Showing posts with label Big Temple. Show all posts
Showing posts with label Big Temple. Show all posts

Thursday, October 16, 2014

தஞ்சைப் பெரியகோவிலும் தேவதாசி மரபும். வெளி ரங்கராஜன்

தஞ்சைப் பெரியகோவிலும் தேவதாசி மரபும்.  வெளி ரங்கராஜன்

Picture Courtesy: Celeste - Artwork - Devadasi
சங்க காலம் தொடங்கி நம்முடைய வரலாறெங்கும் குடும்ப அமைப்பைத் தாண்டி பொது வெளிக்கு வந்த பரத்தையர், விறலியர், ஆடல் பெண்கள், தேவதாசியர் ஆகியோரின் வாழ்வியலும், ஒழுக்கமும் ஆண் மைய ஒழுக்கவியல் பார்வைகளால் கடும் விவாதத்துக்கும், சிக்கலுக்கும் உள்ளாகி இருப்பதை நாம் பார்க்க முடியும். கல்வி, கலைத்தேர்ச்சி, புலமை ஆகிய வாழ்வியல் செறிவுக்கான தகுதிகள் இருந்த நிலையிலும், அவர்கள் தொடர்ந்து இழிவுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையே நம்முடைய கலாச்சார மரபாக உள்ளது. தமிழ்ச் சமூகத்தின் இத்தகைய மனஇயலை நாம் மீண்டும் மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. ஏனென்றால் இது ஆண், பெண் உறவுநிலைகள் குறித்த சமூகத்தின் நுண்ணுணர்வு சார்ந்த விஷயமாக இன்று உள்ளது.

தலித்துகள், அரவாணிகள் போன்ற விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் குறித்த கவனங்களும் பதிவுகளும் பெருகி வரும் நிலையில் ஆணியச் சமூகத்தின் சுரண்டல் கருவிகளாக ஆக்கப்பட்டிருந்த பரிதாபத்திற்குரிய தேவதாசியரின் சுயவாழ்க்கை குறித்த பதிவுகளும் நிலைப்பாடுகளும் அவர்களுடைய வாழ்வியல் பற்றிய மேலான புரிதலுக்கு உதவ முடியும். தேவதாசி மரபில் வந்தவரும், கலைத்திறமையும், புலமையும் கொண்டவருமான பெங்களூர் நாகரத்தினம்மா தன்னுடைய சுயசரிதையை கன்னடத்தில் எழுதியிருக்கிறார். அண்மையில் அரவாணித் தோழியரான லிவிங் ஸ்மைல் வித்யா ‘என் பெயர் வித்யா’ என்று எழுதிய சுயசரிதை சில கல்லூரிகளில் துணைப்பாடமாக வைக்கப்பட்டுள்ளது. நம்முடைய சமூகத்தின் ஒழுக்கவியல் கண்ணோட்டத்தை தேவதாசியர் பார்வையிலிருந்து பரிசீலனை செய்யும் போதே கற்பொழுக்கம் குறித்த ஆணிய இரட்டை அளவுகோல்கள் புலப்படும்.