Showing posts with label Brahmin. Show all posts
Showing posts with label Brahmin. Show all posts

Friday, October 3, 2014

தமிழ்த் திண்ணைப் பள்ளிகளில் கணிதக் கல்வி த.செந்தில் பாபு. கீற்று.


தமிழ்த் திண்ணைப் பள்ளிகளில் கணிதக் கல்வி  த.செந்தில் பாபு. கீற்று. 16 செப்டம்பர் 2011


Ancient Vedic School (Gurkul Type) in Tamil Nadu

காலனி ஆதிக்கத்திற்கு முன்பு பரவலாக இருந்த பாரம்பரியப் பள்ளிகளில் கணிதம் எவ்வாறு கற்பிக்கப்பட்டது என்பது குறித்து மிக சொற்பமான தகவல்களே உள்ளன. 18-19 நூற்றாண்டுகளில் தமிழகப் பகுதியில் திண்ணைப் பள்ளிகள் என அறியப்பட்ட கல்வி நிறுவனங்களில் கணக்கு எவ்வாறு பயிற்றுவிக்கப்பட்டது என்பதே இந்தக் கட்டுரையின் சாராம்சம். நம் அனைவருக்கும் தெரிந்த நவீனக் கணிதக் கல்வியின் சிக்கலான வரலாற்றை முறையாகப் புரிந்து கொள்ளப் பாரம்பரியக் கல்வியில் கணிதத்தின் இடம் குறித்த வரலாற்றுப் புரிதல் தேவைப்படுகிறது.

பொதுவாகவே நமது பாரம்பரியக் கல்வி முறையைக் காலனியமும் நவீனமும் அழிதொழித்துவிட்டது என்ற தேசீய வாதவரையறையைத் தாண்டி, பிராந்திய அளவிலான சிக்கல்கள் நிறைந்த வரலாற்றை மறுகட்டமைக்க வேண்டிய தேவை இன்று உள்ளது. திண்ணைப் பள்ளிகளில் பயின்ற கல்வியின் அடித்தளம், மனப்பாடத்தின் அடிப்படையில் தான். ஆனால், இந்த மனப்பாடம் நமக்கு அர்த்தத்தில் பழகிப்போன, நவீன காலத்தில் நல்ல கல்விக்கு மாறாகக் கணிக்கப்படும் இயந்திரத்தனமான; புரிந்து படித்தல் என்பதற்கு மாறான மனப்பாடம் அல்ல. அந்த மனப்பாடத்திற்கு இடம், அர்த்தம், முறை, நோக்கம் முற்றிலும் வேறானது. எப்படிக் காலனிய நவீனம் அந்தக் கல்விமுறையைத் தவறாகப் புரிந்துகொண்டு, நிறுவன ரீதியான தலையீடுகளினால் திண்ணைக் கல்வியை எதிர் கொண்டு 19ஆம் நூற்றாண்டு முழுக்கத் திக்குமுக்காடியது என்பது தனிக் கதை.

இந்தக் கட்டுரையைப் பொறுத்த வரையில், திண்ணைப் பள்ளிக் கல்வியில், கணிதப் பயிற்சி சார்ந்த மனப்பாடக் கல்வி எப்படி மையமாக இருந்தது என்பதை விவரிப்பதே ஆகும். உழைப்பு, சாதி அடிப்படையில் பிரிக்கப்பட்டிருந்த ஒரு விவசாய - வர்த்தக சமூக அமைப்பில் உருவான ஒரு பாடத்திட்டத்தில் திறனும் பயனும் எப்படி தகவமைக்கப்பட்டது? திறனையும் பயனையும் மையமாகக் கொண்டிருந்த ஒரு உள்ளூர் சார்ந்த நிறுவனக் கல்விக்கு மனப்பாடமும் மனப் பயிற்சியும் எப்படி உகந்த முறைகளாக அமைந்தன என்பதை ஆராய்வது இதன் நோக்கம்.