக்குகிறது" என்று எழுதியுள்ளார். அரங்கேற்று காதையில் "அபிநயம்" என்ற சொல்லே கையாளப்படவில்லை. "அவிநயம்" என்ற சொல் சிலப்பதிகாரத்தில் ஒரே ஒருமுறை எடுத்தாளப்படுகிறது. அவிநயம் பற்றிப் பேசியிருப்பவர் அடியார்க்குநல்லார்.
"பாடலின் பொருளை முக பாவம், அங்க அசைவுகள் போன்றவற்றின் வாயிலாக விளக்குவதே நாடகம் (அ) கூத்து" என்று வரலாற்று ஆய்வாளரான என்.சுப்பிரமணியன் விளக்கம் தந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அரங்கேற்று காதைக்கான உரையில் அடியார்க்குநல்லார் குறிப்பிடும் "சொக்கம்" எனும் ஆடல்வகை, பாடலுடன் தொடர்புடையதன்று.

  • பாடலின் பொருளை அங்கங்களின் வழி விளக்கும் ஆடல் "அவிநயக் கூத்து."
  • கதை தழுவி வரும் கூத்தே "நாடகம்."
கி.பி.7ம் நூற்றாண்டில் வரையப்பெற்ற "சித்தன்னவாசல் ஓவியங்கள்" வாயிலாக பல்லவர் நடனக்கலையின் சிறப்பம்சத்தை உணரலாம். இங்குள்ள பரதநாட்டிய அபிநயங்களில் "ஹஸ்த அபிநயச் சிற்பம்" குறிப்பிடத்தக்கது என்கிற கூற்றும் சரியன்று. 
 
சித்தன்னவாசல் ஓவியங்கள் பாண்டியர் காலத்தவை என்பதும் கி.பி.9ம் நூற்றாண்டில் நிகழ்ந்த மதுரை இளங்கெளதமனின் திருப்பணியின்போது வரையப்பட்டவை என்பதும் கல்வெட்டு சான்றுடன் நிறுவப்பட்டுள்ளது. "ஹஸ்த அபிநயச் சிற்பம்" இக்குடைவரையில் எங்கும் இல்லை. ஓவியங்களிலுள்ள இடுப்பளவிலான இரண்டு பெண்களின் ஆடல் தோற்றங்கள் பரதநாட்டிய அவிநயங்கள் இல்லை. பரதநாட்டிய அவிநயங்களில் "ஹஸ்த அபிநயம்" என்ற சொல்லாட்சி இல்லை. முத்திரைகளே உள்ளன. 

"இராஜராஜ சோழன் 108 பரதநாட்டிய கரணங்களை, பிரகதீஸ்வரர் ஆலயத்தின் உச்சியில் வரையுமாறு செய்ததில் இருந்து அந்த சோழ மன்னனுக்கு நாட்டியத்தின்மீது கொண்ட ஈடுபாடு விளங்கும்" என்று குறிப்பிட்டிருக்கிறார் கட்டுரையாளர். ஆனால், தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தில் (பிரகதீசுவரர் என்ற பெயர் கோயில் கல்வெட்டுகளில் இடம்பெறவில்லை) காணப்படும் கரணங்கள் பரதநாட்டியக் கரணங்கள் அன்று. அவை நாட்டிய சாத்திரத்தில் சொல்லப்பட்டிருக்கும் அங்ககாரங்களின் கூறுகள். இராஜராஜர் அவற்றை வரையவில்லை. சிற்பிகளைக்கொண்டு சிற்பங்களாகச் செதுக்கியிருக்கிறார். 108 கரணங்களும் செதுக்கப்படவில்லை. 81 கரணங்களே வடிவம் பெற்றுள்ளன. அவையும் ஆலய உச்சியில் இடம்பெறவில்லை. இரண்டாம் தளச் சாந்தார நாழியில் இடம்பெற்றுள்ளன.
"தமிழகத்தில் தேவதாசி முறையைப் புகுத்தியவர்கள் சோழர்கள்" என்பர் என்ற கட்டுரையாளரின் கருத்து முழுமையும் தவறான கூற்று. பல்லவர் காலத்திலேயே தளிக்கூத்திகள் இருந்துள்ளனர். இதற்கு இரண்டு கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. 
 
"முதலாம் இராசராசனால் குடியமர்த்தப்பட்ட பெண்டுகள் அனைவரும் சோழர் பழந் தலைநகரமான "பழையாறையின்" வடதளி, தென்தளி எனப்படும் சிவாலயங்களைச் சேர்ந்தவர்களாவர்' என்பதும் முற்றிலும் தவறான கூற்று. இராஜராஜேசுவரத்திற்குக் குடியேறிய 400 ஆடற்பெண்களும் சோழ மண்டலத்தின் 102 தளிச்சேரிகளிலிருந்து வந்தவர்கள். 
 
"தலைக்கோலி, காவிதி கானை பேராள், காவிதி தாங்கி போன்ற பட்டங்கள் தேவரடியார்களுக்கு வழங்கப்பட்டன" என்கிறார் கட்டுரையாளர். எந்தக் கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையில் இத்தரவுகள் கொள்ளப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. ஏனெனில் "காவிதி" எனும் சொல் கணக்கரைக் குறிக்கும் சொல்லாகவே கல்வெட்டுகளில் ஆளப்பட்டுள்ளது. 
 
"இந்திரவிழாவின் போது தலைக்கோலுக்குப் பூசை நடத்தப்பட்டு ஆடல் மகளிருக்கு இக்கோல் வழங்கப்பட்டது" என்பதும் சரியான கருத்தல்ல. இந்திரவிழாவின்போது தலைக்கோல் சிறப்பிக்கப்பட்டது. ஆனால் ஆடல் மகளிருக்கு வழங்கப்படவில்லை. தலைக்கோலிப் பட்டம் மட்டுமே வழங்கப்பட்டது.
"தமிழ்க்கூத்துக் கலையிலிருந்து பிரிந்து உருவான பரதம்" எனும் கூற்றுக்கு அடிப்படைச் சான்றுகள் ஏதும் கட்டுரையாளரால் முன்வைக்கப்படவில்லை.
இதுபோல பல முரண்பாடுகள் இக்கட்டுரையில் உள்ளதால், இதையெல்லாம் கட்டுரையாளர் கவனத்தில் கொண்டு, இனி மேற்கொள்ளும் ஆய்வுகளைத் தக்கச் சான்றுகளுடன் குறிப்பிட்டுக் காட்டி விளக்கினால், வரலாற்று ஆய்வுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

முனைவர் இரா. கலைக்கோவன்,
இயக்குநர்,
மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம்,
திருச்சி.
நன்றி: தமிழ்மணி (தினமணி)

No comments:

Post a Comment